சபாநாயகர் அறைக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள்? - கிரண் ரிஜிஜூ புது வீடியோ

பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்
சபாநாயகர் அறைக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள்? - கிரண் ரிஜிஜூ புது வீடியோ
Published on

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com