என் மலர்
இந்தியா

ரீல்ஸ் மோகத்தின் உச்சம்... ஓடும் ரெயிலில் வாலிபர் செய்த செயல்... ரெயில்வே துறை அதிரடி நடவடிக்கை
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
- சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஓடும் ரெயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் ஸ்லீப்பர் கோச்சில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரியவந்தது. அவர் சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குளித்து ரீல் வீடியோ எடுத்து பதிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.






