search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது:  அண்ணாமலை
    X

    எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது: அண்ணாமலை

    • இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்
    • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை

    நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.

    அப்போது, "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் இப்படி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.

    தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம் சாட்டுகிறோம். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×