search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அமைச்சர்கள் மீதான விசாரணை பற்றி ஆர்.எஸ்.பாரதி வாய் திறக்கத் தயாரா? - ஜெயக்குமார் பதிலடி
    X

    தி.மு.க. அமைச்சர்கள் மீதான விசாரணை பற்றி ஆர்.எஸ்.பாரதி வாய் திறக்கத் தயாரா? - ஜெயக்குமார் பதிலடி

    • வருமானவரித்துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?
    • தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:-

    ஆளும் தி.மு.க.வில் மேலும் ஒருமுறை தனக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்துபோன அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேவையில்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

    தி.மு.க.வில் எங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகிவிடுவாரோ என்ற பயத்தில், கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை அவசர அவசரமாக மீண்டும் தங்களுடன் இணைத்துக் கொண்டதை தமிழக மக்கள் கைகொட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.

    வேலை இல்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ். பாரதி கடந்த வாரத்தில் வருமானவரித் துறை தனிப்பட்ட இரண்டு தொழில் அதிபர்களின் நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையைப் பற்றி குறிப்பிட்டு, இதற்காக மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறார்.

    வருமானவரித் துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?

    தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன. விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக்கொண்டு, காலம் தாழ்த்தி வரும் அந்த அமைச்சர்களை பற்றி ஆர்.எஸ். பாரதி வாய் திறக்கத் தயாரா?

    சம்மன் அனுப்பிய மத்திய அமலாக்கத் துறையையும், மத்திய அரசையும் கண்டித்து திமுக வாய் திறந்திருக்கிறதா? இதே போல், பல தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள ஊழல் வழக்குகளையும் விரைந்து நடத்த ஆர்.எஸ். பாரதி இந்த அரசை கேட்டுக்கொள்வாரா?

    அன்னக் காவடிகளாக நாட்டிலே அலைந்து திரிந்த தி.மு.க.வைச் சார்ந்த பலர், இன்றைக்கு அரபு நாட்டு சுல்தான்கள் போல் வாழ்ந்து, வலம் வந்து கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல் ஊழலிலேயே ஊறித் திளைத்த கட்சியைச் சார்ந்த ஒருவர், காமாலை கண்ணுடையவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் நபர் ஒருவர் பிதற்றுவதுபோல், தூய்மை உள்ளம் கொண்ட பரிசுத்தமான, மக்கள் சேவையை முன்னெடுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    ஆர்.எஸ். பாரதி வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்ததும், காவல் துறையால் விசாரிக்கப்பட்டதும் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் அடுத்த வீட்டில் எட்டிப் பார்க்கிறார். இந்தப் போக்கைக் கைவிடா விட்டால் இன்றைக்கு, தான் தப்பித்ததாக அவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஊழல் பூமாரங்காக அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது. உப்பைத் தின்ற பாரதியை, அ.தி.மு.க. தண்ணீர் குடிக்க வைக்கும் காலம் வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி எப்படி இருந்தார்? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது, அவரது அடுத்த வீட்டுக்காரர்களுக்கே நன்கு தெரியும். ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, அவரது கட்சியை சீர்திருத்தும் பணியில் பாரதி ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×