என் மலர்tooltip icon

    கதம்பம்

    • உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன.
    • கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர்.

    வாழ்வதற்கு உணவு எவ்வாறு அவசியமோ, அதைப்போல தாம்பத்ய உறவு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குழந்தை வளர்ச்சிக்கு வேண்டிய முழு சக்தியும் ஊட்டமும் எப்படி தாய்ப்பாலில் உருவாகி சுரக்கிறதோ, அதேபோல் இல்வாழ்வில் உடல் வளர்ச்சிக்கும் நலனுக்கும் வேண்டிய ஊக்க சக்தியும் உணர்வுகளும் தாம்பத்யத்தால் உருவாகின்றன.

    பொன்னால் ஆன ஆபரணங்களைப் பார்த்தும் அணிந்தும் மனித இனம் சந்தோஷப்படுகிறது. பொன்னும் பொருளும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை இல்லை. ஆனால், உடலின் தேவையைத் தரவும், உள்ளத்தின் தாகத்தைத் தணிக்கவும், மனதின் அழுத்தங்களைக் குறைக்கவும், நோய் இன்றி உடல் நலம் காக்கவும் தாம்பத்ய உறவு அடிப்படை. இது இயற்கை அளித்த நலம் தரும் மாமருந்து.

    இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. உறவு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் இல்வாழ்க்கை கொடு நரகமாகிவிடும். இத்தகைய நிலையில் கணவன்-மனைவியிடையே கசப்புணர்வு மேலோங்கும்.

    இல்வாழ்வில் உடல் உறவு இல்லாமை அல்லது போதாமைதான் துன்பங்களுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியும். உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன. இதன் விளைவாக, கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர். பழிவாங்கும் நிலைக்குக்கூடச் சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாற்றாரோடு உறவு; சில சமயங்களில் மண முறிவு.

    ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்தான். அவர்கள் இடையே காதலையும் கவர்ச்சியையும் படைத்தான்.

    காதலுக்கு அடிப்படையாக அன்பையும், தியாகத்தையும் மனிதர்கள் இதயத்தில் தோற்றுவித்தான். எனவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் கலவி இன்பம் கண நேர பொழுதுபோக்கு அல்ல. அது நிலைத்த மகிழ்ச்சிக்கான முதலீடு. நிச்சயமாக சிற்றின்பம் அல்ல. அது பேரின்பம்.

    சமூகத்தாலும், மனசாட்சியாலும் அங்கீகரிக்கப்படாத முறையற்ற வழிகளில் அயலாருடன் பெறும் கண நேர சந்தோஷமே சிற்றின்பம். குறிப்பாக இறைவன் தந்த மனைவி அல்லாத மாற்றாரோடு கொள்ளும் உறவு, தீமையானது; இச்சைக்காகச் செய்யும் கொச்சையான செயல். நோய்களைத் தருவது. அது நல் உறவாகாது. மரபு காக்காது. ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. கரம் கைப்பற்றிய இனிய இல்லாளுடன் சந்தோஷமாகக் கொள்ளும் உடல் உறவே உத்தமமானது.

    முறையான தாம்பத்ய இல்வாழ்வில் ஏற்படும் உடல் உறவு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இனம் (குழந்தை உருவாதல்.) காக்கும்; கோபத்தைப் போக்கி அன்பை வளர்க்கும். குணம் காக்கும். உடலுக்குத் தேவையான ரத்தம், பிராண வாயு, உயிர் ஊட்டச்சத்து பங்கீட்டை அதிகரித்து உடல் நலம் காக்கும். ஞாபக சக்தி வளர வழி வகுக்கும். உற்சாகத்தோடு, சுறுசுறுப்போடு ஆக்க செயலில் ஈடுபட வைக்கும்.

    -பூபதி ராஜா

    • எல்லா உயிர்களின் ஆயுளையும் ஓலைகளில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன்.
    • உள்ளே நுழைந்ததும் ஓர் ஓலை அறுந்து விழுந்தது. அது அந்த கிளியின் ஓலைதான்.

    இந்திரன் மனைவி இந்திராணி. இவள் ஆசையாக ஒரு கிளி வளர்த்தாள். ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டது. உடனே இந்திரனிடம் சென்று, "கிளி இறக்கும் நிலையில் உள்ளது. அதை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்து விடுவேன்" என்றாள்.

