search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என் மண் என் மக்கள்.. பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா
    X

    என் மண் என் மக்கள்.. பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா

    • நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
    • ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும், 'மோடி என்ன செய்தார்?' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

    விழாவில் பாஜக நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    நடைபயண துவக்க விழாவிற்காக புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்கிறார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×