என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நிலையானது என்று கூறுகையிலேயே நிலையில்லாத ஒன்று இருப்பது புலப்படுகிறது.
    • மரணத்தை வென்று என்றும் அழிவில்லாத ஞானிகளின் திருவடிகளை வணங்கும் பூஜையும் நிலையானது.

    அதிகாரம்: நிலையாமை

    இந்த அதிகாரத்தில்,

    நில்லாதவற்றை நிலையின என்றுணரும்

    புல்லறி வாண்மை கடை.

    என்ற குறளில் தொடங்கி

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

    துச்சில் இருந்த உயிர்க்கு.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    நிலையானது என்று கூறுகையிலேயே நிலையில்லாத ஒன்று இருப்பது புலப்படுகிறது. நிலையானதை நாம் நம்பவேண்டும் பலகோடி ஆண்டு வாழுகின்ற ஞானியர்கள் நிலையானவர்கள். அவர்கள் மீது நாம் செலுத்துகின்ற பக்தி நிலையானது. மரணத்தை வென்று என்றும் அழிவில்லாத ஞானிகளின் திருவடிகளை வணங்கும் பூஜையும் நிலையானது.

    பல ஆண்டுகள் புண்ணியம் செய்து இறுதியில் இறந்து விட்டாலும் அந்த புண்ணியம் ஆன்மாவை சேரும். ஞானிகளை பூஜை செய்தால் ஞானிகளின் ஆசியும் கருணையும் நம் ஆன்மாவையே சேரும். உடம்பு அழியக் கூடியது. உயிர் அழியாதது. உடம்பும் உயிரும் சேர்ந்து செய்யக் கூடிய நற்செயல் உயிருக்கு ஆதாயத்தைத் தரும். தனி உடம்பு பிணம், தனி உயிர் செயல்பட முடியாது. உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கின்ற தீமைகள் உயிருக்கு பாவத்தை உண்டாக்கும். எனவே புண்ணியமும் பூஜையுமே நிலையானது.

    புண்ணியம் செய்கின்ற மக்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும். உயர்ந்த பண்புள்ள வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள் பாவம் மிகுதியாக செய்தவர்களுக்கு குழந்தைக்கு பால் வாங்குவதற்கும் வசதி இல்லாமல் இருக்கும். துயரமான குடும்பங்களில் பிறந்து அல்லலுறுவார்கள். பிச்சைக்காரர்களாகவும் பிறந்து வறுமையும் பிணியும் சூழ்ந்து நாரகத்தை அனுபவிப்பார்கள்.

    கடவுளே ஆட்சி செய்தாலும், முதலாளித்துவ நாடாக இருந்தாலும், சோஷலிச நாடாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மனிதர்களை அல்லல்படுத்தும் நோய்களும் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது, எனவே, நிலையானது, உத்திரவாதம் உடையது புண்ணியமும் அருளுமே ஆகும். இறைவன் நம் மீது செலுத்துகின்ற தயை, ஆசி, கருணை இவையே அருள். இத்தகைய அருளை பெற தலைவனை உருகி பூஜை செய்தல் வேண்டும்.


    வாழ்க்கையில் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதும் எதிர்கால கற்பனைகளும் ஒருவித பாவமே. இது மனிதரை பலகீனமாக்கும். தலைவனின் ஆசி இருந்தால் நடப்பது எல்லாமே நன்மைக்கே என்ற நம்பிக்கை வரும். மனம் சாந்தம் அடையும். பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக ஆடம்பர வாழ்க்கை வாழ்வது நமது வாழ்க்கைக்குப் பலன் தராது. அத்தகைய மோகத்தில் பலர் கடன் சுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். செல்வம் நிலையில்லாதது.

    அது இருக்கும்பொழுதே நிலையான தர்மத்தை செய்து கொள்ள வேண்டும். நாம் காணுகின்ற கற்பனை உலகமும் வாழ்க்கையும் அழியக் கூடியது. இந்த உண்மையைப் புரிந்து கொள்வது ஒருவித ஞானம். அழகு, இளமை, உடல் இவைகளெல்லாம் நிலையில்லாதது. காற்று நிலையானது. சூரியன் நிலையானது. ஆகாயம் நிலையானது. பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்ட உயிர்கள் வினாடிக்கு வினாடி மாற்றமடைந்து வீழ்ந்து போகும். இதுதான் உலகம்.

    ஆன்மீக துறையில் வருகின்ற மக்கள் இதனை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மனைவி, மக்கள், உறவுகள் எல்லாமே அழியக்கூடியது. நீயும் ஒருநாள் அழியக் கூடியவனே. உணர்ச்சியற்றப் பொருள்களான கட்டிடம் வீடு மற்றும் ஜடப்பொருள்கள் நிலையாக இருக்கும். உணர்ச்சியுள்ள பொருளான மனிதன் அழிந்துவிடுவான். இதனைப் புரிந்து நிலையான புண்ணியத்தையும் பூஜையையும் நாம் செய்ய வேண்டும்.

    உண்மையைப் புரிந்தவன் மனைவியை தாயாகப் பார்ப்பான். இரவில் மனைவியாகப் பார்ப்பான். கருணை நிறைந்த உருவத்தைப் பார்ப்பான். நாம் செய்கின்ற அறத்திற்கும் பூஜைக்கும் துணையாக மனைவி இருப்பாள். நமது காமத்தை தணித்து சாந்தப்படுத்துவாள். மனைவியின் அன்பினாலும் குழந்தையின் ஸ்பரிசங்களாலும் தன்னுடைய மனத்துயரங்களில் இருந்து விடுபடுவான். இவையெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் அழியக் கூடியது என்று கூறியிருந்தாலும் அழியக் கூடிய ஒன்றிலிருந்தே தம்முடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வது சிறப்பறிவு.

    நம்மை நாடி வரும் விருந்தினரை உபசரிப்பதும், ஏழைகளுக்கு உணவு சமைத்துப் பரிமாறக் கூடிய பண்பும் இருந்தால் அவள் கருணைக் கடலாய் விளங்குகின்றாள். அவளை கணவன் மட்டுமல்ல நாமும் வணங்க வேண்டும். மனைவியே நம் ஜென்மத்தை கடைத்தேற்ற உதவுவாள். முரண்பட்ட மனைவி அமைந்தாலும் இடைவிடாது தலைவனை வேண்டினால் மனைவிக்கு நல்ல குணப்பண்பு உண்டாகும்.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    நமக்கு உறுதுணையாக உள்ள மனைவி மற்றும் உறவினர்களை கொண்டே நிலையான வழியில் செல்லவேண்டும். நிலையில்லாத ஒன்றை நிலையானது என்று எண்ணுகின்ற எண்ணம் தலைவன் மீது கொண்ட பக்தியினால்தான் மாறும். நிலையில்லாத ஒன்றை உயர்ந்தது என்று நினைக்கின்ற மயக்கம் தீரவேண்டும். தாமரை இலை தண்ணீர் போல் இருந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் இருப்பான். ஆனால் எதிலும் அகப்பட மாட்டான்.

    அன்பு என்று சொல்லப்பட்ட தாய், அருள் என்ற குழந்தையை பெற்றெடுத்தாள், அருள் என்ற குழந்தையை பொருள் என்ற வளர்ப்புத்தாயினால்தான் வளர்க்க முடியும். அந்த பொருள் இறைவன் மீது எழுகின்ற பக்தியின் காரணமாக வருகின்றது. உயிரையும் உடம்பையும் நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். தலைவன் நம்முடைய சிந்தையில் தங்கி உணர்வாக மாறவேண்டும். அப்போதுதான் உடம்பையும் உயிரையும் புருவமத்தியில் நிலைப்படுத்த முடியும்.

    உயிர் கோடான கோடி ஜென்மம் எடுத்துள்ளது. நாம் அனுபவிக்கின்ற துன்பங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் உயிர் ஒதுங்கியிருக்கும்; பெரிய நோய் வந்தால் உயிர் நம்மைவிட்டு போய்விடும். உயிருக்கு நிலையான வீடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதுவே புருவமத்தி. பல லட்சம் ஆண்டுகளாக பல ஜென்மங்களில் பெண்ணாகவும் ஆணாகவும் கூன்குருடாகவும் உடம்பில் இருந்த உயிர் புருவமத்தியில் மட்டுமே தங்கும்.

    அதுதான் சாகாக்கால், நாம் விடுகின்ற சுவாசம் காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை சூரிய கலையும், 8 மணியில் இருந்து 10 மணி வரை சந்திரகலையும், 10 முதல் 12 மணி வரை சூரியகலையுமாக மாறிமாறி ஒரு நாளைக்கு 12 முறை மாறும். இந்த காற்றை தலைவனின் திருவருள் கொண்டு புருவமத்தியில் செலுத்துகின்றவனுக்கு 1000 கோடி பிரம்ம பட்டம் கிடைக்கும். அதுவே சாகாக்கால். அந்த மூச்சுக்காற்றுடன் தலைவன் உள்ளே செல்வான். மூச்சோடு கலந்து மயிரிழை போன்ற நரம்பு வழியாக மூலாதாரத்தில் தங்கிவிடுவான்.

    அப்போது இந்த தேகம் ஞானதேகமாக மாறும். உலகம் தோன்றி பலலட்சம் கோடி ஆண்டாகிவிட்டது. கடல் ஆயிரம் முறைவற்றினாலும் மூச்சுக் காற்றை கட்டிய மனிதன் அழியமாட்டான். இத்தகைய ரகசியங்கள் தமிழ் மொழி படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தமிழ் ஞானமொழி. ஐந்து என்பது பஞ்சபூதம், மூன்று என்பது இடகலை, பின்கலை, சுழிமுனை. பஞ்சபூதம் அனாதி, இடகலை பின்கலை, சுழிமுனை அனாதி.

    இந்த ரகசியம் தமிழ் படித்தால் மட்டுமே புரியும். இந்த உண்மைகளை மரணமிலாப் பெருவாழ்வை பெற்ற திருமூலரும், ராமலிங்க சுவாமிகள் மட்டுமே அறிந்து அதை நமக்கு கவிகளாக அருளியுள்ளார்கள், அவர்களின் திருவடியைப்பற்றி பூஜை செய்தால் அதன் உண்மையை நாம் புரிந்து கொள்ளமுடியும். அதுவே உண்மையானது; உறுதியானது; நிலையானது; மற்றது யாவும் நிலையில்லாதது.

    • ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.
    • கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது.

    உயிர்க் கொலையைக் கண்டித்தவர் புத்தர். யாகங்களில் உயிர்கள் பலியிடப்படுவது அவருக்கு உடன்பாடல்ல.

    புத்தர் வாழ்வில் வரும் ஒரு நிகழ்ச்சி புலால் மறுப்பை ஆதாரமாகக் கொண்டது.

    ஆசிய ஜோதி என்ற தலைப்பில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிமணியின் கவிதையில் அழகாக அந்நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

    கானகத்தில் புத்தர் நடந்துசெல்லும்போது ஏராளமான ஆடுகளை ஓர் இடையன் மேய்த்துச் செல்வதைப் பார்த்தார். மன்னன் பிம்பிசாரன் நிகழ்த்தும் வேள்வியில் பலியிடுவதற்காக அவை அழைத்துச் செல்லப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டார்.


    அந்த ஆட்டு மந்தையில் ஒரு சின்ன ஆடு கால் ஊனமானதால் தடுமாறியவாறே நடந்துகொண்டிருந்தது.

    மல்லிகைப் பூ மாலை போல் இருந்த அந்த வெள்ளை ஆட்டுக்குட்டியைப் பரிவோடு தன் ரோஜாப்பூப் போன்ற கரங்களில் தூக்கிக் கொண்டார் புத்தர். ஆடுகளோடு அவரும் பிம்பிசாரன் அரண்மனை நோக்கி நடந்தார்.

    உயிர்க் கொலை மாபெரும் பாவம் என்பதை அரசனுக்கு அறிவுறுத்தினார். ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.

    `அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று` என்கிறாரே வள்ளுவர்? அதே கருத்துத் தான் புத்தருக்கும் இருந்திருக்கிறது.

    புத்தர் தன் கருத்தை நிறுவுவதற்கு மறுக்கவே முடியாக ஒரு மிகச்சிறந்த வாதத்தை முன்வைத்தார். அந்த வாதத்தைக் கேட்டு மன்னன் திடுக்கிட்டான்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    `நீ இறைவனுக்கு ஆடுகளைப் பலியிடுவதாகச் சொல்கிறாயே? இறைவன் இந்த மாமிசத்தை உண்பானா? சற்றே யோசித்துப் பார்.

    மன்னனே! மனிதர்களும் ஆடுகளும் இறைவனின் குழந்தைகள். ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதர்கள் வாயுள்ள பிள்ளைகள். ஆடுகள் வாயில்லாப் பிள்ளைகள்.

    வாயுள்ள பிள்ளை வாயில்லாப் பிள்ளையை அரிந்து கறிசமைத்தால் அதைக் கருணை நிறைந்த தந்தை உண்டு களிப்பாரா?` என்று கேட்டார் புத்தர்.

    இந்த வாதத்தைக் கேட்டுப் பதைபதைத்துப் போனான் பிம்பிசாரன். உடனே உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினான். அது மட்டுமல்ல, தன் நாட்டு மக்கள் புலால் உண்ணலாகாது என்றும் சட்டமியற்றினான்.

    கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது. அந்தப் பகுதி இதோ:

    `ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்

    ஆக்கிய யாகத்து அவியுணவை

    ஈட்டும் கருணை இறையவர் கைகளில்

    ஏந்திப் புசிப்பரோ கூறுமையா!

    மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்

    வாளால் அரிந்து கறிசமைத்தால்

    தந்தையும் உண்டு களிப்பதுண்டோ இதைச்

    சற்று நீர் யோசித்துப் பாருமய்யா!`

    இந்தப் பொருள்பொதிந்த வாதத்திற்கு பதில் ஏது? பிம்பிசாரன் மனம் மாறியதில் வியப்பென்ன இருக்கிறது?


    புதுச்சேரி ஸ்ரீஅன்னை இதைப் போலவே சிந்தித்தவர். எல்லா ஜடப் பொருட்களுக்கும் கூட உயிர் உண்டு, ஜடப் பொருளைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கையுடையவர் அவர்.

    ஜடப் பொருள்கள் கூட அணுக்களால் ஆனவை தானே? அணுக்களில் புரோட்டான், நியூட்ரான் போன்றவை எல்லாம் ஓயாமல் சுற்றியவாறு இயங்கிக் கொண்டே தானே இருக்கின்றன? அப்படித்தானே விஞ்ஞானம் சொல்கிறது?

    இயக்கம் உள்ளதெல்லாம் உயிர் உள்ளது தானே? மேசை, நாற்காலி போன்ற ஜடப்பொருள்கள் உயிரில்லாதவை போல் வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் அடிப்படையில் அவற்றில் உள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் அவற்றையும் உயிர் உள்ளவையாகத்தான் கொள்ள வேண்டும் என்பது அன்னையின் வாதம்.