    உடனே இந்திரன், உயிர்களை படைக்கும் சிவனிடம் சென்று இதைப்பற்றி கூறினார். அதற்கு சிவன் உயிர்களை படைப்பது நான்தான். ஆனால் அதைக் காப்பது விஷ்ணுவின் தொழில். எனவே அவரிடம்சென்று முறையிடலாம் வா, நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்.

    விஷ்ணுவிடம் நடந்ததை கூறினர்.. அதற்கு விஷ்ணு, உயிர்களை எடுப்பது பிரம்மனின் தொழில். எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள்.. நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்.

    பிரம்மனிடம் நடந்ததை கூறினர். அதற்கு பிரம்மன், உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்துவிட்டேன். வாருங்கள் நானும் வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்.

    நால்வருமாக சென்று நடந்ததை எமனிடம் கூறினர். எல்லா உயிர்களின் ஆயுளையும் ஓலைகளில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன். அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று அந்த உயிர் இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்.

    உள்ளே நுழைந்ததும் ஓர் ஓலை அறுந்து விழுந்தது. அது அந்த கிளியின் ஓலைதான். அதை எடுத்து படித்தனர்.

    அதில், "இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்ணு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும்" என்று எழுதியிருந்தது.

    எனவே படைத்தவன் நினைத்தால்கூட ஆயுளை மாற்ற முடியாது. எனவே வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

    -பிரேமலதா

    • நமது உடலில் தீவிரமான கழிவு நீக்கம் நடைபெறும் நிலையில் பசி இருக்காது...
    • நமது உடலில் தீவிரமான குணமாக்கும் நடவடிக்கை நடைபெறும் சூழலில் பசி இருக்காது...

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு....

    ஆமாம்..! பசி என்றால் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா...?!

    நம்மில் நிறைய நபர்களுக்குப் பசி உணர்வு எப்படி இருக்கும் என்றே தெரியாது என்பது ஆச்சரியம் அளிக்கும் உண்மை...

    "நேரத்துக்குச் சாப்பிடலன்னா ....

    எனக்குத் தலை வலிக்கும் ...

    தலை சுத்தும் ...

    உணவுக்குழாய் எரியும் ...

    வயிறு வலிக்கும் ...

    கை, கால்கள் நடுங்கத் துவங்கும் ...

    பயங்கரமாக் கோபம் வரும் ...

    ஆனா சாப்பிட்ட உடனேயே இது எல்லாமே சரியாகிவிடும்.. அதனால டைமுக்கு சாப்பிட்டுருவேன் ...."

    என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம் ...

    ஆனால் இது எதுவுமே பசியல்ல என்பதே உண்மை ...

    எப்பொழுதெல்லாம் நமது வயிறு செரிமானத்திற்கு வேலையின்றி காலியாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் நமது உடலிற்குள் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும், பழுதுகளை நீக்கவுமான நடவடிக்கைகளை நமது உயிராற்றல் மேற்கொள்கிறது...

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பசி என்று நாம் புரிந்துகொண்டுள்ள தலைவலி, தலை சுற்றல், உணவுக் குழாய் எரிச்சல், வயிற்று வலி, கோபம் இவை அனைத்துமே உடலின் கழிவு நீக்க நடவடிக்கையே ...

    உண்மையிலேயே இந்தத் தொந்தரவுகள் எல்லாமே சாப்பிட்ட உடனேயே சரியாகிவிடும்..!

    எப்படிச் சரியாகின்றது..? அப்படி என்னதான் நடக்கிறது நமது உடலில்...?

    நமது வயிறு காலியாக உள்ள நிலையில், நாம் காலம் காலமாக நமது உடலுக்குள் தேக்கி வைத்துள்ள குப்பைகளைப் பெருக்கி சுத்தப்படுத்தும் வேலையை நமது உயிராற்றல் துவக்கும் பொழுது நாம் சில தொந்தரவுகளை உணர்கிறோம்...

