என் மலர்
இந்தியா

மும்பையில் 7 பள்ளிச் சிறுமிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்த ஆசாமி கைது - அதிர்ச்சி சம்பவம்
- சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 7 பள்ளி சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் தகிசர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையாட வரும் சிறுமிகளை இலக்கு வைத்து இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 7 சிறுமிகளும் 6 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள். இந்த நபர் சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அந்த நபர் மேலும் 6 சிறுமிகளுக்கு இதேபோன்று தொல்லை கொடுத்தது அம்பலமானது.
போலீசார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அங்குஷ் பரத்வாஜ் என்ற யூடியூபர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தங்கியிருந்த பிரமோத் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர், யூடியூபர் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