    அன்னையை ஓர் அலுவலகத்திற்கு விஜயம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அவர் உடனே அங்கு வர ஒப்புக் கொண்டார். அலுவலகத்தினர் அவசர அவசரமாக அலுவலகத்தை ஒழுங்கு செய்தார்கள். அன்னை வருகை தந்ததும் அன்னையைப் பூரண கும்பம் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

    உள்ளே சென்ற அன்னை சற்று நின்றார். எங்கிருந்தோ சன்னமான ஓர் அழுகுரல் தனக்குக் கேட்பதாகச் சொன்னார். பின் அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என மெல்ல உட்புறம் நடந்து சென்று ஆராய்ந்தார்.

    ஒரு பூட்டிய அலமாரியில் இருந்துதான் அழுகைக் குரல் கேட்டது என்றார் அன்னை. அந்த அலமாரியைத் திறக்கச் செய்தார்.

    அடுத்த கணம் அன்னை வருகிறார் என அவசர அவசரமாக அலமாரியின் உள்ளே அள்ளித் திணித்திருந்த கோப்புகள் (பைல்கள்) எல்லாம் தடதடவெனக் கீழே விழுந்தன. தான் கேட்டது அந்தக் கோப்புகளின் அழுகுரல்தான் என்றார் அன்னை. கோப்புகளை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொன்னார். இப்போது அவற்றின் அழுகை நின்றுவிட்டது எனவும் தெரிவித்தார்.

    ஜடப் பொருள்கள் என்று நாம் கருதுகின்றவற்றைக் கூட நாம் சீராகப் பராமரித்தால் அவை மகிழ்ச்சி அடையும் என்றும் அவை நமக்குக் கூடுதலாகப் பணிபுரியும் என்றும் அன்னை கருதுகிறார். பழைய செருப்பைத் தூக்கி எறியும்போது வெறுமே தூக்கி எறியக் கூடாது. அதை ஒரு காகிதத்தில் சுற்றி `நீ இத்தனை காலம் எனக்குப் பாதசேவை செய்தாய், உனக்கு மனமார்ந்த நன்றி' என்று எண்ணியவாறு குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்கிறார் அன்னை.

    அப்படியானால் வரும் புதுச்செருப்பு கூடுதலான நாட்கள் பணிபுரியும் என்பது அன்னையின் கருத்து.

    ஜடப் பொருள்களையே கனிவோடு கையாள வேண்டும் என்றால் புலால் உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது தானே தெளிவாகிறதல்லவா?

    `தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்திருக்கிறார், அப்படியானால் தாவரங்களையும் சாப்பிடக் கூடாதுதானே?` என்று வாரியாரிடம் விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பினார் ஓர் இளைஞர்.

    வாரியார் நகைத்தவாறே அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார்:

    `அவரைக்காயைப் பறித்தாலோ கீரையைக் கிள்ளினாலோ அந்தச் செடி மறுபடி வளர்கிறது, ஆனால் ஆட்டின் கழுத்தை வெட்டினாலோ கோழியின் கழுத்தைத் திருகினாலோ ஆட்டின் தலையும் கோழியின் தலையும் திரும்ப முளைத்து வளர்வதில்லை அப்பனே! அதுதான் வித்தியாசம்!`

    தாவரங்களை மட்டுமல்லாது களிமண்ணையும் நேசித்தது பாரசீகக் கவிஞன் உமர்கயாமின் கவிதை உள்ளம். உமர்கயாம் கவிதைகளைத் தமிழாக்கிய கவிமணியின் பாடல் ஒன்று, உமர்கயாமின் களிமண் நேசத்தைப் பற்றிப் பேசுகிறது.

    ஒரு குயவன் களிமண்ணால் பானை வனைந்து கொண்டிருந்தான். அவன் அருகே நின்று அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் உமர்கயாம். அந்தக் களிமண்ணின் குரலைக் கேட்கிறது கவிஞரின் கருணையுள்ளம்.

    அந்தக் களிமண் ஏதோ பேசுகிறதே? அது என்ன சொல்கிறது? கூர்ந்து கவனிக்கிறார் கவிஞர். அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. கவிதை இதோ:

    `மண்ணை எடுத்து ஒரு குயவன்

    மயக்கிப் பிசையும் வேளையிலே

    திண்ணை அருகே சென்றிருந்தேன்!

    செய்யும் செயலும் கண்டிருந்தேன்!

    `அண்ணா! மெல்ல மெல்ல` என

    அமைந்த அழுகைக் குரல் கேட்டேன்!

    கண்ணில் காணாத் தன் நாவால்

    களிமண் கரைவது என உணர்ந்தேன்!`

    என்ற வரிகளைப் படிக்கும்போது களிமண்ணுக்காக உமர்கயாம் கண்கள் மட்டுமல்ல, நம் கண்களும் கூடக் கசியத்தான் செய்கின்றன.

    புலால் மறுப்பை நீதி நூல்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தெய்வச் செயல்களில் புலால் படைப்பது மெல்லக் குறையத் தொடங்கியது. புனித நாட்களான வெள்ளிக்கிழமை மற்றும் விரத தினம் போன்றவற்றில் பலர் புலால் உண்பதில்லை.

    உயிர்களைத் தெய்வத்திற்குப் பலியிடும் வழக்கத்திற்கு பதிலாக வேறு வழக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

    மாமிசம்போல் தோற்றமளிப்பது சதைப்பற்று நிறைந்த பூசணிக்காயின் உள்பகுதி. அதை வெட்டி அதில் குங்குமம் தடவி, குங்குமத்தைக் குருதிபோல் பாவித்து பூசணிக்காயை விலங்குகளுக்குப் பதிலாக வெட்டத் தொடங்கினார்கள்.

    அமாவாசை தோறும் பல கடைகளின் முன்னால் பூசணிக்காய், திருஷ்டி தோஷம் நீங்குவதற்காக என்று வெட்டிப் போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். நடுத்தெருவில் அவை கிடக்கும்போது இருசக்கர வாகனங்கள் அதில் வழுக்கி விபத்துக்குள்ளாவதையும் காண்கிறோம்.


    `பூசணிக்காய் உடைத்துப் போடப்படுவதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றனவே? பூசணிக்காய் உடைக்கும் இந்த இந்துமத மூட நம்பிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?` என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு தொலைக்காட்சியில் வினா எழுப்பப்பட்டது. மெல்லிய முறுவலுடன் அமைதியாக பதில் சொன்னார் அப்துல்கலாம்:

    `அதை நம்பிக்கை என்று சொல்லுங்கள். மூட நம்பிக்கை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? ஏனென்றால் இதுபோன்ற நம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இருக்கின்றன. எண்ணற்ற மக்களின் நம்பிக்கைகளைத் தேவையில்லாமல் விமர்சனத்திற்கு உட்படுத்துவது சரியல்ல.

    ஆனால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை நாம் தடுக்க வேண்டியது மிக அவசியம். எனவே பலியிடப்பட்ட பூசணிக்காய்களை பின்னர் ஞாபகமாக தெருவோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடுமாறு நாம் அறிவுறுத்தலாம்!`

    அப்துல் கலாமின் எந்த மதத்தினரையும் புண்படுத்தாத இந்த பக்குவமான இந்த பதிலைக் கேட்டு நேயர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

    திருக்குறளின் இருபத்தாறாம் அதிகாரம் `புலால் மறுத்தல்` என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. மொத்தம் பத்துக் குறட்பாக்களில் மாமிச உணவு வேண்டாம் வேண்டாம் என்று பத்து முறை அறைகூவுகிறார் வள்ளுவர்.

    வள்ளுவரின் புலால் மறுப்புக் கொள்கை இப்போது உலகெங்கும் வலுப்பெற்று வருகிறது. வள்ளுவரது கோட்பாட்டின் வெற்றி என்பது தமிழர்களின் வெற்றி அல்லவா? எனவே அதுகுறித்து நாம் மகிழலாம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • நமது உடலில் உள்ள வெப்பம் குறைந்து விட்டால் உடனே அஜீரணம் உண்டாகும்.
    • காற்றில் இருந்தும் நமக்கு இயற்கை ஆற்றல் கிடைக்கிறது.

    நாம் கடந்த இதழிலே வாதம், பித்தம், கபம் மற்றும் அதன் தன்மைகள் பற்றி ஆராய்ச்சி செய்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக நாம் தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தும் உணவுகளின் தன்மையை பற்றி சிறிது சிந்தனை செய்யலாம். பொதுவாக, தினசரி நாம் உண்ணும் உணவுதான் ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்து நாதம் எனும் ஏழு தாது பொருட்களாக மாற்றம் பெறுகிறது.

    உணவுக்கு முன்னும், பின்னும் நீரை நாம் அருந்துவோம். நீரானது திரி தோஷ சம நிலையை (வாதம், பித்தம், கபம்) சமன் செய்து உடல் எடையை குறைக்கும். உடலுக்கு சீரான சக்தியை உருவாக்கும். பொதுவாக, நாம் சுடு நீர் அருந்துவது நலம் பயக்கும். அதே நீரை ஆற வைத்து குடித்தால் பித்தத்தை குறைக்கும். ஆனால் ஆற வைத்த குடி நீரை மூன்று மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும். இப்போது நாம் தினமும் வாழ்க்கையில் உணவாக பயன்படுத்தும் பிற பொருட்களை சிந்திப்போம்.


    இளநீர்: பித்தம் (சூடு) குறைக்கும். வாதத்தையும் குறைத்து பசியை தூண்டும். அதே நேரம் வழுக்கை கபத்தை கூட்டி, கொழுப்பையும் கூட்டும்.

    பால்: பசும் பால் மற்றும் எருமைப் பால் இரண்டும் நல்லது. பசும் பால் இனிப்பு கூட்டும். ஓஜஸ் சக்தியை கூட்டும். வாதம் மற்றும் பித்தத்தை குறைக்கும். உணவு ஏழு தாதுக்களாக மாறுவதற்கு உதவி புரியும். எருமைப் பால், சீரணத்தை சிறிது தாமதமாக செய்யும். குளிர்ச்சி தன்மையை கொடுக்கும். தூக்கமின்மையை போக்கும். பொதுவாக பால் குடிப்பவர்கள், இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக எடுத்து கொள்வது நல்லது. அது நல்ல பலனை கொடுக்கும்.

    தயிர்: மலசிக்கல் உள்ளவர்கள் தயிரை குறைப்பது நல்லது. அதற்கு மோர் அல்லது பால் சாதம் சாப்பிடலாம். தயிர் கொழுப்பு சத்தை கூட்டும். வாதத்தை குறைக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எடுக்கலாம். நடுத்தர வயது உள்ளவர்கள் மோர் எடுப்பது நல்லது. குறிப்பாக இரவில் தயிர் சாதத்தை விட மோர் சாதம் நல்லது. புளிக்காத தயிர் உபயோகம் செய்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

    மோர்: எளிதில் ஜீரணம் ஆகும் பொருள். புளிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை உடையது. பசியை தூண்டும். வாதம் மற்றும் கபத்தை குறைக்கும். உடல் வீக்கம், வயிறு உப்புசம் உள்ளவர்கள் மோர் எடுப்பது நல்லது. மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மோர் சிறந்த நீர் ஆகாரமாகும். வாய்க்கு ருசியை ஏற்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ரத்த சோகை குறைப்பாட்டை சரி செய்யும்,

    வெண்ணெய்: விந்து நாத உற்பத்திக்கு சிறந்தது. குளிர்ச்சி தன்மையை கூட்டும். உடல் உப்பசத்தை கூட்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உண்ணலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    நெய்: தினமும் நெய்யை உருக்கி ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டால் அறிவு திறன் கூடும். நெய்யை சித்த சுத்தி என்பர். நெய் பசியை கூட்டும். கண்ணுக்கு சிறந்த மருந்து. வாய்ப்புண், மலச்சிக்கல் உள்ளவர்கள் நெய்யை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக நெய் முதுமையை தள்ளிப் போடும்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    தேன்: உடல் எடையை குறைக்கும் அற்புதமான உணவு. இதை சூடுபடுத்தக் கூடாது. அப்படி செய்தால் நமக்கு பலன் கிடைக்காது. எனவே, ஏழு தாதுக்களில் தடை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை அளவு முறையோடு உட்கொள்வது நல்லது.

    குறிப்பாக, இன்று அஜீரணம் பிரச்சனைதான் எல்லோருக்கும் உள்ளது. நமது உடலில் உள்ள வெப்பம் குறைந்து விட்டால் உடனே அஜீரணம் உண்டாகும். இதுவே எல்லாவிதமான நோய்களுக்கும் மூல காரணமாக அமைகிறது. எனவே, நாம் தினசரி உணவிலே மூன்று தோஷங்களுக்கும் ஏற்றவாறு உணவு உட்கொண்டால் காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

    இயற்கை வழி: நாம் தினசரி உண்ணும் உணவுகளை தவிர மற்ற வழிகள் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றல்களை பெற முடியும். சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே சுற்றி கொண்டும், சூரியனையும் சுற்றி வரும் கோள்களிடம் இருந்தும் ஆற்றலை பெற முடியும். காரணம் கோள்களில் இருந்து வரும் ஆற்றல் நமது உடலோடு தொடர்பு உடையது.

    சூரியனுடைய ஆற்றல் எலும்புகளோடும், புதனுடைய ஆற்றல் தோலோடும், சுக்கிரனுடைய ஆற்றல் விந்து நாதத்தோடும், சந்திரனுடைய ஆற்றல் ரத்தத்தோடும், செவ்வாய்யினுடைய ஆற்றல் மஜ்ஜையோடும், குருவின் ஆற்றல் மூளை செல்களோடும், சனியினுடைய ஆற்றல் நரம்புகளோடும், ராகு மற்றும் கேதுவினுடைய ஆற்றல் ஓஜஸ் என்கின்ற உயிர் சக்தியோடும் தொடர்பு உடையது.


    எனவே, இந்த கிரகங்களிடம் இருந்து வரும் அலை கதிர்கள் மூலம் நாம் இயற்கையாக ஆற்றலை பெற முடியும். அதற்கு பசி உணர்வோடு இருந்து இந்த கோள்களினுடைய ஆற்றலை பெற்ற பிறகு உணவு உண்ண வேண்டும்.

    அது போலதான் பூமியின் தற் சுழற்சி காரணமாக மெக்னீசியம் போன்ற உலோக ஆற்றலும், பசித்த பிறகு உணவு எடுக்கும்போது கிடைக்கிறது. காற்றில் இருந்தும் நமக்கு இயற்கை ஆற்றல் கிடைக்கிறது. இதற்கு தினமும் மூச்சு பயிற்சி மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் மூலமாக நமக்கு கிடைக்கும்.

    அதுபோல நீரில் இருந்தும் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. எப்போதும் நீர் குடிக்கும்போது தலையை மேலே தூக்கி டம்ளர் வாயில் படாமல் குடிக்கக்கூடாது. டம்ளரை உதட்டில் படுமாறு வைத்து கொண்டு வாயில் நீரை எடுத்து சுவையை உணர்ந்து அதன் பிறகு மெதுவாக விழுங்க வேண்டும். அப்போதுதான் உடலின் காரத் தன்மை மற்றும் அமிலத் தன்மை சமன்படும்.

    செரிப்பதற்கு சிரமம் இல்லாத பழச்சாறுகள், இளநீர், தேன் நீர், வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை எடுக்கலாம். அவரவர் உடல் எடை எவ்வளவோ அந்த அந்த எடைக்கு ஏற்ப, நீர் மற்றும் உணவு எடுப்பது நல்லது.