    இதனைப் பசியென்று நினைத்து நாம் சாப்பிடும்பொழுது வேறு வழியின்றி, தான் பார்த்துக்கொண்டிருந்த சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, நாம் சாப்பிட்ட உணவைச் செரிக்கும் பணிக்கு நமது உயிராற்றல் திரும்பி விடுவதால் (செரிமானம், கழிவுநீக்கம் என அனைத்துப் பணிகளும் உயிராற்றலின் வசமே உள்ளது) தொந்தரவுகள் சரியாகி விடுகின்றன.

    அதாவது கழிவு நீக்கம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது என்று பொருள்...

    இதனை இன்னொரு உதாரணத்தின் வழியாகப் பார்க்கலாம்.... அடுக்குத் தும்மல், இருமலில் சளி வெளியேறுவது போன்ற தொந்தரவுகள் காலையில் எழுந்தவுடனேயே சிலருக்குத் துவங்கும்.. டீயோ, காப்பியோ குடித்தவுடன் இந்தத் தொந்தரவுகள் நின்று விடுவதைக் கவனிக்கலாம்...

    கழிவுத் தேக்கமில்லாத, ஒரு ஆரோக்கியமான உடலில் தலைவலியோ, தலை சுற்றலோ, வயிற்று வலியோ, கை கால் நடுக்கமோ, எரிச்சலோ, கோபமோ இல்லாத "பசி" என்ற மென்மையான உணர்வு மட்டும் உருவாகும்...

    சரி.. எப்போதெல்லாம் நமக்குப் பசி இல்லாமல் போகும்?....

    ஏற்கனவே சாப்பிட்ட உணவின் செரிமானம் முடிவுறாத நிலையில் பசி இருக்காது ...

    நமது உடலில் தீவிரமான கழிவு நீக்கம் நடைபெறும் நிலையில் பசி இருக்காது...

    நமது உடலில் தீவிரமான குணமாக்கும் நடவடிக்கை நடைபெறும் சூழலில் பசி இருக்காது ...

    மனிதனைத் தவிர நம்மைச் சுற்றி வாழும் எந்த உயிரினங்களும் பசியின்றி உணவு உண்பதில்லை...

    நமது வீட்டில் வளரும் நாயும் பூனையும் உடல் நலம் குன்றி இருந்தால் உணவினைத் தவிர்ப்பதைக் காணலாம்...

    சுத்தமாகப் பசியே இல்லாதபோது உணவு ஏதுமின்றி பசிக்காகக் காத்திருப்பதே சிறந்தது...

    சில நிமிடங்களே நீடித்து காணாமல் போகும் லேசான பசிக்குப் பழச்சாறுகள் அல்லது பழங்கள் மட்டுமே போதுமானதாகும் ...

    நல்ல தீவிரமான பசிக்கு சமைத்த விரும்பிய உணவுகள் எடுத்துக் கொள்வது சிறப்பு ...

    உண்பதற்காக நாம் உயிர் வாழ்கிறோமா..

    அல்லது உயிர் வாழ்வதற்காக உண்கிறோமா..?

    நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்...

    -அக்கு ஹீலர். அ. புனிதவதி

    • மேடைக்கு வரும்போதே மணப்பெண் தோழிகளுடன் ஆடியபடி வரும் புதிய வழக்கம் ஒன்றும் தொடங்கியிருக்கிறது.
    • ஆடிக்கொண்டு மேடைக்கு வரும் மணப்பெண்ணை அசட்டு மாப்பிள்ளை, எழுத்தாளர் சுஜாதா சொல்வது போல, “ஙே” என்று பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

    இப்போது பெரும்பாலும் இங்கு நடப்பதெல்லாம் திருமணங்கள் அல்ல! சினிமா "சூட்டிங்"தான். உணர்வு பூர்வமான, அன்பு நிறைந்த, உறவுகளைப் பேணும் திருமணங்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது.

    எனது சகோதரியின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தாலி கட்டுகையில், கையெடுத்துக்கும்பிட்டு எனது அக்கா விம்மி அழுத காட்சி இன்றும் எனது மனதில் நிற்கிறது. இப்போது நடக்கும் திருமணங்களில் எல்லாம் அத்தகைய உணர்வுபூர்வமான காட்சிகளைக் காண முடிவதில்லை.

    தாலி கட்டுகையில் மணப்பெண் தனது அட்டியலையோ, நெற்றிப் பொட்டினையோ, உதட்டுச்சாயத்தையோ, எந்தவித பதற்றமும் இல்லாமல் "அஜஸ்ட்" பண்ணிக் கொள்வதைத்தான் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது.

