என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் வி.அய்யாசாமி (வயது 45). இவர் மூச்சுச்திணறல் காரணமாக கடந்த 20-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது இடது கண்ணில் வீக்கம் திடீரென ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கடந்த 29-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30-ந்தேதி அய்யாசாமி பரிதாபமாக இறந்தார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு டாக்டர் கூட அவரை வந்து பரிசோதித்து பார்க்கவில்லை என அய்யாசாமியின் உறவினர் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாற்றினோம்.
ஆனால் 2 நாட்கள் எந்த டாக்டரும் வந்து பார்க்க வில்லை. இறந்த பின்னரே டாக்டர்கள் வந்தனர். அய்யா சாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பா? அல்லது வேறு பிரச்சினையா? என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி மூத்த டாக்டர் ஒருவர் கூறும் போது, அய்யாசாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதற்கு முன்னதாக அவர் இறந்து விட்டார் என கூறினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபன் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பார்த்திபன். வட மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பார்த்திபன் பெரம்பலூர் வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான நிஷா பார்த்திபனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எஸ்.பி. நிஷா பார்த்திபன் கலந்து கொண்டார்.
அதேபோல் நேற்றும் வாகன சோதனை ஆய்வு உள்ளிட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே அவருடன் பணியாற்றிய மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மொத்தம் 256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,766 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 84, 59, 48 வயதுடைய ஆண்கள் 3 பேரும், 65, 38 வயதுடைய பெண்கள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 8,061 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,601 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த 85 வயது முதியவரும், 65 வயது மூதாட்டியும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீனாம்படி சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 86 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 35 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 43 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,931 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 5,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,845 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
கொரோனாவின் 2-வது அலை இளம் வயதினரை அதிகம் தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின்மையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டு பலர் மீண்டுள்ளனர். இதில் பெரம்பலூரில் குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் இளம்பெண் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 26). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணமானது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதாவை அவரது உறவினர்கள் கடந்த 12-ந்தேதி தலை பிரசவத்திற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து 14-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இருந்தபோதிலும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12- வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 76 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 17 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 14 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 20 பேரும் என மொத்தம் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 6,505 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா காரைப்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,021 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,434 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,037 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.