    பொதுவாக பழச்சாறுகள், நரம்பு பிரச்சனை, டென்சன், தூக்கமின்மை, வீசிங், மூச்சுத் திணறல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.


    மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள் சிறந்த சக்தியை கொடுக்கும். காரணம் என்னவென்றால் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் மற்றும் இரும்பு சக்தி அதிகமாகவும், சோடியம் குறைந்த அளவும் உள்ளது.

    உணவு மற்றும் உணவின் அளவு முறைதான் நம் வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. எனவேதான் நம் முன்னோர்கள், நொறுங்க தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்றார்கள்.

    எனவே, உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். திரவ பொருள் கூட மென்று உண்டால் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால், உடல் உள் உறுப்புகள் பலம் பெற்று நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

    எனவே, நாம் உண்ணும் உணவு முறைகளில் சில மாற்றத்தை எற்படுத்தி அந்த முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தால் உடல் நலம் கெடாது. இந்த உணவை சரியான முறையில் எடுக்காததால்தான் உடல் சார்ந்த பிரச்சனைகளை நாம் அதிகமாக எதிர்கொள்கிறோம்.

    அதனால் உணவில் அளவு குறையாமலும், அதே நேரம் ருசியாக உள்ளது என்று அளவு மிகாமலும் பார்த்து கொண்டு வாழ வேண்டும்.

    இதனால், நமக்கு எடை பராமரித்தல், உறுப்புகளை சுறுசுறுப்பாக்குதல், மனநிலையை சமன் செய்தல், நினைவு ஆற்றலை உயர்த்துதல், செரிமானம் சீராக்குதல், பசியை தூண்டுதல், தூக்கமின்மையை போக்குதல், உடல் நோய்களின் தாக்கத்தை குறைத்தல் அல்லது விடுபடுதல் போன்ற பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

    போன்: 9444234348

    • உறவினர்களைக்கூட தங்கள் பக்கம் நெருங்கவிட மாட்டார்கள்.
    • வாழ்க்கை என்பதே ஒரு சவால்தானே.

    'மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இதுதான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும்'.

    -தலாய்லாமா

    பசுமையான மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த ஓர் அழகிய வளாகம். அந்த வளாகத்திற்குள் ஒரு சிற்றுண்டி விடுதி. பட்டணத்தில் அப்படி ஓர் இடத்தைப் பார்க்க முடியாது.

    போதுமான அளவிற்குப் பரந்தகன்ற 'பார்க்கிங்' வசதி. சிலர் தங்கள் காரில் அமர்ந்திருந்தபடியே சிற்றுண்டி ஆர்டர் செய்வார்கள். வடை, போண்டா, காபி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து கதைபேசிக் களிப்பவர்கள் ஏராளம். காதல் ஜோடிகளுக்குப் பஞ்சமே இருக்காது.

    காலை பத்து மணிமுதல் இரவு பத்து மணி வரை, அந்த வளாகம் கலகலப்பாக இருக்கும். சிற்றுண்டி விடுதியில் உட்கார்ந்து சாப்பிட இருக்கை வசதிகளும் உண்டு. எண்ணற்ற வாடிக்கையாளர்கள்; எல்லோரும் அதற்கு ரசிகர்கள்.

    பெரியவர் ஒருவர் அங்கு தினந்தோறும் வருவார். மதியம் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் வருபவர், இரவு வரை அந்தச் சிற்றுண்டி விடுதியில், ஒரு மூலையிலுள்ள இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பார். அவ்வப்போது காபி மட்டும் பருகுவார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கிளம்பிவிடுவார்.

    தினமும் அவரைப் பார்க்கின்ற சீனியர் சர்வருக்கு ஒரே வியப்பு. என்ன மனிதர் இவர்! வருகிறார் இருக்கிறார் போகிறார். பேச்சு வார்த்தை இல்லை, சிரிப்பதில்லை. ஆனால் நாள் தவறாமல் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்.

    ஒருநாள் அவரிடமே கேட்டுவிட்டார்.

    'சார், தப்பா எடுத்துக்காதீங்க. உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு ரொம்ப ஆசை'.

    சர்வரை அவர் அலட்சியமாகப் பார்த்தார். காபியை குடித்துவிட்டு, 'டங்' என்று தம்ளரை டேபிளில் வைத்தார்.

    'இன்னொரு காபி' என்றார்.

    சர்வர் மேற்கொண்டு பேசாமல் சென்று, காபி கொண்டு வந்து அவர்முன் வைத்தார். அந்த மனிதர் ஏறிட்டுப் பார்த்தார்.

    'என்ன பேசப் போறீங்க' என்றார்.

    'இல்ல சார், சும்மாதான்...'

    'பரவாயில்ல, பேசுங்க'.

    'சார், உங்க அமைதியான குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, நீங்க யார்கிட்டேயும் பேசுறதில்ல. எப்பவும் எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க. ஏதும் பிரச்சனையா சார்?'

    இப்போது சர்வரிடம் பேச வேண்டும்போல் அவருக்குத் தோன்றியது.

    'பிரச்சனை எதுவும் இல்ல. ஆனா, வாழ்க்கையே வெறுமையாதான் தோணுது'.

    'ஏன் சார்?'

    'எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு. புள்ளைங்களுக்குக் கல்யாணமாகி, நல்லபடியா செட்டில் ஆயிட்டாங்க. இங்க நானும் என் மனைவியும்தான். கார், பங்களா, பணம் எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத மாதிரி மனசு தவிக்குது. வாழ்க்கை சூன்யமா தெரியுது' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

    பக்கத்து டேபிளில் இருந்த நபர்களைக் கவனித்துவிட்டு, மீண்டும் அவரிடம் வந்தார் சர்வர்.

    'சார், நம்ம ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட சம வயசுதான் இருக்கும். என் பையன்களும் கல்யாணமாகி வெவ்வேறு ஊர்லதான் இருக்காங்க. இங்க நானும் என் சம்சாரமும் சந்தோஷமா இருக்கிறோம்' என்று சர்வர் சொல்ல, அவரை ஆர்வத்துடன் கவனித்தார் அந்த மனிதர்.

    'சார், எனக்கு சொற்ப வருமானம்தான். ஆனா, வாழ்க்கை மனசுக்கு நிறைவா இருக்குது'.

    'அப்படியா!'

    'டியூட்டி முடுஞ்சி வீட்டுக்குப் போகும்போது, என் சம்சாரத்துக்குப் புடிச்ச வெங்காய பக்கோடாவும் கொஞ்சம் ஸ்வீட்டும் வாங்கிட்டுப் போவேன். ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம், குடும்ப விஷயங்களை பேசுவோம். ஞாயிற்றுக் கிழமை எனக்கு டியூட்டி கிடையாது. அன்னிக்கு கோவில், பீச், சினிமான்னு ஜாலியா கிளம்பிடுவோம்'.

    கவிஞர் தியாரூ

    கவிஞர் தியாரூ

    'அடடே, கேக்கிறதுக்கே நல்லாருக்கே'.

    'அப்பப்போ புள்ளைங்களும் குடும்பமா வந்து, எங்ககூட இருந்துட்டுப் போவாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். முக்கியமான விஷயம், என் சம்சாரம் ரொம்ப சிக்கனம் சார். சேமிக்கிற பணத்துல ஒரு பகுதியை ஏழைங்களுக்கு தர்மம் பண்ணிடுவோம். எங்க தெருவுல ஒரு பூக்காரம்மா. அவங்க குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்டுறதுக்கு நாங்களும் உதவுறோம்' என்று சர்வர் சொன்னதும், அவரை மரியாதையுடன் பார்த்தார் அந்த மனிதர்.

    'தெருவில் திரியிற நாய்களுக்கு தினமும் ரெண்டு பிஸ்கட் போடுறதும் புண்ணியம்தான் சார். பணங்காசு பெருசில்ல; நல்ல மனசுதான் பெருசு' என்று சர்வர் சொல்ல, அந்த மனிதரின் முகத்தில் ஒரு தெளிவு பளிச்சிட்டது.

    இன்று வசதிகளுக்குக் குறைவில்லை. பணம் மழைபோல் கொட்டுகிறது. செல்வம் குவிந்து கிடக்கின்றது. எனினும் அவர்களில் பலருக்கு வாழ்க்கை வெறுமையாகத் தெரிகிறது.

    அவர்களின் முகத்தில் ஒரு சலிப்பு. 'இனி என்ன இருக்கிறது' என்னும் விரக்தி. வாழ்க்கையே புள்ளியாகத் தேய்ந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. காரணம் வேறொன்றுமில்லை; அவர்களின் மனம் கற்பாறைபோல் இறுகிக் கிடக்கின்றது.

    அவர்களைக் கவனித்துப் பாருங்கள். 'உம்'மென்று இருப்பார்கள். கனிவு என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. உறவினர்களைக்கூட தங்கள் பக்கம் நெருங்கவிட மாட்டார்கள். அதற்காகவே முகத்தைச் சிடுசிடு என்று வைத்துக் கொள்வார்கள்.

    எல்லாரையும் சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். பண உதவி கேட்டுவிடுவார்களோ; வேலைக்கு சிபாரிசுக் கடிதம் கேட்பார்களோ; வீடு தேடிச் சாப்பிட வந்துவிடுவார்களோ...இப்படிக் குணக்கேடான கேள்விகளும் பயங்களுமே அவர்களை ஆட்கொண்டிருக்கும்.

    அவர்களின் பார்வை ஏழைகள் பக்கம் திரும்பவே திரும்பாது. கையேந்தி நிற்பவர்களிடம் உபதேசம் செய்வார்கள். ஒரு ரூபாய் தர்மம் செய்ய மனம் வராது.

    அப்படிப்பட்டவர்களின் மனதில் வெளிச்சம் எப்படி வரும்? கசப்பும் வெறுப்பும் குடிகொண்டிருந்தால் எங்கிருந்து மகிழ்ச்சி வரும்? அதனால்தான், அவர்களுக்கு வாழ்க்கை வெறுமையாகத் தெரிகிறது. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற விரக்தி ஏற்படுகின்றது.

    அதை மேற்கொள்வதற்கான வழியை அவர்கள் சிந்திப்பதே இல்லை. முதியவர்கள், ஆதரவற்றோர், நோயாளிகள் என நம்மைச் சுற்றி எத்தனையோ பேர். அவர்களுக்கு நம்மால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்யலாம்.

    உதவி செய்கின்றவர்கள் ஒருபோதும் வெறுமையைக் காண மாட்டார்கள். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். அவர்களைக் காண்பவர்களிடத்தில் அதே மகிழ்ச்சி பரவிச் செல்லும்.

    தங்கள் வாழ்வை நேசிக்கின்றவர்கள், நல்லவற்றைச் செய்ய விரும்புகிறார்கள். நல்லவற்றைச் செய்பவர்கள், மற்றவர்களின் அன்பைப் பெறுகிறார்கள். பிறரின் அன்பையும் மதிப்பையும் பெறுகின்றவர்கள், ஒவ்வொரு விடியலையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்; வாழ்வை அர்த்தம் உள்ளதாக்குகின்றனர்.

    வாழ்க்கை என்பதே ஒரு சவால்தானே. அதில் சாதிப்பது ஒரு கலை. ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் பெறுவதுதான் சாதனை என்பதல்ல. மனநிறைவுடன் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் சாதனைதான். அதற்கான சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருவனுடைய ஞானம், பணம், பொருள், புகழ் அவனுக்கு மனநிறைவைத் தந்துவிடாது. அவை நாலு பேர்க்குப் பயன் விளைவிப்பதாய் மாறும் போதுதான், அவன் உண்மையான மனநிறைவைப் பெறுகின்றான்.

    மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன். தனது தொழிற்திறமையால் செல்வங்களைக் குவித்தான். ஏராளமான பணியாளர்கள். எல்லாம் இருந்தன. எனினும், அவன் மனதில் நிறைவு ஏற்படவில்லை. ஏழைகளிடம் காணப்படும் மகிழ்ச்சியைக் கண்டு ஏங்கினான். காரணம் புரியவில்லை.

    ஒரு துறவியைச் சந்தித்தான். தனது பிரச்சனையைச் சொன்னான். அவனுக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்த விரும்பிய துறவி, அவனை ஒரு மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றார். மூன்று கனமான கற்களைக் கொடுத்துத் தூக்கிவரச் சொன்னார். அவற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முயன்றான். அவனால் முடியவில்லை; தடுமாறினான். எனவே, அவற்றில் ஒரு கல்லைத் தூக்கிப் போடச் சொன்னார் துறவி. அவன் அப்படியே செய்தான்.

    இரண்டு கற்களைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றதும், மீண்டும் நடக்க முடியாமல் சிரமப்பட்டான். கவனித்த துறவி, அவற்றில் ஒன்றைத் தூக்கிப் போடச் சொன்னார். அவன் அப்படியே செய்தான்.

    இப்போது ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு நடந்தான். சிறிது தூரம் சென்றதும் சோர்வுற்றான். அதையும் தூக்கிப் போட்டுவிட்டு நடக்கச் சொன்னார் துறவி. அதையும் போட்டுவிட்டான்.

    கையில் எந்தச் சுமையும் இல்லாமல் சுலபமாக நடந்தான். இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.

    துறவி அவனிடம், 'உன்னால் எப்படி எளிதாக மலையேற முடிந்தது?' என்று கேட்டார்.

    'என்னிடம் இருந்த பாரங்களைத் தூக்கிப் போட்டுவிட்டேன். அதனால்தான் முடிந்தது' என்றான் அவன்.

    'அதைப்போன்றுதான் உன் செல்வமும். அதை முழுவதுமாக உன் மனதில் சுமந்து கொண்டிருப்பதனால், உன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. செல்வம்கூட பாரம்தான். சுயநலத்துடன் சேர்த்து வைத்திருக்கின்ற எதுவும் சுமைதான். உன்னிடத்தில் இருப்பவற்றில் ஒரு பகுதியை, ஏழைகளுக்கு மனமகிழ்ச்சியோடு கொடு. அந்த மகிழ்ச்சி பல மடங்குகளாய் உன்னிடத்தில் வந்து சேரும். சுமை குறையும்; மனம் நிறையும்' என்றார் துறவி. மனநிறைவின் ரகசியத்தை அப்போதுதான் உணர்ந்தான் அந்த செல்வந்தன்.

    இருட்டறையில் இருந்து கொண்டு, உலகமே இருட்டு என்பதில் நியாயமில்லை. மன இறுக்கங்களில் இருந்து வெளிவர வேண்டும். மனிதத்திற்கு எதிரான கட்டுகளில் இருந்து விடுபட வேண்டும். வாழ்கின்ற காலத்தில் விசாலமான மனதோடு, கொடுத்தலும் மகிழ்தலும் - வரவேற்றலும் உபசரித்தலுமாய் வாழ்தல்தானே இனிது.

    'எல்லாம் இருக்கிறது; எனினும் இல்லை' என்னும் எண்ணம் நம்மை அழுத்துகிறது என்றால், நம் வாழ்க்கை சரியில்லை என்று அர்த்தம். எனவே, வாழ்வைச் செம்மை செய்வோம்; பயனுற வாழ்வோம். அப்போது வெறுமை நீங்கும்; வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஓங்கும்.