    ஒரு பணக்கார வீட்டுத்திருமணத்தில் மணப்பெண்ணின் அலங்காரத்திற்கான இன்றைய செலவில், ஐந்து ஏழைப் பெண்களுக்கான திருமணத்தையே நடத்திவிடலாம்.

    மணப்பெண்ணிற்கான அலங்காரச் செலவு என்பது போய், இன்று உறவுக் கூட்டம் அத்தனைக்குமான அலங்காரம் என அச்செலவு விரிந்திருக்கிறது. மற்றையஆடம்பரச் செலவுகளின் விபரமும் அப்படியேதான்.

    ஒரு புதிய உறவைத் தொடங்குவதற்கான நெகிழ்ச்சியோ, சிலிர்ப்போ இன்றைய கல்யாணங்களில் துளியளவேனும் இல்லை. முழுக்க முழுக்க சினிமா "சூட்டிங்" போலத்தான் திருமணத்தை நடத்துகிறார்கள்.

    அதில் பாடல் காட்சிகள் இல்லை என்ற குறையையும் இன்று நீக்கத் தொடங்கி விட்டார்கள். மேடைக்கு வரும்போதே மணப்பெண் தோழிகளுடன் ஆடியபடி வரும் புதிய வழக்கம் ஒன்றும் தொடங்கியிருக்கிறது. ஆடிக்கொண்டு மேடைக்கு வரும் மணப்பெண்ணை அசட்டு மாப்பிள்ளை, எழுத்தாளர் சுஜாதா சொல்வது போல, "ஙே" என்று பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

    அந்த ஆட்டத்திற்கும் ஒரு "தேசியகீதத்தை" அனைவருமாக இப்போது அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    "மம்பட்டியான் மம்பட்டியான்..

    மலையூறு நாட்டாம

    மனசைக் காட்டு பூட்டாம

    உன்னைப் போல யாரும் இல்ல மாமா "

    என்று அற்ப ஆயுசில் மறைந்து போன ஒரு கொள்ளைக்காரன் பற்றிய பாட்டைப் பாடி, அதைத் திருமணத்தின் மங்களப்பாட்டாக்கி மகிழ்கிறார்கள்.

    நம் தமிழினத்தார்க்கு ஏதோ நடந்துவிட்டது. அவர்களுக்குள் நல்லவற்றைப் புகுத்தப் படாதபாடு படவேண்டியிருக்கிறது.

    கெட்டவைகளை அவர்கள் வெற்றிலை வைத்து வரவேற்கிறார்கள். எப்படித்தான் உருப்படுவோமோ தெரியவில்லை.

    -இலங்கை ஜெயராஜ்

    • “வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்...” பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும்.
    • ஊமத்தம்பூ இயல்பு மாறி துன்புறுத்துவது போல் மாமியார்கள் மருமகள்களிடம் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருப்பார்கள்.

    "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்"

    நிறைய பேர் இந்த பழமொழியை கேட்டிருக்க கூடும்.. அல்லது சொல்லியிருக்க கூடும்..

    முதன் முதலில் இந்த பழமொழியை கேட்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இன்னும் மறக்காமல் இருக்கலாம்.

    நான் முதன் முதலில் இந்த பழமொழியை என்னை நோக்கி சொல்ல கேட்டது பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனது தமிழ் ஆசிரியர் அவர்களிடமிருந்து..

    எப்போதும் தமிழில் 90க்கும் அதிகமாக மதிப்பெண் எடுக்கும் நான் அரையாண்டு தேர்வில் 63 மதிப்பெண் எடுத்த போது தமிழாசிரியர் "வர வர மாமியார் கழுதையான மாதிரி மார்க்கு கீழே மாற போயிட்டு இருக்கு" என திட்டியது இப்போது மறக்காமல் மனதில் உண்டு.

    அது எப்படி மாமியார் கழுதையாக மாறுவார்கள்..?

    அல்லது மாமியார் கழுதை போல் உதைப்பார்களா?

    அல்லது மாமியார் காள், காள் என கத்துவார்களா.?

