என் மலர்
புதுக்கோட்டை
கஞ்சா வழக்கில் நாம் தமிழர் வேட்பாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (வயது 33) அவர் புதுக்கோட்டை நகராட்சியில் 23&வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதன்பின் அவரையும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் முரளி (36), திண்டுக்கல் மாட்டம் வத்தலக்குண்டு வட்டம் அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த சர்மா (20), கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்த நரேந்திரகுமார் (27), முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (34), காந்தி நகரைச் சேர்ந்த மியாகனி (22) ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், 2 தராசுகள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மின்னணு வாக்குபதிவு அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் ஆலங்குடியில் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி பேரூராட்சி 15 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயக்கம் அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலர் பழனியப்பன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆரோக்கிய சேவியர் முன்னிலை வகித்தார்.
பின்னர் தேர்தல் அலுவலர் இங்கு தேர்தலில் ஓட்டு செலுத்துவதற்கு மின் இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க வருபவர்களிடம் இயந்திர பிரச்சனைகள் இல்லாமல் ஓட்டு செலுத்துவது பற்றிய விளக்கப்பயிற்சி, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் தான் அளித்த வாக்குகளை உறுதி செய்யும் கருவி கட்டுப்பாடு இயந்திரம் ஆகிய இயந்திரங்களை வைத்து தேர்தல் வகுப்பு ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறினர்.
இதில் பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரசாயன பவுடரை உட்கொண்ட குழந்தை இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் மனைவி விஜயா இவர்களுக்கு மகள் கவிநயா(12), மகன் கபிலன் (7), மகள் ரித்தியா (2) ஆகியோர் உள்ளனர்.
பழனியப்பன் கொப்பரைத் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கொப்பரை தேங்காய் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதற்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது என்பதற்காக அமோனியம் சல்பேட் என்ற ராசயனத்தை பயன்படுத்தி சிலர் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதே போன்று பழனியப்பன் அம்மோனியம் சல்பேட்டை பயன்படுத்தி வந்துள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த ரசாயன பவுடரை பார்த்துள்ளது. அதனை திண்பண்டம் என நினைத்து அக் குழந்தை அதனை எடுத்து சாப்பிட்டு மயக்கமாகியுள்ளது. இதை பார்த்து பதறிய பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையிலிருந்த குழந்தை ரித்தியா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொப்பரை தேங்காய்க்கு பயன் படுத்தும் ரசாயனத் தை உட்கொண்டு 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை வழியாக திருச்சி & காரைக்குடி இடையே நாளை (17&ந்தேதி) மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வழியாக திருச்சி - காரைக்குடி இடையே நாளை (17-ந்தேதி) மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து ரெயில் பாதைகளையும் மின்மயமாக்கி அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வழியாக திருச்சி & காரைக்குடி இடையே சுமார் 90 கிலோ மீட்டருக்கு மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
இதற்காக தலா 1 கிலோ மீட்டருக்கு 18 மின்கம்பங்கள் வீதம் 1,620 மின்கம்பங்கள் நடப்பட்டு மின்வயர் பொருத்தும் பணி நிறைவுற்றது. திருச்சி - புதுக்கோட்டை & காரைக்குடி வரை மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நாளை (17-ந்தேதி) நடைபெற உள்ளது.
இதையடுத்து ரெயில் பாதையை ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் பிரத்யே ஆய்வு ரெயில் மூலம் நேற்று ஆய்வு செய்தார். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்த இவர் சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே அலுவலர்களிடம் ஆலோசனை செய்த பின்னர் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வருகிற 20-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், அடுத்த மாதம் 7-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
விழாவையொட்டி பூச்சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா 20.02.2022 அன்று நடக்கிறது.
இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வருகிற 20-ந்தேதி இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூக்களை சார்த்தி வழிபட்டுச் செல்வார்கள். தொடர்ந்து 21.02.2022 (திங்கட்கிழமை) அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வருகிற 07.03.2022 அன்று மாசி தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 ஆம் நாள் (06.03.2022) அன்று பொங்கல் விழா நடக்கிறது.
மாசிப்பெருந்திருவிழா 14.03.2022 தேதி காப்புக்களைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆலங்குடியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடை பெற்றது.
புதுக்கோட்டை:
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை எந்தவித பதட்டமும் இல்லாமல் நடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆலங்குடி பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கொடி அணி வகுப்பை ஏ.டி.எஸ்.பி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில், ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி.வடிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, அழகம்மை, பாஸ்கரன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், முருகையன், மகாலட்சுமி உட்பட ஏராளமான போலீசார் கலந்து கொண் டனர்.
ஆலங்குடி மேலக்கொல்லையில் வடமாடு மஞ்சு விரட்டு நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி மேலக்கொல்லை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
நிகழ்ச்சியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய வடமாடு மஞ்சு விரட்டு மாலை 4 மணி வரை நடை பெற்றது.
