என் மலர்
இந்தியா

West Bengal: ஆளுநர் ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா அதிர்ச்சி அளிக்கிறது - மம்தா பானர்ஜி
- புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.
- தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் டெல்லியில் உள்ள லோக்பவனில் நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் 3.5 ஆண்டுகள் பதவியில் இருந்தநிலையில் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.
திடீர் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்" என பதிலளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த போஸின் ராஜினாமாவை தொடர்ந்து, மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தி எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் எனக்கு தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம் மரபுகளின்படி என்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலையொட்டி உள்துறை அமைச்சகம் தந்த அழுத்தத்தால் போஸ் ராஜினாமா செய்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆனந்த போஸ் மம்தா பானர்ஜி அரசு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.






