என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் குவித்தது.
கொழும்பு:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. கேப்டன் லோரா 82 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். லுஸ் 59 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அந்த அணியின் மரிசனி கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
பாகிஸ்தான் வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது.






