search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எதிர்கட்சிகள் கேட்டால்தான் தருவார்கள்... பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வருவது உறுதி: அண்ணாமலை
    X

    எதிர்கட்சிகள் கேட்டால்தான் தருவார்கள்... பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வருவது உறுதி: அண்ணாமலை

    • தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை.
    • 9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரையை நேற்று தொடங்கினார்.

    அங்கிருந்து பழைய பஸ் நிறுத்தம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த யாத்திரையில் அப்பகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கியும், இளைஞர்கள் செல்பியும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் அண்ணாமலை பேசியதாவது:

    சேலத்தில் இருந்து ஓமலூர், மேட்டூர் அணை பகுதிக்கு ரெயில் வழி பாதையை இருவழி பாதையாக மாற்றக்கூடிய திட்டம் திருச்சியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. நம் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை, சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளை கடந்தும் ஏற்காடு பகுதியில் சில இடங்களில் சாலை இல்லாத கிராமங்கள் உள்ளன.

    சேர்வராயன் மலையில் தண்ணீர் வசதி இல்லை. தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. நம்பர் ஒன் மாநிலம் என்று முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால் 8 லட்சத்து 34 ஆயிரத்து 544 கோடி ரூபாய் இன்றைய தமிழக கடன். கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விட்டனர்.

    உங்கள் வங்கி கணக்குக்கு 8.5 கோடி ரூபாய் பிரதமர் அனுப்பி உள்ளார். யாருக்காவது தெரியுமா? விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு சத்தமின்றி உங்கள் கையில் கிடைக்கிறது. பொன்முடி பையன் என்ற ஒரே தகுதியில் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியுள்ளார். அவருக்கு ஒரு தீர்ப்பு வந்து விட்டது, மற்றொரு தீர்ப்பு வந்தால் கள்ளக்குறிச்சிக்கு வேகமாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை வரும், இம்முறை கட்சியை பார்க்காமல் மோடியை பார்த்து ஓட்டு போடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டியில் நடந்த என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் அண்ணாமலை பேசியதாவது:-

    2024-ல் மீண்டும் மோடி ஆட்சி வருவது உறுதி, 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி தி.மு.க. எம்.பி. செய்தது என்ன, இலவசங்களை பெற்றது தான் சாதனை, பொங்கல் தொகுப்பு அறிவிக்க மாட்டார்கள், எதிர்கட்சிகள் கேட்ட பின்தான் தருவார்கள், ரூ.1000 வருவது உறுதி, ஒரு ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு வருகிறது. சத்தம் இல்லாமல் மோடி அரசு வழங்கி வருகிறோம். இந்தியாவில் மாசு அதிகமுள்ள நதி தான் வஷிஷ்ட நதி, இதை கூட தூய்மைப்படுத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.

    9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. பா.ஜ.கவினர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் அதனை திருத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாலை 6 மணியளவில் எடப்பாடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார்.

    Next Story
    ×