    போன்: 9940056332

    • அனைத்தையும் வெகு சிறப்பாக மன்னருடன் சேர்ந்து இதனை மக்களும் கண்டுகளிப்பார்கள்.
    • தசரா பண்டிகை தொடங்கியதிலிருந்து பொருட்காட்சியும் நடத்தப்படும்.

    இந்தியாவின் மிகப் பெரிய நாடெங்கும் கொண்டாடப்படுகின்ற பண்டிகை தசரா. மைசூர் தசரா பற்றிய சிறப்புக்கள் எல்லாம் பார்த்தவர்கள் மனதில் மகிழ்ச்சியுடன் அசைப்போட.. பார்க்காதவர்கள் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்க கூடிய ஒரு மிகப்பெரிய விழாவாகும்.

    இன்றும் மன்னர் ஆட்சியில் மக்களுக்கு இருந்த மகிழ்ச்சியை பறைசாற்றக்கூடிய அளவில் தசராவை மைசூர் மாநகரம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

    மைசூரில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தசரா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என்பது நாம் அறிந்த விஷயமே. அதைப் பற்றிய பல சுவையான செய்திகளை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்..

    மைசூரில் இந்த விழா நாட்டு விழாவாக இல்லாமல் அங்கு குடியிருக்கும் ஒவ்வொருவருடைய வீட்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    முதலில் அரச பரம்பரையில் எப்படி எல்லாம் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டதோ அதேபோன்று தற்போதும் மைசூர் நகர மக்கள் அரசர்களுக்கே உரிய அனைத்து மதிப்பும் மரியாதைகளும் அளித்து தங்கள் குடும்பப் பெரியவர்களை காண்பது போல் மைசூர் மகாராஜாவை தரிசிப்பதற்கு செல்கிறார்கள்.

    தசராவின் பத்து நாட்களில் மன்னர் காலை அரண்மனை வளாகத்தில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று கஜபூஜை... கோபூஜை.. பரிபூஜை செய்வார்.

    அதாவது போர் செய்யும் போது தங்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற யானைக்கும் குதிரைக்கும் மற்றும் பசு மாட்டிற்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் நாள்தோறும் புரோகிதர்கள் மந்திரம் ஓத.. இந்த பூஜைகள் நடக்கும். மன்னர் 10 நாட்கள் விரதம் இருந்து இதில் கலந்து கொள்வார்.

    அங்கு வரக்கூடிய மக்களுக்கு தரிசனம் வழங்குவது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. மன்னர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க ஒவ்வொரு படிகளிலும் பதுமைகள் இருப்பதை காணலாம். இந்த சிம்மாசனம் ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்.

    மந்திரி சபையுடன் அன்றைய தர்பார் போலவே இன்றும் மைசூர் அரண்மனையில் உள்ள தர்பாரில் மன்னர் அமர... அமைச்சர்கள் இருபுறமும் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள். இன்றைய காலத்தில் மந்திரிகள் இல்லாததால் பொதுமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த சிறப்பை அளிப்பார்கள்.

    கிட்டத்தட்ட 50 பேர் பேட்டா என்று அழைக்கப்படும் தலைப்பாகையுடன் இருபுறமும் அமர்ந்து மன்னருடன் அங்கு நடத்தப்படுகின்ற மல்யுத்தம்.. வாள் போர் போன்ற வீரத்தை பறைசாற்றுகின்ற விளையாட்டுக்களையும் பார்த்து ரசிப்பார்கள்.

    பழைய காலத்தில் மன்னர் வெளியே செல்லும்போது, தேவதாசி எதிரில் வர அவர்களை பார்த்து சென்றால் செல்லும் காரியம் வெற்றிகரமாக அமையும். சுப சகுனமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் அந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அது போன்று இப்பொழுதும் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

    மன்னர், அரண்மனை வளாகத்தில் இருக்கக்கூடிய காயத்ரி... புவனேஸ்வரி... திரிபுரசுந்தரி... சொர்ண பைரவர் போன்ற ஆலயங்களுக்கும் அவர்களது குல தெய்வமாக இருக்கக்கூடிய அன்னை சாமுண்டி தேவிக்கும் மற்றும் வராக சுவாமி கோவிலுக்கும் சென்று வழிபட்டு ஒவ்வொரு நாளும் தசராவிற்கு சிறப்பு சேர்ப்பார்.

    தசராவையொட்டி மைசூரில் விளக்குகளின் அலங்காரம் பிரசித்தம். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எங்கெங்கும் ஒளி வெள்ளம் பரவியிருக்கும். அதை காண்பதற்காக மக்கள் வெள்ளமென திரண்டு வருவார்கள். நம் நாட்டில் இருந்துமட்டுமல்ல பல்வேறு நாட்டில் இருந்தும் வருவார்கள். இதனால் மைசூரே மக்கள் வெள்ளத்திலும் ஒளிவெள்ளத்திலும் மிதக்கும்.

    அது மாத்திரம் அல்லாமல் மைசூர் பேலஸ்சில் மாலை நேரங்களில் மகாராஜா அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்தையும் வெகு சிறப்பாக மன்னருடன் சேர்ந்து இதனை மக்களும் கண்டுகளிப்பார்கள். அதைப் போன்று மைசூரின் பல இடங்களில் குறிப்பாக ஞானபாரதி சரா சபா உள்ளிட்ட நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பலவிதமான கலைநிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்று மக்களை கவரும் வண்ணம் நடந்து கொண்டே இருக்கும்.

    ஓவல் மைதானம் என்னும் இடத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அங்கேயே அவர்களுக்கு நாள்தோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    அதேபோன்று புட் மேளா என்ற உணவுத் திருவிழா ஸ்கவுட்ஸ் மைதானத்தில் நடக்கும். இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் கர்நாடகா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் சைவம் அசைவம் என அனைத்து வகை உணவுகளும் கிடைக்கும். தசரா விழாவுக்கு வரும் மக்கள் கலைநிகழ்ச்சிகளைக்கண்டு களிப்பதுடன் பலவகையான உணவுகளை ருசித்தும் மகிழ்வார்கள்.

    தசரா பண்டிகை தொடங்கியதிலிருந்து பொருட்காட்சியும் நடத்தப்படும். இவை தொடர்ந்து இரண்டு மாதம் அதாவது டிசம்பர் மாதம் வரை நடக்கும்.

    சிவராம் பேட் நஞ்சராஜா பகதூர் சவுத்ரி என்று அழைக்கப்படும் இடத்தில் ஓவிய திருவிழா என்பதாக மைசூரின் புகழ்பெற்ற ஓவியங்கள் கண்காட்சி நடைபெறும். இதில் இயற்கை வண்ணங்களால் தீட்டபட்ட ஓவியங்கள் மற்றும் சிறந்த வேலைபாடுகள் கொண்ட கைவினைப் பொருட்கள் கிடைக்கும்.

    ஜெகன்மோகன் பேலஸ் என்று அழைக்கப்படுகின்ற அரண்மனை இன்று அருங்காட்சியகமாக உள்ளது. வண்ண வண்ண ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், மன்னர்கள் அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள் இப்படியாக அந்த வம்சத்தில் காலம் காலமாக பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் நாம் காணலாம். இது எப்போதும் பார்க்க கூடிய ஒரு இடமாக இருக்கிறது.

    மைசூர் தசரா ஊர்வலம் உலகப் புகழ்பெற்றது. விஜயதசமி என்று அழைக்கப்படுகின்ற பத்தாம் நாள் அரண்மனையில் இருந்து ஊர்வலம் புறப்படும். அந்த ஊர்வலத்தில் அம்பாரியின் மேலே 750 கிலோ எடையுடைய தங்க இருக்கையை பட்டத்து யானை சுமந்து வரும்.

    இதற்கு பின்னால் டிரக்குகள் என்று அழைக்கப்படுகின்ற வண்டிகளில்... பெரிய திறந்த வாகனங்களில்... ராமாயணம் மகாபாரதம் போன்ற பல்வேறு வகையான காட்சிகள், கர்நாடக மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் வகையில் அலங்காரங்கள் சுதந்திர தின ஊர்வலத்தில் வருவது போன்று அலங்கார ஊர்திகள் பவனி வரும்.

    இந்த ஊர்வலத்தை கர்நாடக முதல்வர் பூ போட்டு மாலை.. புடவை சாத்தி... முறைப்படி தொடங்கி வைப்பார். தற்போது அரசர் சாரட் வண்டியில் பவனி வருவது இல்லை. பதிலாக மகிழுந்தில் பன்னிமண்டபம் வந்து விடுகிறார்.

    அரண்மனையில் தொடங்கும் அனைத்து வகை அலங்கார ஊர்திகளும் பன்னிமண்டபம் என்ற இடத்திற்கு சென்று நிறைவடைகிறது. அங்கு வன்னி மரத்தை குத்துவது போன்ற நிகழ்ச்சி பன்னி குத்துவது என்று சொல்லப்படுகிறது. அத்துடன் தசரா நிகழ்ச்சி நிறைவு பெறும்.

    இறுதியாக டார்ச் லைட் பெரெடு என்று அழைக்கப்படுகின்ற இருட்டில் ஒளிரும் வகையில் நடத்தப்படும். ரிசர்ச் போலீசார் மோட்டார் வாகனங்களில் சாகச நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடத்துவார்கள். இறுதியாக வானவேடிக்கை ஆகாயத்தை வண்ணமயமாக்க ஒரு கோலாகலமாக காட்சியளிக்க கூடிய கண்ணிற்கும் கருத்தித்கும் விருந்தாக வெகு விமர்சையாக இந்த வான வேடிக்கை நிகழும். மக்களும் மிகவும் மகிழ்வுடன் வீடு திரும்புவார்கள்.

    இதற்கான ஒத்திகை முதல் நாளே அரண்மனையில் டார்ச் லைட் ஷோ.. பைக் ரேஸ்... கலை நிகழ்ச்சிகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்படும். அன்று அனைவருக்கும் இலவசமாக அந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். மறுநாள் விஜய

    தசமி அன்று அதற்கான நுழைவுச்சீட்டுக்கு பணம் கொடுத்து வாங்குபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏர் ஷோ பன்னிமண்டபத்தில் ஏழாம் எட்டாவது நாட்களில் சிறப்பாக நடைபெறும். அரண்மனையின் வெளியே 20000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் இருக்கக்கூடிய இடத்தில் தசரா அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள்.

    தசராவிழாவின் பத்து நாட்களும் அரண்மனைக்குள் சாமுண்டி தேவி ஊர்வலம் மற்றும் பூஜை புனஸ்காரங்கள் சிறப்பாக நடத்தப்டும்.

    அதேபோல 12 13-ஆம் நாள் மலை மேல் உள்ள சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெறும்.

    • நரம்பு தளர்ச்சிக்கு நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது.
    • நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

    மூளையில் இருந்து சமிக்ஞைகளை உடலின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்புகள்தான். ஒரு நரம்புக்குள்ளேயே மூன்று வகையான நரம்புப் பிரிவுகள் உள்ளன. அவை,

    இயக்க நரம்புகள்:- மூளையில் இருந்து சமிக்ஞைகளை எடுத்துச்சென்று சதைகளை இயங்கச்செய்யும்.

    உணர்ச்சி நரம்புகள்:- தோல், சவ்வு, மூட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உணர்வுகளை எடுத்துக்கொண்டு மூளைக்குச் செல்லும்.

    தன்னியக்க நரம்புகள் : வியர்வைச் சுரப்பிகள், குடல் இயக்கங்கள், மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றம் ஆகிய முக்கிய செயல்களைச் செய்யும்.


    இந்த நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி பற்றியும், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறியலாம்.

    நம் உடல் இயங்க ஆற்றல் தேவை. சில வேதியியல் மாற்றங்களால் நாம் உண்ணும் உணவில் இருந்து சர்க்கரை பிரித்து எடுக்கப்பட்டுப் பல நுண்ணிய மூலக்கூறுகளாகக் (குளுக்கோஸ், பரக்டோஸ், ேலக்டோஸ்) மாற்றப்பட்டுத் தேவையான ஆற்றல் உடலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல இந்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிகமாகும்போது நம் உடலுக்கு அது நச்சுப்பொருளாக மாறுகிறது. எனவே நம் உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

    காலை வெறும் வயிற்றில் சரியான அளவு 100மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு 126 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

    உணவு உண்டு 2 மணி நேரத்தில் சரியான அளவு 160மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு-200 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

    இடைப்பட்ட அளவான 100-125mg/dl மற்றும் 160-199mg/dl உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ப்ரீ டையபடீஸ் என்கிறோம்.

    அதிக ரத்த சர்க்கரையானது நம் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் கண்களில் உள்ள விழித்திரை, மூளை, நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், சிறுநீரகம் எனப் பல உறுப்புகளின் தன்மைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    25 வருடத்திற்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 50 சதவீதம் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்.


    நரம்புத்தளர்ச்சியின் அறிகுறிகள்:

    * நம் உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் நீளமானவை. எனவேதான் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் முதலில் பாதத்தில் தொடங்குகிறது.

    * காலில் எரிச்சல், கால் விரல் நுனிகளில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த உணர்வு சிலருக்கு இரண்டு பாதங்களிலும் தொடங்கி மேல் நோக்கித் தொடைப்பகுதி வரை வந்த பிறகு, கைகளுக்குப் பரவக்கூடும்.

    * சிலருக்குப் பாதத்தில் மட்டும் உணர்ச்சி குறைந்து மதமதப்பு ஏற்படுகிறது. காலில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும். விரலில் உள்ள நகங்கள் பழுப்பு நிறமாக மாறி, பலமிழந்து உடையத் தொடங்கும். இவை அனைத்தும் படிப்படியாக வரக்கூடியவை.

    * ஆனால் சிலருக்குத் திடீரென ஆரம்பித்து நடக்கக்கூட முடியாமல் போய்விடலாம். சிலருக்கு கைகளை ஊன்றி எழவோ, தோள்பட்டைக்கு மேல் கைகளைத் தூக்கவோ முடியாமல் போய்விடலாம். இதை அதிவிரைவான நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

    நாளுக்கு நாள் இந்திய தேசம் இனிப்பு தேசமாக மாறிக்கொண்டு வருகிறது. வீட்டிற்கொரு நீரிழிவு நோயாளி என்ற நிலையில் நம் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறது.

    இவர்களில் பலர் கால் மற்றும் பாதத்தைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிடுவதால் கால்களை அகற்ற வேண்டிய அபாயம் கூட ஏற்படலாம். எனவே அவர்கள் கால் பாதங்களைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


    செய்ய வேண்டியவைகள்:

    அன்றன்று தங்களது கால்களைக் கண்ணாடியில் பார்த்து அதில் கால் ஆணிகள், கட்டைவிரல் நகத்தில் பாதிப்பு, கால் எலும்புகளில் அதிகப்படியான வளர்ச்சி, வளைந்து காணப்படும் கால் கட்டைவிரல், வறண்ட சருமம், வெடிப்புகள், கால் விரல்களுக்கு இடையில் சிரங்குகள் போன்றவை உள்ளனவா என ஆய்ந்தறிய வேண்டும்.

    * கால்களையும், விரல்களையும் மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும்.