    எதனால் இந்த பழமொழியை சொல்கிறோம், இந்த பழமொழியின் அர்த்தம் என்ன என நம்மில் ஒருவரை ஒருவர் கேட்டால் தவறான விளக்கத்தை சொல்வோம்.. அல்லது அர்த்தம் புரியாமலேயே எல்லோரும் சொல்வதால் நாமும் அந்த பழமொழியை சொல்கிறோம் என்ற பதிலை தான் சொல்வோம்.

    உண்மையில் மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை.. பழமொழியை நாம் தவறாக சொல்லி மாமியாரை கழுதையாக்கி சந்தோச பட்டு கொள்கிறோம்.

    அறியாத விளக்கம்: "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்..." பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும்.

    தமிழில் கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஊமத்தங்காயின் பூ அதாவது ஊமத்தம்பூ அதனின் அரும்பு பருவத்தில் மென்மையாய் நீல வண்ணத்தில் சங்குபுஷ்பம் போல் பூத்து மிக அழகாக காட்சியளிக்கும்.

    அழகாய் காட்சியளிக்கும் ஊமத்தம்பூ, காய் பருவத்தை அடையும் போது வெளிப்புறத்தில் கடின முட்களோடு உட்புறத்தில் கொடிய விஷ தன்மையை கொண்டு தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தும்.

    பூ பருவத்தில் தன்னை ரசித்தவர்கள் காய் பருவத்தில் தன்னை தொட்டாலோ, உண்டாலோ அவர்களுக்கு துன்பத்தை கொடுக்கும் குணம் கொண்டது ஊமத்தம்பூ.

    ஊமத்தம்பூ இயல்பு மாறி துன்புறுத்துவது போல் மாமியார்கள் மருமகள்களிடம் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருப்பார்கள்.

    "ஏ! கஸ்தூரியக்கோ... மத்த வீடுகளுக்கு வந்த மருமொவமாரு எப்படியோ எனக்கு தெரியாது.. ஆனா யாம் மருமொவ கெட்டிக்கார புள்ளையாக்கும். எவ்ளோ பாசமா இருக்கா தெரியுமா..

    நேத்து எம்மொவன் எம்மருமவள ஜவுளிக்கடைக்கு கூட்டிட்டு போயிருக்கான். அவளுக்கு எடுத்த மாதிரியே எனக்கும் எடுத்துட்டு வந்துருக்கா. எம்மருமொவளும் எனக்கு மக மாதிரி தான்.." என மருமகளை ஆரம்பத்தில் மாமியார் நன்றாக மெச்சுவார்.

    மாமியார் மெச்சிய மருமகளாய் மருமகள் மெச்சிய மாமியாராய் இருக்கும் உறவில் நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

    "ஊர் ஒலகத்துல பொண்ணே கெடைக்காம இந்த சில்லாட்டைய போய் எம்மொவனுக்கு கட்டி வைச்சேன் பாரு.. எம்புத்திய சொல்லணும்.." என மாமியார் சொல்வது..

    "ஏழூருக்கு கேக்குற மாதிரி எப்பவும் நய்யி நய்யின்னு பொலம்பிட்டு இருக்குற ஆட்டியமால ஒனக்கு போயி நான் மருமொவளா வந்தேன் பாரு... என்ன சொல்ணும்!"

    என மருமகள் பேசுவது என இருவரின் சம்பாஷணைகள் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பதுபோல் வந்ததால்,

    "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்" என்ற பழமொழி தோன்றியது.

    போலியாக பழகி நிஜமான தன் குரூர குணத்தை காட்டும் நபர்களுக்காக வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம் என்ற பழமொழி பொருந்தும்..

    -சுரேஸ்வரன் அய்யாப்பழம்

    • சாப்பிட்டு முடித்ததும் உடல் எடையை சரிபார்த்தால் உடல் எடை கூடி இருப்பதாகத்தான் காண்பிக்கும்.
    • மதியம், மாலை வேளையில் உடல் எடையை சரிபார்த்தால் அது துல்லியமாக தெரியாது.

    எடை மிஷின் கண்ணில்படும்போதெல்லாம் உடல் எடை அதிகரித்திருக்கிறதா? இல்லை குறைந்திருக்கிறதா? என்பதை சரிபார்க்கும் ஆர்வம் பலருக்கும் மேலோங்கும். சில நாட்களுக்கு முன்புதான் உடல் எடையை பரிசோதித்திருப்பார்கள். அதற்குள் மீண்டும் உடல் எடையை சரிபார்ப்பார்கள்.

