என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் உலகக் கோப்பை 2027: ரோகித், கோலி இடம் பெறுவார்களா? மனம் திறந்த தோனி
- எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
- உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.
அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.
இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து தோனி கூறியதாவது:-
அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.
ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.
அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.