    * கால் நகங்களை நேராக வெட்ட வேண்டும்.

    * காலணிகளை அணியாமல் வெறும் கால்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.

    * கால்களை ஈரப்பதமாக வைக்கத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.


    செய்யக் கூடாதவை:

    * செருப்பில்லாமல் நடக்க வேண்டாம்.

    * சூடான நீரில் பாதங்களை வைக்க வேண்டாம்.

    * கால் ஆணிகளை நீக்கும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.

    * கால் ஆணிகளைத் தாமே வெட்டிக் கொள்ள வேண்டாம்.

    * பாதம் தொடர்பான சிக்கல்களுக்குத் தமக்குத் தாமே மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * புகையிலை மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

    * மதுப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

    * மண், விபூதி, சுண்ணாம்பு, சாம்பல், சாணம், கரித்தூள் ஆகியவற்றைப் பாதங்களில் உள்ள காயங்களின் மேல் தடவக்கூடாது.

    * இறுக்கமான உள்ளாடைகள் அல்லது இறுக்கமான துணிக்கட்டுகளைத் (Bandage) தவிர்க்க வேண்டும்.

    * காலில் கொப்புளம் ஏற்பட்டால் முள், ஊசி கொண்டு குத்த வேண்டாம்.

    * அதிக நேரம் கால்மேல் கால்போட்டு உட்கார வேண்டாம், ஏனெனில் இதனால் கால் பாதங்களுக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும்.

    * கத்தி, பிளேடு, கத்தரிக்கோல், ஆணித் துண்டு, சிகரெட் அல்லது பீடி போன்றவற்றால் பாதத்தில் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

    * அசிடிக் அமிலம், கார்போலிக் அமிலம், அயோடின் அல்லது அயோடெக்ஸ் ஆகியவற்றைப் பாதங்களில் தடவ வேண்டாம்.

    இப்படிச் செய்வதால் கால்களில் ஏற்படும் பலசிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இவற்றுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    சிலருக்கு உணவுக் கட்டுப்பாடு மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை.

    தமது சர்க்கரையின் அளவைப் பிறரின் அளவுகளோடு ஒப்பிட்டு, அவர்கள் கூறுவதை வைத்து முடிவு செய்யக் கூடாது. சிலர் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான செய்திகளை உண்மை என்று நம்பி, மாத்திரைகளை நிறுத்திவிட்டுப் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த தவற்றை யாரும் செய்து விடாதீர்கள். எனவே அவரவர் உடலுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்ள வேண்டும்.

    தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் விதையுள்ள திராட்சை, விட்டமின் "சி" அதிகமுள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைத் தடுக்க முடியும்.

    • இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை.
    • கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சினைகள் வரும்.

    சினைப்பை நீர்க்கட்டி என்கிற பிரச்சனை பற்றி இப்போது பெண்கள் எல்லோருமே ஓரளவு அறிந்திருக்கிறார்கள். இது பெண்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான ஹார்மோன் பிரச்சனையாகும். இதை பொதுவாக பி.சி.ஓ.எஸ். என்று அழைப்பார்கள். இதன் விரிவாக்கம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதாகும்.

    இதுபற்றி நோயாளிகள் முக்கியமாக கேட்கும் விஷயம், டாக்டர் எனக்கு நீர்க்கட்டியா? கட்டி இருக்கிறதா என்பார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லுகின்ற முதல் பதில்... இது கட்டிகள் அல்ல, இது நாளமில்லா சுரப்பிகளில் இருந்து வருகின்ற ஹார்மோன்களால் உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது?

    சினைப்பை நீர்க்கட்டி ஹார்மோன் பிரச்சினை எதனால் வருகிறது என்று பல ஆய்வுகளும் தெளிவுபடுத்துகின்றன. சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (இன்சுலின் எதிர்ப்பு) என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

    இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவதால் இந்த பெண்களுக்கு பொதுவாக பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகளை உருவாக்கும்.

    அதேபோல் கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சனைகள் வரும். இந்த இன்சுலின் அதிகரிப்பால் பல நேரங்களில் கல்லீரலில் ஸ்டீராய்டின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆண்களுக்கான ஹார்மோன் பெண்களுக்கு சுரப்பது அதிகரிக்கிறது.

    இது தவிர இந்த இன்சுலின் அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் கொழுப்பின் வளர்சிதை மாற்றங்களால் கொழுப்பு அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் தான் சினைப்பை நீர்க்கட்டியின் அடிப்படையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புள்ள பெண்களுக்கு கொழுப்பு அதிகரிப்பதால் உடல் பருமனாக இருப்பார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு இருப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும்.

    ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால் ஆண்களை போன்ற சில தன்மைகளும் அவர்களுக்கு உருவாகும். உதாரணமாக இந்த பெண்களுக்கு மீசை, தாடி, கைகால்களில் முடி ஆகிய மாற்றங்கள் உருவாகும். ஆண்களை போல் சில நேரங்களில் குரல் கூட மாறலாம்.

    மேலும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் அது சினைப்பையில் இருக்கிற கருமுட்டைகளின் முதிர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கிறது.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதன் மூலம் பி.சி.ஓ.எஸ்.மாற்றங்கள் சினைப்பையில் வரும்.

    மேலும் இந்த இன்சுலின் சினைப்பையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. உடலில் எல்லா பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் சதைகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றில் வளர்சிதை மாற்றங்களும், அதனால் பலவிதமான சிக்கல்களும் ஏற்படுகின்றன.

    உதாரணமாக கொழுப்பு அதிகமானால் இருதயத்துக்கு போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு இருதய பிரச்சனை ஏற்படலாம். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தால் சர்க்கரை அதிகமாகி நீரிழிவு பாதிப்பு வரலாம்.

    கொழுப்பு அதிகமாகும் போது உடல் பருமன் ஏற்படலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆகும்.

    இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏன் ஏற்படுகிறது? யாருக்கு வருகிறது?

    உடல் பருமன் அதிகமாக இருக்கிற எந்த ஒரு நபருக்கும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது.

    அதனால் தான் இளம் பருவத்தில் திடீரென்று உடல் எடை கூடும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகளும் வரும்.

    ஒரு இளம்பெண் நன்றாக வேலை செய்து கொண்டிருப்பார், உடல் ஒல்லியாக இருப்பார். திடீரென்று அவருக்கு உடல் எடை அதிகரிக்கும். இதனால் அவருக்கு பி.சி.ஓ.எஸ். மாற்றம் வர ஆரம்பித்து விடும்.

    உடல் பருமன் தான் இதனுடைய முக்கிய அடிப்படை காரணமாகும். இது தவிர மேலும் பல காரணங்களும் உள்ளன. மரபு ரீதியான காரணங்களும் இருக்கிறது. மன அழுத்தமும் இதற்கு காரணமாக அமைகிறது. இவை எல்லாம் இருந்தால் கூட உடல் பருமன் தான் முக்கியமான காரணம் ஆகும்.

    இந்த இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைப்பதற்கு, உடல் எடையை குறைப்பது தான் முக்கியமான தீர்வாகும். சில நேரங்களில் மரபு வழியிலான பிரச்சனையை மாற்ற முடியாது. ஆனால் உடல் பருமனால் உருவாகின்ற இந்த பிரச்சினையை உங்களால் கண்டிப்பாக சரி செய்ய முடியும்.

    அந்த வகையில் உடல் பருமன் குறைப்பு தான், இதற்கு முக்கியமான சிகிச்சை முறையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

    சினைப்பை நீர்க்கட்டியால் ஏற்படும் பாதிப்பால் பெண்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதனை தடுப்பதற்கு முதல் வழிமுறையே வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவது தான்.

    இதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டியை சரிப்படுத்த முடியும். இதை முழுமையாக குணப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தாலும் கூட இதன் பாதிப்புகளில் இருந்து முழுமையாக தங்களை பாதுகாக்க முடியும்.

    சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்னென்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதில் எல்லோருமே மருத்துவர்களிடம் கேட்கின்ற விஷயம், டாக்டர்... உடல் எடையை குறைப்பதற்கு மாத்திரை கொடுப்பீர்களா என்பார்கள். நான் கடந்த 30 வருடங்களாக சினைப்பை நீர்க்கட்டி பாதித்த ஏராளமான பெண்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுதான்.

    உடல் பருமனை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கியமான விஷயம். அதில் முதல் முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. சரி... எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

    என்னிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண், 'டாக்டர் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செல்கிறேன், ஆனால் உடல் பருமன் குறையவில்லை' என்றார்.

    அரை மணி நேரம் நடைபயிற்சி சென்றால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது. அதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    வாரத்துக்கு 3,500 கலோரி குறைப்பு அவசியம்:

    இன்று எல்லோருடைய கையிலும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு கலோரி செலவு செய்கிறீர்கள் என்பதை அறிய நிறைய செயலிகள் இருக்கிறது.

    உடல் எடையை குறைப்பதற்கு ஒரு வாரத்தில் 3,500 கலோரிகள் குறைக்க வேண்டும் என்று நீங்கள் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள்.

    அப்படியென்றால் தினமும் நீங்கள் குறைந்தபட்சம் 500 கலோரிகளை குறைக்க வேண்டும். இதனை நீங்கள் குறைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    ஒரு மணி நேரத்தில் 5 முதல் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் தான், 300 முதல் 400 கலோரிகளை உங்கள் உடல் செலவு செய்யும். இந்த கலோரி கணக்கீடு ரொம்ப ரொம்ப முக்கியம்.

    இதைப்பற்றி பலர் சரியாக தெரிந்து கொள்வதில்லை. தினமும் நடைபயிற்சி செல்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்வார்கள்.

    ஆனால் எவ்வளவு நேரம் என்று கேட்டால் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வார்கள். அரைமணி நேரம் நடைபயிற்சி செல்வார்கள். இது போதாது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு வாரத்துக்கு 3500 கலோரிகளை குறைக்க வேண்டும்.

    ஆனால் 500 கலோரிகளை குறைத்து 1,000 கலோரி அளவு உணவை சாப்பிட்டால் அது தவறு. நமது உடல் உழைப்பு, அன்றாட செல்களின் இயக்கம் ஆகியவற்றுக்காக நமது உடலுக்கு தினந்தோறும் 900 கலோரிகள் தான் தேவை.

    இந்த 900 கலோரிகளை கொண்ட உணவுகளை மட்டும் தினமும் சாப்பிட்டு, தினமும் 500 கலோரிகளை குறைக்க உடற்பயிற்சி செய்தால் தான், தேவையில்லாத கலோரி குறையும். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

    உடற்பயிற்சி செய்வார்கள், ஆனால் நன்றாக சாப்பிடுவார்கள், இது தவறு. கலோரி கணக்கீட்டை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி அதிகம் செய்யுங்கள், உணவை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், இதற்காக அன்றாட உணவு பட்டியலை சரியாக பராமரியுங்கள். உங்கள் உணவு வகைகளில் கலோரிகளை குறைப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

    • 27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை.
    • தன்னம்பிக்கை அதிகமானவர்கள்.

    27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை. கால புருஷ மூன்றாம் ராசியான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளது. இதன் அதிபதி ராகு. இதன் அதி தேவதை சிவன். இதன் உருவம் ரசமணி, பவளமணி என்று கூறப்படுகிறது.

    திருவாதிரை நட்சத்திரம் வான மண்டலத்தில் வைரம் போலவும், மண்டை ஓடு போலவும், திரிசூலம் போன்ற தோற்றத்திலும் காணப்படும்.

    திருவாதிரையின் வேறு தமிழ் பெயர்கள் செங்கை, சடை, (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை, ஆகியன.வானில் நீர்த்துளி போல காணப்படும். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம்.


    திருவாதிரை நட்சத்திர பொது பலன்கள்

    மிதுனத்தின் வேகமான இயல்பையும், புதனின் தன்மையை ராகுவின் இயல்பிலும் கொடுக்கும் நட்சத்திரமாகும். இது மிதுன ராசியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

    ஒரு ராசியின் மத்திமப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்களெல்லாம் அந்த ராசியின் இயல்பை தன் நட்சத்திர அதிபதியின் இயல்பில் கலந்து முழுமையாக வெளிப்படுத்தும். பார்வைக்கும் கம்பீரமானவர்கள்.

    தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்க ளிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

    அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.நிதானமான முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

    சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களை அனுசரித்து செல்லக்கூடிய குணம் இல்லாதவர்கள். சற்று கோபமான குணநலன்களை உடையவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு.

    மலைவாசஸ்தலங்களும், தொலைதூர பயணங்களும் இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.

    தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.சமூதாயத்தில் பிரபலமான நிலையை அடையக் கூடியவர்கள். மிகக் கடினமான வேலையையும் தன் திறமையால் எளிதாக செய்து முடிப்பார்கள்.

    சொன்னதைச் செய்வார்கள்.உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.இவர்களுக்கு ஆளுமைதிறன், செல்வம், செல்வாக்கு உண்டு.

    கல்வி

    ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். கல்வியில் எப்போதாவது ஆர்வம் காட்டுவார்கள். உட்கார்ந்து கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள்.மத்திம வயதிற்கு மேல் படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எலக்டிரிக்கல் இஞ்சினியரிங், ஜோதிடம் அல்லது சைக்காலஜியில் கல்வி கற்றிருப்பீர்கள்.

    எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான பணி, ஆங்கில மொழிபெயர்ப்பு, புகைப்படக்கலை, இயற்பியல் அல்லது கணிதம் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது அது தொடர்பான பணி, தத்துவவியல், நாவல் எழுதுதல், நஞ்சுகள் தொடர்பான மருத்துவம், பார்மசிட்டிகல், கண் மற்றும் மூளை தொடர்பான நோய்களை கண்டறிதல், போக்குவரத்து, கருத்து பரிமாற்ற பிரிவு.

    சைக்கியாட்டரி பிரிவு, துப்பு துலக்குதல், துரித உணவு மற்றும் பானங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்.

    தொழில்

    தனியார் நிறுவனங்களையும் நடத்தும் திறமை மிக்கவர்கள்.இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்க ளது நோக்கமாக இருக்கும்.அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், ரத்தின வியாபாரம், பரம்பரை குலத்தொழில், விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும்.


    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் கடினமாக உழைக்க விரும்புவதில்லை. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைப்பதை அதிகம் விரும்புவார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம் உண்டு. தொழில், அரசியல், சமூக ரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தா லும், பெரும்பாலும் திருமண வாழ்க்கை மன நிறைவைத் தருவதில்லை.

    பலரது இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமை கின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது.

    தொழில் சம்பந்தமானபிரிவுகள் மிகுதியாகவும் தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும்.கௌரவப் பிரச்சினையால் அன்யோன்யம் குறைவுபடும்.

    தசா பலன்கள்: ராகு தசா

    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு முதல் தசா ராகு தசை. இதன் கால அளவு 18 வருடம். இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். பால்ய வயது என்பதால் குடும்பத்தில் சிறுசிறு மனக்குழப்பம் உண்டாகும்.

    ஆரோக்கிய குறைபாடு மிகுதியாகும். வீசிங், சளி தொந்தரவு இருக்கும். பிறந்தவுடன் இடப்பெயர்ச்சி நடக்கும். பிறக்கும் போது மீதமுள்ள ராகு தசா அதிக வருடம் இருந்தால் பள்ளி படிப்பில் நாட்டம் குறையும்.

