வரிக்குறைப்பு... அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - தாறுமாறாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை

அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
வரிக்குறைப்பு... அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - தாறுமாறாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை
Published on

பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.

எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com