search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை, மொழிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார்- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    கலை, மொழிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார்- கனிமொழி எம்.பி. பேச்சு

    • பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது.
    • தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது.

    நெல்லை:

    பாளை சித்த மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் ஓவிய பயிலரங்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன், ஆர்.டி.ஓ/ சந்திரசேகர், ஓவியர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    திராவிட மொழியின் முதல் மொழி தமிழில் இருந்து தொடங்கியது என முதலில் சொன்னவர் கால்டுவெல். இந்தியாவின் நாகரிகம் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியது என சொல்லிய தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நாகரிகத்தை கண்டறிய அகழாய்வு செய்ய உத்தரவிட்டார்.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்து பண்பாட்டு நாகரிகத்தை அரசு காத்து வருகிறது.

    15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நூவர் அருங்காட்சியகத்தில் மிக அழகாக பல வண்ண தொன்மையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    ஓவியங்கள் பண்டைய வரலாற்று நாகரிகங்களை தாங்கி படித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைவிட அழகாக நம் தமிழகத்தில் பல நூற்றாண்டு தொன்மையான ஓவியங்கள் இன்றளவும் பல கோவில்களில் காணப்படுகிறது.

    பண்டைய கால அற்புதங்கள் நிறைந்த இடங்கள் பாழடைந்து கிடந்ததை தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றப் பின்னர் புனரமைத்து அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும்.

    தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்காட்டுகிறது. பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

    வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது. இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×