search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.விடம் எத்தனை தொகுதி கேட்பது? காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை
    X

    தி.மு.க.விடம் எத்தனை தொகுதி கேட்பது? காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை

    • தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    கடந்த தேர்தலில் இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் அதைவிட ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலாக கேட்க வேண்டும். முடியாத பட்சத்தில் 9 தொகுதிகள் குறையாமல் கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளை தி.மு.க. மாற்றி கேட்டால் மாற்று தொகுதிகள் எதை கேட்பது என்பதற்கும் 9 தொகுதிகள் பட்டியலை வழங்கி இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.விலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் இன்று மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அப்போது கே.எஸ்.அழகிரி மற்றும் வார் ரூம் பொறுப்பாளர்கள் செந்தமிழ், சுமதி அன்பரசு, அகரம் கோபி, மீரா, உமா, ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    நாளை (சனி) காலையில் தேர்தல் பணிக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகளை கேட்பது? என்பது பற்றி கருத்து கேட்கிறார்.

    இதன் அடிப்படையில் விரைவில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×