search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா கட்சியின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு
    X

    மம்தா கட்சியின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு

    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் நாளை நடத்தும் பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்தியில் நடைபெறும் மோடி தலைமையிலான அரசை வீழ்த்தவும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைக்கவும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

    அவ்வகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நாளை சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இந்த பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளதாவது:-

    மதங்களுக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்டு, ஒவ்வொரு தனிமனிதனின், பெண்ணின், குழந்தையின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும் நாளைய இந்தியா உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. மோடி அளித்த போலி வாக்குறுதிகள் மற்றும் அவரது அரசு கூறிவரும் பொய்களால் ஏமார்ந்த பல்லாயிரம் கோடி மக்கள் இந்த சக்திவாய்ந்த அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

    மோடி அரசு அழிக்க நினைக்கும் ஜனநாயகத்தின் தூண்களையும், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க உண்மையான நாட்டுப்பற்று அவசியம் என்ற காங்கிரஸ் கட்சியின் சித்தாந்த நம்பிக்கையின் பக்கம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரண்டுள்ளன.

    இந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்லாண்டு காலமாக மேற்கு வங்காளம் மாநிலத்து மக்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைந்துள்ளது என்னும் செய்தியை வெளிப்படுத்தும் மம்தா பானர்ஜி தலைமையிலான நாளைய பேரணிக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally
    Next Story
    ×