என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இது நடந்தால் அடுத்த சீசனின் பாதியிலேயே தோனி விலகிடுவார்- முன்னாள் வீரர் கணிப்பு
- என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.
- அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பா கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்சின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜடேஜா 2012-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசனில் ரூ.18 ேகாடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அணியின் நலனுக்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தோனி துணிந்து விடுவார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முகமது கைப் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்தே தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகிறார்கள். இதில் தோனி சென்னை அணியை விட்டு ஒரு போதும் வெளியேறியதில்லை. சாம்சன், ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனாக இருக்கும். சாம்சன் சி.எஸ்.கே.-வில் இணைந்து தோனி மற்றும் அணி நிர்வாகத்துடனும் எளிதில் பழகி விட்டால் ஒரு வேளை அவரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்து விட்டு பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது.
சி.எஸ்.கே. ஏற்கனவே ஜடேஜாவை கேப்டனாக்கி பார்த்தது. ஆனால் அது தனக்கு சவுகரியமாக இல்லை என கூறி பாதியிலேயே ஜடேஜா ஒதுங்கி விட்டார். இனி, நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரை கொண்டு வருவதையே தோனி விரும்புவார்.
கடந்த முறை சி.எஸ்.கே. அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த தடவை வலிமையாக மீண்டு வந்து மற்றொரு முறை சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய லட்சியமாகும். தொோனிக்கு அணியின் நலன் தான் மிகவும் முக்கியம். எனவே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.
என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார். அவரால் 3, 4, 5 என எந்த பேட்டிங் வரிசைகளிலும் களம் இறங்கி, மிடில் ஓவர்களில் சிக்சர்கள் அடிக்க முடியும். தோனியை போல் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாகவும் செயல்பட முடியும். அது மட்டுமின்றி சாம்சன் தென்இந்தியாவை (கேரளா வீரர்) சேர்ந்தவர் என்பதால் அவருக்கும், சென்னை ரசிகர்களுக்குமான உறவு நன்றாக இருக்கும். அவர் சென்னை அணியின் அடுத்த அடையாளமாக மாறுவார். அதனால் தான் சாம்சனுக்காக சி.எஸ்.கே. இவ்வளவு தீவிரம் காட்டுகிறது. சாம்சன், சி.கே.எஸ்.வுடன் இணைவது உறுதி என்றால், தோனியுடன் அவர் பலமுறை பேசி இருப்பார். திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கும்.
இவ்வாறு கைப் கூறியுள்ளார்.






