என் மலர்
இந்தியா

பதிவுத் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் கட்டாயம்.. காதல் ஜோடிகளுக்கு செக் வைத்த குஜராத் அரசு!
- அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருகிறது.
- படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்தனர்.
குஜராத்தில் பதிவு திருமணம் செய்ய இனி பெற்றோர் சம்மதம் கட்டாயம் என என சட்டம் இயற்ற உள்ளதாக அங்கு ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.
குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய ணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
காதல் திருமணம் என்ற பெயரில் அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருவதாக கூறிய அவர், இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அரசு காதல் திருமணங்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்தத் திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஒரு குழுவின் ஆய்வுக்குப் பிறகே இது இறுதிச் சட்டமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிட்டோம் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உதவிப் பதிவாளர் மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தெரிவிப்பார்.
அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.
பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்த நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வழக்கறிஞர் மகேஷ் பாரியா கூறுகையில், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை இது மீறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.






