search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிக்கவே அண்ணாமலை நடைபயணம்: அமித் ஷா பேச்சு
    X

    தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிக்கவே அண்ணாமலை நடைபயணம்: அமித் ஷா பேச்சு

    • தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.
    • பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார்.

    ராமேஸ்வரம்:

    மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

    விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். ராமநாத சுவாமி அருளாசியால் நம்முடைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற இந்த நடைபயணமானது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டும் அல்ல. இந்த நடைபயணம் இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். தமிழகத்தின் இந்த கலாச்சாரத்தை பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் ஒரு நடைபயணமாகும்.

    இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே மரியாதையை ஏற்படுத்தும் நடைபயணம். தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம். தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த பயணம் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக செய்யப்படும் நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற ஒரு அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை.

    இன்று தொடங்கி 700 கிமீ 234 தொகுதிகளிலும் நமது மாநில தலைவர் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் நமது பிரதமரின் செய்திகளை கொண்டு செல்லவிருக்கிறார்.

    புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த நடைபயணத்தை நடத்துகிறார்.

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.

    பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார். ஐநா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது நம்முடைய பிரதமர் மோடி. இப்போது ஜி20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கின்றன. அதன் முத்திரை வாசகமான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×