    குரு தசா

    இது தன தாரையின் நட்சத்திரமாகும்.

    இதன் தசா ஆண்டு 16 வருடம். பிறக்கும் போது ராகு தசா அதிக வருடம் நடத்தால் குரு தசையில் திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம் என அனைத்து சுப பலன்களும் நடக்கும். பிறக்கும் போது ராகு தசா குறைந்த கால அளவாக இருந்தால் குரு தசையில் பள்ளி கல்லூரி படிப்பு சிறப்பாக இருக்கும்.

    பெற்றோர்களுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். குடும்பம் சாதாரண நிலையில் இருந்தால் கூட உயர்வான நிலையை நோக்கி அடி எடுத்து வைக்கும்.

    சனி தசா

    மூன்றாவதாக வரக்கூடியது சனி தசா. இதன் கால அளவு 19 வருடம். இது விபத்து தாரையின் நட்சத்திரமாகும். சிலருக்கு குரு தசையில் சம்பாதித்த அனைத்து பெயர், புகழை இழக்க நேரும். சிலர் தொழில் உத்தியோகம், குடும்ப முன்னேற்றத்திற்காக இடம் பெயர்ந்து செல்வார்கள்.

    பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்பவர்களின் வாழ்க்கை வரமாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் என சுப விரயம் மிகுதியாகும். இது கொடுக்கல், வாங்கலில் நிதானம் கடைபிடிக்க வேண்டிய காலம். வைத்திய செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.

    புதன் தசா

    திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு நான்காவதாக வரக்கூடியது புதன் தசை. இது 17 ஆண்டுகள் நடக்கக்கூடிய தசாவாகும். இது சேஷம தாரையின் தசையாகும். இழந்ததை மீட்டுப் பெறும் நோம். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.

    பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பேரன் பேத்தி என முதுமையை ரசித்து அனுபவிக்கும் காலம். வயது மூப்பு காரணமாக சில ஆரோக்கிய குறைபாடுகள் தலை தூக்கும். சில உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறலாம். கோபம், பிடிவாதம் கூடும்.

    கேது தசா

    ஐந்தாவதாக வரக்கூடியது கேது. இதன் தசா ஆண்டு 7 வருடம். ஆன்மீக நாட்டம் கூடும். எளிமையை மனம் விரும்பும். தான, தர்மம், பாவம், புண்ணியம், மறுபிறவி பற்றிய எண்ணங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.

    ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவார்கள். எதிர்பாராத இடப் பெயர்ச்சியால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் மறைமுக எதிர்ப்புகள் கூடும்.

    சுக்ர தசை

    இது திருவாதிரை நட்சத்தி ரத்திற்கு 6-வதாக வரக்கூடிய சாதக தாரையின் தசையாகும். வயதில் வர வேண்டிய சுக்ர தசை இளவயோதிகத்தில் நடக்கும். முதுமை காரணமாக வசதி வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் பெரியதாக பயன்படாது.

    குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போல் மனம் வெதும்பும். சிலர் படுத்த படுக்கையாக காலம் தள்ளலாம். உடலில் உள்ள சுரப்பிகள் செயல் இழக்கும் . சிலருக்கு வைத்தியச் செலவு கூடும். மனம் அமைதியை விரும்பும்.

    திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்புகள்:

    எள், கடுகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை விதைக்க ஏற்ற நட்சத்திரம்.நடனம் என்றாலே தில்லை கூத்தன் நடராஜன். முதன் முதலாக நடன அரங்கேற்றம் செய்பவர்கள் திருவாதிரையில் செய்தால் மென்மேலும் வளர்ச்சி அடையலாம்.

    இசை கருவிகள் கற்க துவங்க, மந்திரப் பிரயோகம் செய்ய, ஆயுதப் பயிற்சி, வில்வித்தை, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலியவற்றை கற்கலாம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஒரு மர்ம கிரகம் என்பதால் சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் தொடங்கலாம்.

    சிதம்பர ரகசியத்திற்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்தால் சிதம்பர ரகசியத்தை அறிய முடியும் இதன் அதிபதி சிவன் என்பதால் சிவபூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரமாகும்.

    பைரவர் வழிபாட்டை திருவாதிரை நட்சத்திரத்தில் துவங்கினால் காரிய சித்தி உண்டாகி பிரார்த்தனை களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

    திருவாதிரையில் நோய்வாய்ப்பட்டால் எளிதில் குணமாகாது. காரணம் கண்டு பிடிக்க முடியாத எந்த நோயானாலும், குணப்படுத்த முடியாத எந்த நோயாக இருந்தாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்ட பிறகு சிகிச்சை துவங்க வேண்டும்.

    அன்று ருத்ர சாந்தி செய்ய படிப்படியாக நோய் தாக்கம் குறையும். பேய், பிசாசு ஆவிகள் தொல்லை இருப்பவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவாலங்காடு போன்ற சிவ தலங்களுக்கு சென்று சிவனை வழிபட பேண்டும்.

    நட்சத்திர பட்சி:அன்றில்

    யோகம்: அதிகண்டம்

    நவரத்தினம்:கோமேதகம்

    உடல் உறுப்பு: கண்கள்

    திசை: தென்கிழக்கு

    பஞ்சபூதம்:நீர்

    அதிதேவதை: சிவன்

    நட்சத்திர மிருகம்: ஆண் நாய்

    நட்சத்திர வடிவம்: ரசமணி,

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை: புனர்பூசம்,

    விசாகம், பூரட்டாதி

    சேம தாரை . ஆயில்யம், கேட்டை, ரேவதி

    சாதக தாரை: பரணி, பூரம், பூராடம்

    பரம மிக்ர. தாரை : மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜரை வழிபட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.

    தினசரி ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட மேன்மை உண்டாகும். ஜென்ம நட்சத்திரநாளில் கருப்பு உளுந்து தானம் வழங்க வேண்டும்.

    சாதக தாரையான பூர நட்சத்திர நாளில் ஆண்டாள் வழிபாடு செய்து வர சுப பலன்கள் அதிகமாகும்.

    • தன் தாய், தந்தையை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறை நாளை தனக்கும் அந்த நிலைதான் என்பதை உணர்வதேயில்லை.
    • முதியோர்களுக்கென்று மட்டுமே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளை ஊர்தோறும் அமைத்தல் வேண்டும்.

    உலகளவில் இன்றைக்கு பெரிதாக பேசப்படாத ஒன்று உள்ளதென்றால் அது மூத்தோரை புறக்கணித்தல்தான். இன்றைய உலகம் மிகவும் கன்னாபின்னாவென்று மாற்றங்களைப் பார்த்து வருகிறது. மனிதம் என்பதையும் மனிதநேயம் என்பதையும் சல்லடை போட்டு தேடவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

    தன்னலமாய் மனிதர்கள் வாழ்வது என்பது வீட்டில் இருக்கும் பெற்றோரை, தாத்தா பாட்டியை வெளியே அனுப்பிவிட்டு தன் வாழ்க்கைத் துணை, தன்குழந்தைகள் என்பதோடு சுருங்கி நிற்கிறது.

     

    தாத்தா பாட்டிகளின் மடியில் கதைகள் கேட்டு வளர்ந்த தலைமுறைகள் எல்லாம் காணாமல் போய் தாத்தா பாட்டிகள் என்பவர்கள் எங்கோ தனியே வாழ்பவர்கள் அல்லது முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் என்பதைத்தான் இன்றைய இளம்பிள்ளைகள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது எத்தனை வேதனை!

    தன் தாய், தந்தையை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறை நாளை தனக்கும் அந்த நிலைதான் என்பதை உணர்வதேயில்லை.

    இன்றைக்கு இருக்கும் சமூக பொருளாதார நிலை என்பது வேறு. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூக பொருளாதார நிலை என்பது வேறு. இப்போது எல்லா நிலையிலும் வருவாய் என்பது மாறியுள்ளது. விலைவாசி அதிகரித்திருந்தாலும், வாங்கும் சக்தி என்பதும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் வழங்கும் சலுகைகளும் இப்போது அதிகம். ஆனால் வருவாய் குறைவாகவும், வேலைவாய்ப்புகள் அதிகமில்லாமலும் இருந்த காலகட்டத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காகவே தங்களுடைய முழு வாழ்க்கையையும் செலவழித்து தமக்கென்று எந்த சுகத்தையும் அனுபவிக்காத பெற்றோர் கள்தான் இன்றைக்கு அதே பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதரவாக அல்லல்படுகின்றனர்.

    கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று பொருளீட்டி தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், அவர்களை உயர்ந்த பணியில் கைநிறைய சம்பளம் வாங்குபவர்களாக, வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களாக ஆக்கவேண்டும் என்பது மட்டுமே இன்றைய குடும்பங்களின் லட்சியமாக உள்ளது. இந்த எண்ணமோ, முயற்சிகளோ தவறில்லை. ஆனால், இதற்கான ஓட்டத்தில் தங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புறக்கணித்துவிட்டு ஓடுவதுதான் வேதனையாக உள்ளது.

    இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் பிள்ளைகளை வரமாகவும், பெற்றோரை சுமையாகவும் கருதுகிறார்கள். தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு செலுத்தும் கவனத்தில் ஒரு கால்பாகத்தையாவது தன்னைப் பெற்றவர்களுக்கு செலுத்தினால்கூட பரவாயில்லை.

    பெரியவர்களை கூடவே வைத்துக்கொண்டால் அவர்களைப் பராமரிப்பது முடியாது என்று கூறி முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவதும், பலர் அதைக்கூட செய்யாமல் வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிடுவதும் உலகம் முழுக்கவே அரங்கேறி வருகிறது.

     

    பேராசிரியர் ருக்மணி

    பேராசிரியர் ருக்மணி

    அயல்நாடுகளில் மூத்தகுடிமக்களை பராமரிக்க அரசாங்கமே பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருவதை பார்க்க முடிகிறது. நம்நாட்டில் இப்போதுதான் இதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள் நடைமுறைக்கு எப்போது வருமோ!

    ஒரு நாட்டின் மூத்த குடிமக்கள் என்பவர்கள் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் காவலர்கள் என்றால் அது மிகையில்லை. அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரியத்தை சொல்லித்தருபவர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களின் அனுபவங்களை செயல்படுத்தி சமூகத்தை காத்துவருபவர்கள். கொரோனா தீநுண்மி காலத்தில்கூட மூத்த குடிமக்கள்தான் பாரம்பரிய மருத்துவமுறைகளை பயன்படுத்தி தங்கள் குடும்பங்களை காத்து வந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அரசியல், பொருளாதார மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் மூத்தோர்களின் பங்களிப்பை இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மறத்தல் நியாயமாகாது. அதேபோன்று குடும்பத்தை மேம்பாட்டிற்கு கொண்டுவர உழைத்த பெற்றோரின் பங்களிப்பை இன்றைய குடும்பங்கள் மறந்து போவதும் நீதியாகாது.

    முதிர்ந்து, தளர்ந்து கவனிப்பாரற்று வேதனைப்படும் மூத்த குடிமக்களின் நிலையை பல்வேறு கோணங்களில் நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    பெற்றோரை பராமரிப்பது அவர்கள் வயிற்றில் பிறந்த ஆண், பெண் இருவரின் தலையாய கடமை என்பதை சட்டபூர்வமாகவே வலியுறுத்துவதும், அக்கடமையில் இருந்து தவறுபவர்களுக்கு தண்டனைகளை வரையறுப்பதும், அரசுகள் தரும் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்காது என்பதையும் அரசுகள் அறிவிக்க வேண்டும்.

    பெற்றோரை, தாத்தா பாட்டிகளை பராமரிப்பது சந்ததிகளின் கடமை என்பதற்கான சட்டங்களை இயற்றுவதும், அதன்மீதான வழக்குகளை விரைந்து முடித்து மூத்தோரை காக்கும் பணியை அரசு, நீதிமன்றம் உள்ளிட்டவை உறுதிபடுத்தவேண்டும்.

    பெண், ஆண் என வேறுபாடே இல்லாமல் வளர்ந்து ஆளானவுடன், பெற்றோர் மூலமாக கிடைத்த கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொண்டு "காதல்" என்ற பெயரில் தனக்கொரு துணையைத் தேடிக்கொண்டு பெற்றோரைப் பற்றிச் சிந்திக்காத ஒரு தலைமுறையும் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வாறு பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகள் மீது புகார் அளித்து அவர்களுக்குரிய நீதியைப் பெறலாம் என்பதை அரசுகளும், நீதிமன்றங்களும்தான் முதியோர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

    பிள்ளைகள், சந்ததிகள் இல்லாத மூத்த குடிமக்களை பராமரிக்கும் பொறுப்பை மாநில, ஒன்றிய அரசுகள் ஏற்கவேண்டும். மிகத் தரமான முதியோர் இல்லங்களை அனைத்து ஊர்களிலும் ஏற்படுத்துவதும், அங்கு முதியோர்க்குரிய தரமான உணவுகள், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்டவை கிடைக்கவும் வழிவகைகள் செய்யவேண்டும்.

    முதியோர்களுக்கென்று மட்டுமே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளை ஊர்தோறும் அமைத்தல் வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் வழங்குவதில் 50 சதவீதம் கட்டண சலுகைகளை கட்டாயமாக்க வேண்டும்.

    ஏழை முதியோர்கள் உணவருந்த வந்தால் உணவகங்களும் கட்டண சலுகைகளை வழங்க ஏதுவாக அவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கலாம்.

    கிராமங்களில் இன்றும் கூட 70, 75 வயது வரை விவசாயம் பார்த்துக்கொள்ளும் மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்புவரை தேசிய வங்கிகளில் தங்கநகைகளின் மீதான விவசாயக்கடன் மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுவந்தது. அதைப்பயன்படுத்தி விவசாயக் கடன் பெற்று வந்தார்கள். ஆனால் அதை ஒன்றிய அரசு நீக்கிவிட்டு வட்டிவிகிதத்தை தற்போது 9.5 சதவீதமென ஆக்கிவிட்டார்கள். உள்ளதும் போனதென்று நொந்துபோய் உள்ளனர் வயதான விவசாயப் பெருமக்கள். மீண்டும் விவசாயத்திற்கான தங்கநகைக் கடன் 4 அல்லது 5 சதவீத வட்டியில் வழங்கவேண்டும். தொடர்வண்டிகளில் மூத்தகுடிமக்களுக்கான கட்டண சலுகையும் பறிக்கப்பட்டு விட்டதால் எப்போதாவது அவர்களை வெளியே அழைத்துச் செல்லும் குடும்பத்தினரும் கட்டணம் கருதி அழைத்துச் செல்வதுமில்லை. தொடர்வண்டிகளில், விமானப் பயணங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கினால் மூத்த குடிமக்கள் மகிழ்வர்.

    மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் நீண்டுவருவதால், இனி வருங்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கையும் கூடுமென்று ஐ.நா. கூறிவருகிறது. இன்றைய இளையோர் நாளைய முதியோர் என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் கனிவு, கரிசனத்தோடு முதியோர்களை பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுத்தரும் நம் நன்மைக்கான பாடமுமாகும்.

