என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மைக், பேனா வைத்திருக்கும் யாரோ எனது ஓய்வை முடிவு செய்ய முடியாது- ரோகித்
- தற்போது நடைபெறும் ஒரு போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன்.
- எப்போது ஓய்வுப்பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.
இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது பேட்டி அளித்த ரோகித் சர்மா,
சிட்னி போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. ஓய்வு தேவைப்பட்டதால் விலகினேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. ஃபார்மில் இல்லாததாலேயே. சிட்னி போட்டியில் இருந்து விலகினேன். மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. நான் எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். பும்ராவின் கேப்டன்ஷிப் பாராட்டத்தக்கதாக சிறப்பாக தான் உள்ளது.
மைக், லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது Dugout-ல் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
முன்னதாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரங்களில் ஆல் அவுட் ஆனது.






