search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைய போவது யார்? - இரண்டு வாழ்வா, சாவா போட்டிகள்
    X

    நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைய போவது யார்? - இரண்டு வாழ்வா, சாவா போட்டிகள்

    ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைவதில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. 18 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் 2-வது அணியாக முன்னேறியது. அந்த அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது.

    நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றது.

    பிளேஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்
    (14 புள்ளி), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தானுக்கு போட்டிகள் முடிந்து விட்டது. மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு தலா 1 ஆட்டங்கள் உள்ளன.

    டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. அந்த அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.



    இன்றைய கடைசி நாள் லீக்கில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லி பெரோ சா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8 மணிக்கு புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

    நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் மும்பை அணி வெளியேற்றப்படும்.

    மும்பை வென்று, கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 14 புள்ளியின் சம நிலையில் இருக்கும். அப்படி நிகழும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ராஜஸ்தான், பஞ்சாப்பை ஒப்பிடுகையில் மும்பை ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தினால் அந்த அணி வாய்ப்பை பெறும் சூழ்நிலை உருவாகும்.

    இன்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

    மும்பை வென்று, பஞ்சாப் தோற்றால் ராஜஸ்தான், மும்பை அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேடில் ஒரு அணி தகுதி பெறும். மும்பை தோற்று சென்னை அணியை பஞ்சாப் வீழ்த்தினால் ராஜஸ் தான், பஞ்சாப் அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேட்டில் ஒரு அணி நுழையும்.

    பஞ்சாப்பின் ரன்ரேட் -0.49 ஆக உள்ளது. இதனால் அந்த அணி சென்னைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். சென்னை அணி வலுவானது என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்சை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் உள்ளது.



    மேலும், மும்பை - டெல்லி ஆட்டத்துக்கு பிறகு தான் இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால் அதன் முடிவுக்கு ஏற்றது போல விளையாடலாம். இந்த போட்டித் தொடரில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய பஞ்சாப் பின்னர் தொடர் தோல்வியால் நெருக்கடிக்கு ஆளானது. தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஏற்கனவே வாய்ப்பை இழந்த டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அந்த அணியை வெளியேற்றும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இதனால், இன்றைய இரண்டு போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    Next Story
    ×