    முதியோர்களுடன் வாழ்வதில் சில குறைபாடுகள், சலிப்பு உள்ளிட்டவை இருக்கத்தான் செய்யும். அவற்றைப் பொருட்படுத்தாமல் சற்று பொறுமையோடு அணுகினால் நாளடைவில் அக்குறைபாடுகளும் காணாமல் போகும். நாம் இந்த உலகிற்கு வர காரணமாய் இருந்தவர்களை இந்த உலகில் அவர்கள் இருக்கும் வரை காப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் ஆகும். இன்று 1-ந் தேதி உலக முதியோர் தினமாகும்.

    • பொள்ளாச்சி கேமரா கண்களை மட்டுமல்ல நமது கண்களையும் கொள்ளையடிக்கும் அழகான ஊர்.
    • கிராமங்களில் அப்படித்தான் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் ஆடி மகிழ்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    வாழ்க்கையில் புதுமைகளை அனுபவிக்கும் அனுபவம் இருக்கிறதே அது மறக்க முடியாத அனுபவமாக இருந்துகொண்டே இருக்கும்.

    சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு வசதியாக இப்போது நடமாடும் பங்களாவைப்போல் கேரவன்கள் வந்துவிட்டன. ஒரு இடத்தில் ஷூட்டிங் நடக்கும்போது மேக்கப் போடுவது உடை மாற்றுவது சிறிது நேரம் ஓய்வெடுப்பது எல்லாமே இந்த நடமாடும் பங்களாவுக்குள் தான். ஆனால் அந்தக் காலத்தில் இப்படி ஒரு வசதியை நாங்கள் பார்த்ததும் இல்லை. அனுபவித்ததும் இல்லை.

    ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன் மரங்களுக்கு பின்னால் நின்றும், நாலு பேர் போர்வைகளை சுற்றி பிடித்துக்கொள்ள அதற்குள் நின்றும் உடை மாற்றிக்கொண்டு நடித்த அனுபவங்கள் உண்டு. இப்போது கிடைக்கும் வசதிகள் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வசதி 2000-ம் ஆண்டு வாக்கில் அறிமுகமானது.

    அறிமுகமானபோது இன்றைய கேரவன்கள் போல் கிடையாது. ஒரு சிறிய கூண்டு வண்டி போல் இருக்கும். காரில் கட்டி இழுத்து வருவார்கள். அதற்குள் மேக்கப் போடுவதற்கு நிலை கண்ணாடி கூட இருக்காது. உட்காருவதற்கு ஒரு சின்ன அறை. ஒரு சிறு டாய்லெட். அதற்குள் செல்லும்போது இடிக்கும். இவ்வளவுதான் வசதிகள் இருந்தது. அதுவும் கதாநாயகிகளுக்கு தர மாட்டார்கள். ஹீரோவுக்கு மட்டும்தான். அந்த வசதியை கொடுப்பார்கள் உடை மாற்றுவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பது பெண்களாகிய நாங்கள் தான்.

    ஆனாலும் வசதிகளை செய்து கொடுப்பது ஹீரோக்களுக்கு தான். அதற்காக எதுவும் சொல்ல முடியாது. இதுதான் நிலைமை. அதன் பிறகு அந்த கூண்டு வண்டிகள் தாராளமாக கிடைக்க ஆரம்பித்ததும் நாங்களே வாடகைக்கு அமர்த்திக் கொள்வோம். ஷூட்டிங் செல்லும்போது அந்த கேரவன்களை வைத்துக் கொள்வோம்.

    ஆனால் இப்போது கேரவன்கள் தாராளமாகி விட்டன. அது மட்டுமல்ல அதற்குள் வசதிகளும் ஏராளம் வந்துவிட்டன. ஒரு டோர் வேன்களும் இருக்கின்றன. இரண்டு டோர் வேன்களும் இருக்கின்றன. அதற்குள் இருந்தால் குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஒரு பங்களாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது நவீனங்களின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றம்.

    பொள்ளாச்சி...

    பொள்ளாச்சி கேமரா கண்களை மட்டுமல்ல நமது கண்களையும் கொள்ளையடிக்கும் அழகான ஊர் அதனால் தான் தமிழ், தெலுங்கு என படப்பிடிப்பு குழுவினர் பலரும் முற்றுகையிடுகிறார்கள்.

    இந்தப் பகுதியின் இயற்கை காட்சிகளும் இதமான சூழ்நிலையும் படப்பிடிப்புக்கு உகந்ததாக அமைந்துள்ளது. முன்பெல்லாம் பொள்ளாச்சியில் மாதம் தோறும் சென்று தங்குவோம். அங்கு ஓட்டல் சக்தி பிரபலமானது. அந்த ஓட்டலில் இரண்டாம் தளத்தில் அறை எண் 210 பெரும்பாலும் எனக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அது சூட் போன்ற மிகப்பெரிய அறையும் அல்ல. மிகச் சிறிய அறையும் கிடையாது. ஆனால் வசதியாக இருக்கும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் எல்லோருக்குமே தெரியும் மீனா வந்தால் அறை எண் 210-ல் தான் தங்கி இருப்பார் என்று. எனவே என்னை சந்திக்க நேரடியாக அங்கே வந்து விடுவார்கள். அந்த அளவு அந்த ஓட்டலுக்கும் அந்த அறைக்கும் எனக்கு ராசி உண்டு.

    பொள்ளாச்சியை சுற்றிய பகுதிகளான வால்பாறை, ஆனைமலை என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கும். வால்பாறை என்றால் அங்கு தான் செல்ல வேண்டும் என்பது அல்ல. போகும் வழிகளிலேயே வயல்வெளிகள், மரங்கள் சூழ்ந்த பகுதிகள் என்று பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கெல்லாம் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அவ்வளவு ஏன் செட் அமைத்துக் கூட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஏனெனில் அந்த செட்டுக்கு பின்னணியில் மலையும் மலை சார்ந்த இடங்களும் தெரிவது காட்சி அமைப்புக்கு பிரமாதமாக இருக்கும்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் வீடுகளும் அழகாக இருக்கும். பல வீடுகளில் வைத்து கூட படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

    பிரபு சாருடன் நான் நடித்த ராஜகுமாரன் படத்தில் இடம்பெற்ற

    என்னவென்று சொல்வதம்மா

    வஞ்சி அவள் பேரழகை

    சொல்ல மொழி இல்லையம்மா

    கொஞ்சி வரும் தேரழகை...

    - என்ற பாடலுக்கு ஒரு ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி அதில் ஆடி கொண்டிருப்பேன்.

     

    கிராமங்களில் அப்படித்தான் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் ஆடி மகிழ்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாகவே பொள்ளாச்சி பகுதியில் அப்படி ஆடியபோது படப்பிடிப்புக்காக ஆடுகிறோம் என்பதையும் தாண்டி மனதுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அலைமோதியது.

    பக்கத்திலேயே நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்த ஆறு. அந்த மாதிரி இடங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து இருந்தாலும் 'போர்' அடிக்காது.

    இதே பொள்ளாச்சியில் தான் ரஜினி சாருடன் எஜமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்ப வேண்டும்.

    பொள்ளாச்சியில் இருந்து காரில் கோவை வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்போது ஏர் இந்தியா விமானம் மட்டும் தான்.

    விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் தான் இருந்தது. அப்போது தான் நாங்கள் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டோம். விமானம் புறப்படுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு கவுண்டரை மூடிவிடுவார்கள்.

    ரஜினி வருவது பற்றி ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதனால் அவர்கள் காத்திருந்தார்கள்.

    15 நிமிடங்களுக்கு முன்பு தான் விமான நிலையத்தை அடைந்தோம். எல்லோரும் ரஜினிக்கு பின்னால் விறுவிறு என்று ஓடி விமானத்தை பிடித்து விட்டோம்.

    அந்த எஜமான் (ரஜினி) இல்லைன்னா எங்களால் நிச்சயமாக அன்று விமானத்தை பிடித்து இருக்க முடியாது.

    கவர்ச்சியில் கலக்கினேன்! கலங்கியும் போனேன்!!

    கவர்ச்சி சினிமாவுக்கு முக்கியமா என்றால் அதுவும் வேண்டும் என்பேன். ஆனால் வெறும் கவர்ச்சியினால் மட்டும் சினிமா ஜெயிக்காது. கதை, நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு என்று எல்லாமும் சிறப்பாக அமைந்தால் தான் படமும் சிறப்பாக இருக்கும்.

    சினிமாவில் கதாநாயகியை விட குடும்ப நாயகியாகத்தான் எல்லோரும் என்னை பார்க்கிறார்கள். அது எனக்கும் பெருமையாக உள்ளது. சினிமாவில் கவர்ச்சியும் ஒரு ரோல்தான் என்பதால் என்னை சுற்றியி ருப்பவர்கள் 'கவர்ச்சியான வேடத்தில் நீ ஏன் நடிக்க கூடாது? என்று அடிக்கடி கேட்பார்கள்.

    கவர்ச்சியான கேரக்டராக முயற்சி செய்வதில் என்ன தவறு? நாமும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தேன்.

    பிரபுதேவாவுடன் நடித்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் நீச்சல் உடையை அணிந்து மேக்கப் அறையை விட்டு என்னால் வெளியே வரமுடியவில்லை. உடை மிகவும் இறுக்கமாக இருந்தது. இந்த உடையில் எப்படி வெளியே செல்வது என்று ரொம்ப தயங்கினேன். இதை வெளியே சொல்லக் கூட கூச்சமாக இருந்தது. பெரும்பாலும் நெருக்கமான காட்சிகள், கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தேன். அதற்கு காரணம் வெட்கமும், பயமும்தான்.

    அடுத்து ஒரு பரபரப்பான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    • கனவிலும் பிறருக்குத் தீங்கு செய்யாத எண்ணம் இருந்தால் தவம் கைகூடி சித்தி பெறலாம்.
    • பக்தியும் புண்ணியமுமே குருஅருளை பெற்றுத்தரும்.

    அதிகாரம்: கொல்லாமை

    இந்த அதிகாரத்தில்,

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

    பிறவினை எல்லாந் தரும்.

    என்ற குறளில் தொடங்கி

    உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

    செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    உயிர்களைக் கொலை செய்வது பாவம். எந்த உயிர்களை, எந்தக் காரணத்திற்காக கொலை செய்தாலும் அது பாவமே. சிலர் தற்காப்புக்காக கொல்கின்றோம் என்று கூறி, தின்பண்டங்களைப் பாதுகாப்பதற்காக ஈ, எறும்பு போன்ற உயிர்களைக் கொலை செய்வார்கள். அவ்வாறு செய்யாமல் அதற்கு வேறுவகையான யுக்தியைக் கையாண்டு பாதுகாத்துக் கொள்ளலாம்.

    எந்த உயிர்களைக் கொலை செய்தாலும் அதற்குரிய தண்டனை அந்த ஆன்மாவையே சார்ந்து, அந்த ஆன்மாவிற்குக் கெடுதலை உண்டாக்கும். உயர்நிலையில் உள்ள ஞானிகள், சான்றோர்கள் தமக்குத் துன்பம் ஏற்பட்டாலும் கூட பிற உயிர்களைக் கொலை செய்ய மாட்டார்கள். அவர்கள் கருணையே வடிவானவர்கள்.

    உயிர்க்கொலை செய்வது பாவம் என்பதையும் அவர்கள் நமக்கு வலியுறுத்துகின்றார்கள். தன் உயிரை வளர்ப்பதற்காகவும் சுவைக்காகவும் பிற உயிர்களைக் கொல்வார்கள்.

    இதுவும் பாவமே. நம்மிடம் பிறர் உதவி கேட்டால் தக்க நேரத்தில் கொடுத்து உதவ வேண்டும். கொடுப்பதாகக் கூறி மனதில் வஞ்சம் வைத்து இறுதிக் கட்டத்தில் இல்லை என்று ஏமாற்றி னால் அது கொலை செய்வதை விட கொடுமையான பாவம். நன்றி மறப்பது உயிர்க் கொலை செய்வது போன்றதே.

    தினந்தோறும் மனைவியை அடித்துச் சித்ரவதை செய்வதும் நித்தியக் கொலையே. தாய், தந்தையர் செய்த நன்றியை மறந்து அவர்களுக்குத் துன்பம் செய்தால் அதுவும் ஒருவகைக் கொலையே. வேலை செய்பவனை கசக்கி பிழிவதும் ஒருவகை கொலையே.

    ஆக, சொல்லால் கொல்லுதல், செய்கையால் கொல்லுதல், சிந்தனையால் கொல்லுதல் போன்ற பலவகையான கொடுமைகளும் கொலைகளே! தவம் மேற்கொள்கின்றவர்கள் ஈ, எறும்பு போன்றவற்றைக் கொன்றால்கூட தவம் கைகூடுவதில் தடை ஏற்படும்.

    கனவிலும் பிறருக்குத் தீங்கு செய்யாத எண்ணம் இருந்தால் தவம் கைகூடி சித்தி பெறலாம். அதற்குத் திருவடி துணை வேண்டும். புலால் உண்ணுகின்ற பழக்கம் நின்றாலே உயிர்க் கொலை செய்கின்ற பழக்கம் நின்று போகும். உயிர்க்கொலை செய்தால் ஆன்மாவிற்குப் பாவம் சூழும், ஆன்மாவிற்குப் பாவம் சூழ்ந்தால் அறிவு மங்கிவிடும்; அறிவு மங்கினால் அறியாமை சூழும்; அறியாமை சூழ்ந்தால், வறண்ட மனம் உருவாகிப் பிற்காலத்தில் தனித்து நிற்கின்ற சூழ்நிலை உருவாகும்.

    மனித வர்க்கம் முன்னேற வேண்டுமாயின் பிற உயிர்களைக் கொலை செய்கின்ற எண்ணம் இருக்கக் கூடாது. அப்போது ஆன்மா ஆக்கம் பெறும். உயிர் ஆக்கம் பெற்றால், உடல் ஆரோக்கியம் உண்டாகும், வறுமை தீரும். உயர்ந்த சிந்தனைகளும் குழப்பம் இல்லாத தெளிவான அறிவும் நல்ல நட்பும் உண்டாகும். அதற்கு ஞானிகள் ஆசியைப்பெற வேண்டும். கொலை செய்தால் தலைவனின் கருணையை நாம் பெற முடியாது.

    பல உயிர்களுக்கு நன்மை செய்தால்தான் ஆன்மாவைக் கடைத்தேற்ற முடியும். உயிர்க்கொலை செய்தால் எமன் விரைவில் நம்மைப் பற்றிக் கொள்வான். சிலர் சில உயிர்களை அடித்துப் பாதியில் போட்டு விட்டு, அது துடிப்பதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். அது கொடுமையிலும் கொடுமை. இத்தகைய துன்பத்தை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். லட்சோப லட்சம் பிறவிகளை எடுத்து வந்துள்ளோம். ஒவ்வொரு ஜென்மத்திலும் அறியாமையின் காரணமாகவும், அகந்தையின் காரணமாகவும், கவனக்குறைவு காரணமாகவும், கர்வத்தின் காரணமாகவும், கொலை செய்த பாவம் குழும்.