    ஆனால் இந்த முறை உடல் எடை அதிகரித்திருப்பதாக காண்பிக்கும். எப்படி குறுகிய காலத்திற்குள்ளேயே உடல் எடை கூடியிருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும். உடல் எடையை எந்த நேரத்தில் பார்க்கிறீர்களோ? அதற்கும், உடல் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணமாக சாப்பிட்டு முடித்ததும் உடல் எடையை சரிபார்த்தால் உடல் எடை கூடி இருப்பதாகத்தான் காண்பிக்கும்.

    உட்கொண்ட உணவு, தேநீர், உடல்நல பாதிப்புக்கு உட்கொள்ளும் மருந்து, பருகும் தண்ணீர் உள்ளிட்டவை உடல் எடையில் பிரதிபலிக்கும். அதனால் மதியம், மாலை வேளையில் உடல் எடையை சரிபார்த்தால் அது துல்லியமாக தெரியாது. ஓரிரு கிலோ உடல் எடை கூடி இருக்கலாம். அல்லது குறைந்திருக்கலாம்.

    அப்படி என்றால் உடல் எடையை சரிபார்ப்பதற்கு சரியான நேரம் எது என்கிறீர்களா? காலை வேளைதான் பொருத்தமானது. அதுவும் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிபார்ப்பதுதான் சரியானது. தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நபர் மாலை வேளையில் உடல் எடையை சரி பார்த்தால் கொஞ்சம் எடை கூடி இருப்பதாக தோன்றும்.

    ஏனெனில் உட்கொண்ட உணவு, பருகிய தண்ணீர் அதில் உள்ளடங்கி இருக்கும். ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், உடல் உழைப்பு சார்ந்த கடினமான வேலைகளை செய்பவர்கள் மாலையில் உடல் எடையை சரிபார்த்தால் வழக்கத்தை விட உடல் எடை குறைவாக இருக்கும்.

    அவர்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம். அதனால் காலை வேளையில் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிபார்ப்பது அனைத்து தரப்பினருக்கும் துல்லியமான எடையை காண்பிக்கும்.

    அதிகாலை நேரமே எடை பார்ப்பதற்கு ஏற்ற நேரமாக இருந்தாலும் தினமும் எடையைச் சரிபார்க்க வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை எடை பார்க்கலாம். ஆர்வமாக இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட எடையை சரிபார்க்கலாம். ஆனால் முந்தைய நாள் சாப்பிட்ட உணவு பொருட்களை பொறுத்து எடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • எதிர்பாராமல், ஊர் சுற்றும் சந்நியாசி ஒருவர் விவசாயி குடிசையில் தங்க நேர்ந்தது.
    • கோஹினூர் வைரம் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக உள்ளது.

    கோஹினூர் - அதாவது உலகின் மிகப்பெரிய வைரமானது மூன்று வருடங்களாக ஒரு விவசாயின் வீட்டில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. அவருடைய குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஏனென்றால் அவருக்கு அது ஒரு வைரம் என்று தெரியாது, அது ஒரு அழகான கல்லைப்போன்றுதான் தோன்றியது. ஆகவே அதைத் தன் குழந்தைகளிடம் கொடுத்து விட்டார்.

    எதிர்பாராமல், ஊர் சுற்றும் சந்நியாசி ஒருவர் அவனது குடிசையில் தங்க நேர்ந்தது. அவரால் அவரது கண்களை நம்ப முடியவில்லை. அந்த சந்நியாசி, சந்நியாசி ஆவதற்கு முன் ஒரு நகைத்தொழிலாளியாக இருந்தார். அவர் விவசாயியைப் பார்த்து "உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? நான் மிகப்பெரிய வைரங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் எனது வாழ்நாளில் இதைப்போன்ற தொரு வைரத்தை நான் இதுவரைப் பார்த்ததில்லை" என்று கூறினார்.

