என் மலர்
செய்திகள்

சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் உடல் மீட்பு- போலீஸ் அடித்துக் கொன்றதாக பாஜக குற்றச்சாட்டு
சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் போலீசார் நடத்திய தடியடியில் கொல்லப்பட்டதாக மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். சில பகுதிகளில் வன்முறையும் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், சபரிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இன்று ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நடத்திய தடியடியில் ஐயப்ப பக்தர் சிவதாசன் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் உள்துறை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

‘பந்தளத்தில் இருந்து ஐயப்ப பக்தர் சிவதாசன் சைக்கிளில் கோவிலுக்கு வந்தபோது பிலாப்பள்ளி வனப்பகுதியில் போலீசார் நடத்திய தடியடியில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் அக்டோபர் 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, இந்த கொடூர செயலுக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 17ம் தேதி நடத்தப்பட்ட தடியடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
Next Story