    அதனால் மீண்டும் பிறந்து அதனை அனுபவிக்க வேண்டும். மீண்டும் பிறவாமல் இருக்க உயிர்க் கொலை செய்யக்கூடாது. உயிர்க்கொலை செய்ய அஞ்ச வேண்டும். செல்வத்தை இழந்தவன் கூட மீண்டும் செல்வத்தைத் தேடிக்கொள்ள முடியும். ஆனால், தவசிகளின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தால் அவனுக்கு விமோச்சனம் கிடையாது. அதற்குப் பரிகாரம் தேடமுடியாது. தவம் மேற்கொள்பவர்கள் கோபம் கொள்வது கொலைக்குச் சமமானது. அதனால் பலநாள் செய்த தவம் கெடும்.

    கோபம் கொள்ளாமல் இருக்க தலைவனை உருகித் தியானிக்க வேண்டும். கோபம் கொண்டு பிறரைச் சபித்து, உயிர்களை அழிக்கின்ற தவசிகளுக்கு, அடக்கத்துடன் உயிர்க்கொலை செய்யாது பல உயிர்களுக்கு நன்மை செய்கின்ற இல்லறத்தானே தலைவன் ஆகத் தகுதியுடைய வன் ஆவான். கோபத்தை வென்றவனே உண்மையான துறவி. நாம் எவ்வளவு பாடுபட்டு உயர்ந்தாலும் உயிரைக் கொன்றால், எல்லா பாவங்களும் சூழ்ந்து நாம் பாவியாகி விடுவோம்.

     

    தவத்திரு. ஆறுமுக அரங்கமா தேசிக சுவாமிகள்

    தவத்திரு. ஆறுமுக அரங்கமா தேசிக சுவாமிகள்

    தம் உயிரே போவதாக இருந்தாலும் பிற உயிரைக் கொலை செய்தல் கூடாது என்ற வைராக்கியம் மேற்கொள்ளுதல் வேண்டும். சிலர் சிறுதெய்வத்திற்கு உயிர்களை பலியிடுவார்கள், தாங்கள் உயர்நிலை அடைவதற்காக அவ்வாறு செய்வதாகக் கூறுவார்கள்.

    அத்தகைய வன்செயலை உயர்ந்த நிலையில் உள்ள சான்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாத்வீகவாதிகள், ஆன்மீகவாதிகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகிறவர்கள் இந்த செயலை ஏற்க மாட்டார்கள்.

    இத்தகையவர்களைப் பார்ப்பதே கொடியது என்று சான்றோர்கள் கூறுவார்கள். புகழ் வாய்ந்தவர்கள், அதிகார பலம் படைத்தவர்கள், பணபலம் உள்ளவர்கள், படைபலம் உள்ளவர்கள், மன்னர்கள் ஆகியோர் பிறர் தங்களை இடறிப் பேசினாலும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் கோபம் கொண்டு பிறரை அழித்தால், அவர்களின் செய்வழும் புகழும்கூட அவர்களுக்கு ஆபத்தாக இருக்கும்.

    அருவருப்பான தேகத்துடன் அருகில் செல்லவே அஞ்சக்கூடிய வகையில், நோய்வாய்ப்பட்டுக் கிடப்பார்கள். இவர்களெல்லாம் அறியாமையின் காரணமாகவோ, அகந்தையின் காரணமாகவோ அல்லது புலால் உண்ணுவதற்காகவும் பல உயிர்களைக் கொன்று குவித்திருப்பார்கள். அவர்களே இத்தகைய நிலையை அடைவார்கள். அவர்கள் நாடாளும் மன்னராக இருந்தாலும் இத்தகைய நிலையை அடைய நேரிடும்.

    கொலை செய்கின்ற வன்மனத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிப்பார்கள். உயிர்க்கொலை செய்வதைத் தவிர்த்து பிற உயிர்களுக்கு உபகாரம் செய்பவர்கள், மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம். அதற்குச் சான்றோர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். திருமந்திரம், திருக்குறள். திருஅருட்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். குரு அருள் பெறுவதற்கு கொல்லா நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    பக்தியும் புண்ணியமுமே குருஅருளை பெற்றுத்தரும். ஞானிகள் கருணைக் கடலாக விளங்குபவர்கள். அவர்கள் திருவடிகளைப் பற்றி, பூஜை செய்தால், நம் மனமும் கருணையோடு இருக்கும். அப்போது தெளிந்த அறிவு ஏற்படும். தெளிந்த அறிவு ஏற்பட்டால் தன்னைப் பற்றி அறியான், தன்னைப் பற்றி அறிந்து, தனக்குள்ள பலகீனங்களை நீக்கிக் கொள்வான். நீக்கிக் கொண்டால், மலமாயை அற்றுப்போகும். மீண்டும் பிறவாமல் இருக்க தலைவன் அருள் செய்வான். எனவே மனத்தை வென்று மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.

    • நரம்பு மண்டலத்தினை காக்க பெரிதும் உதவுகின்றது.
    • இதய பாதிப்பு, மறதி பாதிப்பு ஆகியவற்றினையும் ஏற்படுத்தலாம்

    நம்மிடையே ஒரு பழக்கம் உண்டு. மாத்திரை, ஊசி என பாதிப்பிற்கு ஏற்ப ஒருவருக்கு அறிவுறுத்தப்படும் போது நமக்கு நாமே சுய பரிதாபம் கொள்வோம். பயப்படுவோம், டாக்டர் அதிக மருந்து கொடுத்து விட்டார் என அவர் மீது குறை கூறுவோம்.

    உடலுக்கு வைட்டமின் சத்து குறைபாடு இருக்கின்றது. இந்த சத்து மாத்திரையினை எடுத்துக் கொள்ளுங்கள் என டாக்டர் சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் சிலர். மனதில் தோன்றியதை எல்லாம் சாப்பிடுபவர் சிலர். முறையாய் பின் பற்றுபவரா? நீங்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் சத்து குறைபாடு என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. அதில் ஒன்றான வைட்டபின் பி-12 வைட்டமின் சத்து குறைப்பாட்டினைப் பற்றி பார்ப்போம்.

    இதன் ஆரம்பகால அறிகுறிகளாக, உடல் பலவீனம், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை காணப்படும். இந்த குறைபாடு உணவு, மருந்துகள், ஏதோ உடல்நலக்குறைவு ஆகியவைகளின் காரணமாக இருக்கலாம்.

    வைட்டமின் பி12- இந்த சத்துக்கள் நரம்புகள், ரத்த அணுக்கள் இவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாகும். நரம்பு மண்டலத்தினை காக்க பெரிதும் உதவுகின்றது.

    இதன் குறைபாடு தொடரும் போது நரம்பு மண்டலம், மூளை, ரத்த சோகை இவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகள் கடுமையாகலாம்.

    வைட்டமின் பி12 குறைபாடு- ரத்தசோகை, சோர்வு, பலவீனம், பசியின்மை, எடை குறைவு, சிந்திப்பதில் தடுமாற்றம், மனச்சோர்வு, வாய், நாக்கில் புண், செயல்பாடுகளில் கடினம் என கூறிக் கொண்டே செல்லலாம்.

    ரத்த சோகை காரணமாக-மயக்கம், தலைவலி, வெளிர்ந்த சருமம், படபடப்பு, காதில் இரைச்சல், பசியின்மை ஆகியவையும் கூடும்.



    நரம்பு பாதிப்பு காரணமாக- கை, கால் மரத்து போகுதல், மறதி, நடையில் தடுமாற்றம் ஆகிய பாதிப்புகளும் ஏற்படும்.

    ஆய்வுகள் கூறுவது தொடர் பி12 குறைபாடு- இதய பாதிப்பு, மறதி பாதிப்பு ஆகியவற்றினையும் ஏற்படுத்தலாம் என்பதுதான்.

    இருதய பாதிப்பாக குறிப்பிடும் போது இருதய நோய், பக்க வாதம் இகைளை குறிப்பிடுகின்றனர்.

    தேவையான அளவு இந்த வைட்டமின் கிடைக்காத போது குறைபாடு ஏற்படு கின்றது.

    ஆக வைட்டமின் பி12 சத்து பலன்களாக இருதய நோய் பாதிப்பு குறைவு, பக்கவாத பாதிப்பு அபாயம் குறைவு, கண் பார்வை மங்குதல் அபாய நிறைவு, நரம்பு மண்டல பாதுகாப்பு, வளர்சிதை மாற்றங்கள் சீராய் இருத்தல், நல்ல மனநிலை, ஆரோக்கியமான ஜீரண இயக்கம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

    அன்றாட உணவில் பி12 சத்து கொண்ட உணவுகளாக மீன், முட்டை, பால், பழ ஜூஸ்கள், சோயா என மேலும் சில உணவுப் பொருட்களை குறிப்பிடலாம்.

    சில உணவுகள் அவரவர் உடல் நலனுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதால் மருத்துவர், சத்துணவு நிபுணர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைக்கேற்ற முறையில் மருத்துவர் சிபாரிசு செய்வார்.

    சிகிச்சையின் போது நீண்ட கால பி12 குறைபாடு இருக்குமாயின் இருதய நோய் பாதிப்பு, கடுமையான நரம்புகள் பாதிப்பு, குடல் புற்று நோய், மூட்டு வலி பாதிப்பு, தசைகளின் பலம் இழப்பு, தைராய்டு பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.

    சைவ உணவு உட்கொள்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இவர்களுக்கு பி12 சத்து குறைபாடு உள்ளதா? என மருத்துவர் பரிசோதனை செய்வார்.

    பி12 சத்து குறைபாடு சிலருக்கு மாறுபட லாம். பெண்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கலாம்.

    இதற்கான அறிகுறிகளை, உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் மருத்துவர் கண்டறிவார், ஊசி, மாத்திரை, உணவு முறை மூலம் இதனை சரி செய்வர்.

    ஒருவருக்கு தன் அன்றாட நாள் நேரத்தினை பிரித்து வகுத்துக் கொள்வதில் சற்று குழப்பம் இருக்கும். அவர்கள் இவ்வாறு கூட முயன்று பார்க்கலாமே.

    காலையில் யோகா, உடற்பயிற்சி, தியா னம் செய்து முதல் நாள் எழுதி வைத்த வேலைகளை ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். ஆரோக்கியமான குளியல், ஆரோக்கியமான காலை உணவு முடித்து பின்னர், காலை வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

    மதியத்தில் முக்கிய வேலைகளை முடித்து விட வேண்டும். மதிய உணவுக்கு பின் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

    மாலையில் 7 மணிக்குள் இரவு உணவினை முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் காலாற சற்று நடக்கலாம். மறுநாளைக்கான வேலைகளை எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம். 20 நிமிடங்கள் படிக்கலாம், உறங்க செல்லலாம். இப்படி முயன்ற வரை செய்து பார்ப்போமே.


    * குட்டி தூக்கம் (பகலில்), யோகா, நடை பயிற்சி இவை உடலுக்கான ஓய்வினை தரும்.

    * புத்தகம் படிப்பது, தன்னை கவனித்துக் கொள்வது, மூளைக்கான புதிர், குறுக்கெ ழுத்து விளையாட்டு, எதனையும் முழு கவனத்துடன் செய்வது இவை மனம் சார்ந்த ஓய்வாகும்.

    * அதிக டி.வி., கம்ப்யூட்டர் உபயோ கிக்காது இருப்பது, நல்ல புத்தகங்கள் படிப்பது மன நலன் காக்கும்.

    * எழுதுவது, வரைவது இவை உங்கள் திறமையைக் கூட்டும்.

    * தியானம், ஆன்மீக நிம்மதி தரும். நம் உடல் நலன் நம் உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது என்பர்.

    * பொதுவான சாதாரண தலைவலிக்குக் காரணம் ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் என்கின்னர்.

    * கழுத்து வலி- பிறரை மன்னிக்க முடியாத வகையில் கொதிக்கும் உணர்ச்சிக ளோடு இருப்பது அல்லது தன் தவறினை தானே மன் னிக்க முடியாது இருப்பதால் ஏற்படலாம்.

    * தோள் பட்டை வலி-அதிக வேதனை உணர்ச்சிகள் தருவது.

    * மேல் முதுகு வலி- தன் மீது யாரும் அன்பு செலுத்த வில்லை என்ற ஏக்கம்.

    * கீழ் முதுகு வலி-பணத்தைப் பற்றி சதா கவலை.

    * கை முட்டி வலி- வாழ் வில் மாற்றங் களை, தாக்கு தல்களை ஏற்க முடியாமல் இருப்பது.

    * இடுப்பு வலி- முடிவுகள் எடுக்க முடி யாத தவிப்பு.

    * கணுக்கால் வலி- தன்னைத் தானே வெறுப்பது.

    இதனை ஒரு இத்தாலிய ஆய்வாளர் எழுதியிருந்தார். இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாதுதான். ஆனால் மனநல பாதிப்பே உடல் நல பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்பது உறுதி.

    இதனை பகிர்வதன் நோக்கமே மனநலம் என்பது மிக அவசிய மானது என்பதனை உணர்த்தத்தான். எனவே ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், செயல்கள் இவற்றில் மனதினை செலுத்தி உடல் நலனைக் காப்போம்.


    வைட்டமின் பி12 பற்றி பார்த்தோம். அதன் அறிகுறிகள், பாதிப்புகளும் பார்த்தோம். இதன் குறைபாடு இரவில் காட்டும் சில அறிகுறிகளும் உள்ளன.

    * சிலருக்கு மிகவும் சோர்ந்து இரவு படுக்கச் செல்லும் போது தசைகளில் வலி, பிடிப்பு என்று இருக்கும். இது என்றாவது ஒருநாள் என்றால் அது ஓய்விற்குப் பிறகு சரியாகி விடும் எனலாம்.

    ஆனால் அன்றா டம் பிடிப்பு, பல வீனம் என தசை களில் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணு கவும். பி12 குறை பாடு இருக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

    * இரவில் அதிக ஜீரண கோளாறு போல் உணர்ந்தால்- வயிற்று பிரட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அதிக காற்று வெளியேறுதல், மலச்சிக்கல் ஆகியவை இருந்தாலும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

    * இரவில் அன்றாடம் தலைவலி ஏற்பட்டால்...

    * தூக்கமின்மை- இதற்கு பல கார ணங்கள் இருக்கலாம். ஆனால் சில வா ரங்கள் தொடர்ந்து முழுமையான தூக்கம் இல்லாவிடில் வைட்டமின் பி12 சத்து குறைபாடும் ஒரு காரணமாக இருக்க லாம்.

    * படுக்கும் போது காலில் இறுக பிடிப்பது போல் இருந்தாலும் பி12 சத்து குறைபாடு இருக்கின்றதா? என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    இவை விழிப்புணர்விற்காக எழுதப்படு பவை. இதனை வைத்து தானே ஒருவர் சுய சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.

    மருத்துவர் குறிப்பிடும் அளவு, காலம் இவை மிக அவசியம். மனம்போன போக்கில் தானே சத்து மாத்திரை எடுத்து உடலில் பி12 அதிகமாகும் போது கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    அடிக்கடி தலைவலி வாந்தி, வயிற்றுப் பிரச்சனை போன்றவை பி12 அதிகம் இருப்பதாலும் ஏற்படலாம். ஆகவே மருத்துவர் ஆலோசனையை முறையாய் பெற வேண்டும் என்பதனை உணர்வோமாக.

    ×