    அதற்கு அந்த விவசாயி, "இது இங்கே மூன்று ஆண்டுகளாகக் கிடக்கிறது. ஒரு நாள் நான் இதை எனது வயலில் கண்டெடுத்தேன். எனது வயலில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது. அந்த ஓடையின் மணலில் இதை நான் கண்டேன். இதை எனது குழந்தைகளுக்காக வீட்டிற்கு எடுத்து வந்தேன். எனவேதான் அவர்கள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். இது நடந்தது கோல்கொண்டா என்கிற சிறிய கிராமத்தில்.

    உடனே அந்த இடத்தின் ராஜவான ஐதராபாத் நிஜாமிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வைரங்களின் பிரியர். அவராலும் அவரது கண்களை நம்ப முடியவில்லை. அவர் அந்த விவசாயிக்கு பல லட்சக்கணக்கான ரூபாய்கள் பரிசளித்தார்.

    இப்போது அந்தக் கோஹினூர் வைரம் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக உள்ளது. அது பிரிட்டிஷ் ராணியின் கிரீடத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்போது அது அதன் ஆரம்பகால எடையில் மூன்றில் ஒரு பங்கு தான் உள்ளது. மற்ற மூன்றில் இரண்டு பகுதி என்னவாயிற்று?

    மூன்றில் இரண்டு பகுதி அதை மெருகேற்றுவதிலும், பட்டை தீட்டுவதிலும் வெட்டப்பட்டு விட்டது. மூன்றில் இரண்டு பகுதி மறைந்து விட்டது, ஆகவே மூன்றில் ஒரு பகுதிதான் உள்ளது. ஆனால் எவ்வளவுக்கெவ்வளவு அது பட்டை தீட்டப்பெறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு அதிகமாகிறது. அது முதலில் இருந்ததை விட இப்போது தான் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

    - ஓஷோ

    • 960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
    • பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்? தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர்.

    ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம்.

    இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது. இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார்.

    ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார்.

    சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.

    960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.

    பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம்.

    இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது. ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான்.

    எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.

    -சிவசங்கர்

    • ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆண் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம்.
    • ஆண் குணாதிசயங்கள் என்பது தைரியம், உடல் வலிமை, வீரம் இதை குறிக்க கூடியது.

    மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள்!

    ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண் ராசிகள்.

    ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆண் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம்.

    உதாரணமாக மிதுன இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம்.

    ஆண் குணாதிசயங்கள் என்பது தைரியம், உடல் வலிமை, வீரம் இதை குறிக்க கூடியது.

    அதேபோல் ஒரு பெண் ராசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம்.

    தாய்மை உணர்வு, அதிக அன்பு, பாசம், சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • ‘பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்’ என்று ‘கரகாட்டக்காரன்’ டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.
    • இளையராஜாவின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது.

    திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...

    "என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார்.

    இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.

    "இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக்குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல் என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.

    'பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்' என்று 'கரகாட்டக்காரன்' டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.

    'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த் திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.

    வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வரவைத்தவர் இசைஞானி.

    வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

    அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.

    'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.

    தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.

    கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.

    1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.

    கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.

    அவரிடம் எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலந்திருந்தாலும் இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!

    -அம்ரா பாண்டியன்

    • சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
    • பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது.

    அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங்.... பாடல் எல்லாம் தயார். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகார்டிங் செய்து பார்த்தார்.

    பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.

    இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகார்டிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார்.

    அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.

    பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான்...

    "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.

    இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.

    அந்த பாடல்.., "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ".

    • வரலாறு சொல்லும்... அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் என்று.
    • நமது படிப்போ, பட்டமோ, பதவியோ, நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை...

    1979 ம் வருடம்..

    திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்...

    அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்...

    அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.

    இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

    அந்த வயதானவரோ, தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்...

    இளைஞன், நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன். தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்.

    நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடலாமே என்றான்.

    பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்ததும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர். விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது...

    அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார் என்றான்.

    அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய். பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்.

    அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. அத்தனைக்கும் தலைவர் இவரே.

    இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்.

    சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்...

    தம்பி. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான். அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி.. இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி. கடவுளை மறக்காதே. இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்.

    ஆனால் வரலாறு சொல்லும். அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் என்று. இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை.

    நமது படிப்போ, பட்டமோ, பதவியோ, நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை...

    -பரதன் வெங்கட்

    ×