இந்த மஞ்சுவிரட்டை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். மஞ்சு விரட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
கந்தர்வகோட்டையில் பழுதான சாலையை சீரமைக்ககோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சியில் சுந்தம்பட்டி, மருங்கூரணி, கருப்பட்டி, ஆயிப்பட்டி வழியாக துவார் செல்லும் தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளிலில் இந்த சாலை வழியாக செல் பவர்கள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கண்டிச்சங்காடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கண்டிச்சங் காடு, தினையாகுடி, ஏகப் பெருமாளூர், ஏகனிவயல், திருவங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எடை போடுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகிறோம், தனியாரில் முறையான விலை போகாததால், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை நாடி வருகிறோம்.
ஆனால் அங்கு நெல் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதால், இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. இதனை அதிகாரிகளிடம் சென்று கேட்டால் அலட்சியமான பதிலே கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கும் தருவாயில் உள்ளது.
மேலும் தற்போது உள்ள விலைவாசியில் உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் வாங்கவே வழியின்றி கடனாளிகளாக போராடி விவசாயம் செய்தால், அதை இப்படி தெருவில் போட்டு நாங்களே உட்கார்ந்து அழுது புழம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என வேதனை தெரிவித்தனர்.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் மழையில் நனையும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தங்கள் பகுதியில் தளத்துடன் கூடிய நிரந்தரமான நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடியில் போதை பொருட்கள் கடத்தல் வழக்குகள் குறித்து திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல் நிலையத்திற்குட்பட்ட போதைப்பொருட்கள் சம்பந்தமான கோப்புகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ரெஜினாபேகம் தலைமையில் ஆலங்குடி காவல் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆலங்குடி சரக காவல் நிலையத்துக்கு உட்பட்ட வடகாடு கீரமங்கலம்,செம் பட்டிவிடுதி மற்றும் கறம்பக் குடி மழையூர், ரெகுநாதபுரம் ஆகியபகுதிகளில் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் வழக்கு பதிவு மற்றும் கோப்புகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர்கள் ஆலங்குடி அழகம்மை, வடகாடு பழனிச்சாமி, கீரமங்கலம் பாஸ்கர், கறம்பக்குடி ராஜேஷ்கண்ணன் மற்றும் ஆலங்குடி உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.1.50 லட்சத்தை இழந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரங்கோஜி பாவா தெருவை சேர்ந்தவர் காளிதாசன் (வயது38) இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது கைப்பேசிக்கு கடன் தருவதாக மர்ம நபர்களிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை பார்த்த காளிதாசன், தனக்கு 3 லட்சம் கடன் தொகை வேண்டும் என பதில் தகவல் அளித்துள்ளார். உடனே தாங்கள் விரித்த வலையில் காளிதாசன் மாட்டிக்கொண்டார் என அறிந்த மர்ம நபர்கள், அவரிடம் போன் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பிபிஒ சென்டர்போல் பல எண்களிலிருந்து பெண்கள் பேசி அவரை நம்ப வைத்துள்ளனர்.
மேலும் உங்களுக்கு 3 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்றால் உடனடியாக டாக்மென்ட் செலவிற்காக ரூ.3500 பணம் அனுப்புமாறு ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பியுள்ளனர். பல எண்களிலிருந்து பெரிய நிறுவனம் போல் பேசியதால் உண்மையிலேயே கடன் கொடுக்கும் நிறுவனம் என நம்பிய காளிதாசன் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளார்.
அதனையடுத்து மர்ம நபர்கள் இன்சூரன்ஸ் தொகை, பணப் பறிமாற்றம், ஸ்டாம்ப், தரகர் தொகை என மொத்தம் ஒன்றரை லட்சம் வரை காளிதாசனிடம் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த காளிதாசன், ஆன்லைன் மூலம் சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் கடன் தருவதாகக்கூறி ஒன்றரை லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு பயிறு உற்பத்தி பெருக்கம் செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் வம்பன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில், உலக பயறு தினம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த பயிற்சி¢வேளாண்மை இணை இயக்குநர்சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் திருவரங்குளம் வெற்றிவேல் பயறு உற்பத்தியை பெருக்கிட வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளங்கி கூறினார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திருப்பதி பயறு தேவை மற்றும் உற்பத்தியை பெருக்கி தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்க மளித்தார். வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் பேசுகையில், மாவட்டத்தில் பயறு உற்பத்தியை பெருக்கிட செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்து திட்டங்கள் மற்றும் சாகுபடி நுட்பங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், வம்பன் பயறு ரகங்களின் சிறப்பியல்புகள் மற்றும் சாகுபடி நுட்பங்களான விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ராசாயன உரங்கள், நுண்ணூட்டம் இடுதல், டி.ஏ.பி தெளிப்பு முதலியவற்றை விளக்கினார்.
வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் பயறு சாகுபடி நுட்பங்கள் அடங்கிய மூன்று பிரசுரங்களை வெளியிட்டு நிறைவுரை ஆற்றினார். அப்போது மண்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சரிவிகித உணவில் பயறு வகைகளின் பங்கு, பயறு தேவை மற்றும் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளக்கினார்கள்.
கருத்துக்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது. டி.ஏ.பி தெளிப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. பயிற்சியில் ராசியமங்களம், சுற்றுப்புற விவசாயிகள் மற்றும் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.






