என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    அகரம்சீகூரில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து வயது 65. இவரது மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில்  இறந்துவிட்டார். இவரது ஒரே மகளுக்கு  திருமணம் ஆகிவிட்டது. வீரமுத்து வீட்டில் தனியாக வசிந்து வந்தார்.  

    இந்நிலையில் நேற்று மாலை வீரமுத்துவின் உறவினர்  நக்கம்பாடியில் இறந்து விட்டதால், இது குறித்து தகவல் சொல்ல வீரமுத்துவின் தம்பி மகன் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு வீரமுத்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கதவு திறந்து கிடந்தது. மேலும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விரைந்து  சென்று வீரமுத்துவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீரமுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக் கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வரும் வகையில்,  பெரம்பலூர் மாவட்ட எஸ்,பி.மணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று பெரம்பலூர் சப்&இன்ஸ் பெக்டர் செல்வராஜ், போலீசாருடன் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு சோதனை செய்தார்.

    அப்போது கிடைத்த ரகசிய தகவலின் படி பெரம்பலூர் மேரிபுரம் சண்முகம் என்பவரது வீட்டின் முன்பு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை (குட்கா) வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டம் சுரணா கிராமத் தைச் சேர்ந்தவர்களும் தற்போது பெரம்பலூர் பள்ளி வாசல் தெருவில் வசித்து வருபவர்கள் நப்ப ராம் (வயது 32) அவரது தம்பி விக்ரம்குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.71,280 மதிப்புள்ள 564 பாக்கெட் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரையும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார். 
    மலைகுறவன் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மலைகுறவன் இன மக்களுக்கு அரசாணையின்படி பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மலைகுறவன் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் அதன் மாநில பொருளாளர் சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான லதாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனு தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் 40 கிராமங்களில் மலைக்குறவன் பழங்குடியினர் சாதியை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மூங்கில் மரத்தினை எடுத்து கூடை செய்து விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    எங்களது சமூக பிள்ளைகள் ஆரம்ப கல்வி முதல் பட்டபடிப்பு வரை படித்து வருகின்றனர். எங்கள் இன மக்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி சான்று கடந்த 5 ஆண்டுகளாக தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
    இதனால் ஜாதி சான்றிதழ் பெறமுடியாமலும்,  மாணவ, மாணவிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் தவிர்த்து வருகின்றனர். எனவே எங்களது இன குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கி அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தனியார் நிறுவன குடோனில் ரூ.17.75 லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மளிகைப் பொருட்களை இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.


    இந்த நிறுவன பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் எடுக்கும் ஆர்டர்களை  இந்த குடோனில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு மளிகைப் பொருள்கள் ஆட்டோக்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களையும் இங்கிருந்து விநியோகம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இரவு வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்தபோது குடோனில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.17.75 லட்சம் பணம் மற்றும் இரண்டு லேப்டாப் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து குடோன் மேலாளர் ஷேக்பரக்கத் (வயது29)பாடாலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  மணி உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இக்குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமம், கீழவீதியைச் சேர்ந்த விக்ரம்  வயது 20 என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து,  அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை  பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து, விக்ரமை போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சிலம்பச்சங்கம், தமிழ்நாடு சங்கம் மற்றும் ராசராச சோழன் சிலம்பக்கூடம் சார்பில், மாவட்ட அளவில் 3ம் ஆண்டு சிலம்பப் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் ஷர்புத்தீன், ராசராச சோழன் சிலம்பக் கூடத்தின் தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    10 முதல் 14வயது வரையிலான சப்&ஜூனியர்களுக்கும், 14 முதல் 17 வயது வரையிலான ஜூனியர்களுக்கும், 17 முதல் 25 வயது வரையிலான சீனியர்களுக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில், தொடுமுறை, தனித்திறன் போட்டிகள், குழுப் போட்டிகள் நடை பெற்றது.  இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில்  முதலிடம் பெற்றவர்கள்  மாநில அளவிலான  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரம்பலூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் தினமும் 6 கி.மீ. தூரம் நடந்து செல்கிறார்கள்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மருவத்தூர், குரும்பபாளையம், பனங்கூர், கொட்டாரை, ஆதனுர் உள்ளிட்ட 6 கி.மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளி அமைவிடத்தில் இருந்து பனங்கூர் பகுதி 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த பகுதிக்கும் பள்ளி நேரத்தில் போதிய பஸ்வசதி கிடையாது.

    ஆனால் கொட்டாரை, ஆதனூர், குரும்பபாளையம் பகுதிகள் பள்ளியில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பல ஆண்டுகளாக நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்.

    குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ரகு கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு காலையில் 6 மணிக்கும், 9.30 மணிக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி நேரத்தில் பஸ்கள் இல்லை. இதனால் பள்ளிக்கு செல்ல ஒரு மணிநேரம் நடக்க வேண்டி இருக்கிறது. பள்ளி சென்றடையும்போது உடல் தளர்ந்து விடுகிறது. இதனால் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

    மாலையில் பஸ்சுக்காக காத்திருக்க முடியும். காலையில் பள்ளிநேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6ம் வகுப்பில் இருந்து இதுநாள் வரை நடந்தே பள்ளிக்கு செல்கிறேன் என்றார்.

    கோட்டக்கரை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் கூறும்போது, பள்ளியில் 8.30 மணிக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி விடுகிறது. 9.30 மணிக்கு வரும் பஸ்சில் சென்றால் 10 மணிக்குதான் பள்ளிக்கு செல்ல முடியும். சிறப்பு வகுப்பிற்கு செல்ல முடியாது. ஆகவேதான் நடந்து செல்கிறோம் என்றார்.

    10 ஆம் வகுப்பு மாணவனின் தந்தை செந்தில்குமார் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கிறார்கள். சம்பந்தபட்ட போக்குவரத்து கழகத்திற்கு பலமுறை மனு  அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் வேதனையுடன்.
    மக்கள் குறைகேட்பு முகாமில் பொது மக்களிடம் இருந்து அமைச்சர் சிவசங்கர் மனுக்களை பெற்று கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஸ்டபுரம்,  கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர்,  வயலப்பாடி, வடக்கலூர், நன்னை கிராமங்களில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மக்கள் குறைகேட்பு முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    வசிஷ்டபுரம் கிராமத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:

    தமிழக முதலமைச்சரின்  நல்லாட்சி நடைபெற்று வரும் வேளையில்,  குன்னம் தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதும்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின்  

    கடமை என்ற வகையில் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உள்ளேன்.  விரைவில் அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றார்.

    இதில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் ஒன்றியகுழு தலைவர்  பிரபா செல்லப்பிள்ளை,  ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வசிஷ்டபுரம் சண்முகம், வயலப்பாடி செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, ஆண்டாள் குடியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இந்திய மருத்துவ சங்க கிளை மற்றும் மகளிர் மருத்துவப்பிரிவு, திருச்சி காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் மகளிருக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது.

    முகாமிற்கு இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதாகர், பொருளாளர் சத்யா, துணை தலைவர் விஜய் ஆனந்த், டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமினை முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்,  எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மூத்த டாக்டர் தங்கராஜ் உட்பட பலர் பேசினர்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவை பரிசோதனை, ஹீமோ குளோபின் பரிசோதனை, பாப்ஸ்மியர் பரிசோதனை, மார்பக பரிசோதனை, இதயப்   பரிசோதனை, எலும்பு  கனிம அடர்த்தி பரிசோதனை, கால் பராமரிப்பு பரிசோதனை மற்றும் தலைமுடி பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் என 200க்கும் மேற்பட்டோருக்கு செய்யப்பட்டது.

    இதில் நகராட்சி தலைவர் அம்பிகா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் சுமதி செங்குட்டுவன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    பெரம்பலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா உள்ளாட்சி பிரநிதிகளுக்கான 2 பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

    முகாமிற்கு பா.ஜ.க. தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை வகித்தார். மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.

    முகாமில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், இப்பயிற்சி தனித்துவம் வாய்ந்தது, உள்ளாட்சி அமைப்பு  பிரநிதி களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்குவது இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

    இப்பயிலரங்கில் பல தலைவர்கள் வழிக்காட்டு நெறிமுறைகளை எடுத்துரைப்பது இதற்கு மேலும் மெருகூட்டும்.

    உள்ளாட்சி பிரநிதிகள் தங்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்த வேண்டும். மேலும் தங்களது பகுதிகளில்  அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்டவேண்டும், மத்திய அரசின் திட்டங்களை தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைக்கவேண்டும் என தெரிவித்தார்.

    தொடந்து நடந்த பயிலரங்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில  பொது செயலாளர் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., சரஸ்வதி எம்.எல்.ஏ. உட்பட பலர் பேசினர்.

    இதில் மாநில துணை தலைவர் துரைசாமி, மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி     நித்யா சுந்தர், மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள்,  உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் கலந்துகொண்டனர்.
    பெரம்பலூரில் நடந்த சாலை விபத்தில் என்ஜினீயர் பலியானார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்   அருகே கல்பாடி   வடக்கு தெருவை சேர்ந்தவர்   மணிகண்டன் வயது23 .பி.இ.சிவில் என்ஜினீயரான இவர் கன்ஸ்ட்ரக்சன் வைத்து தொழில் செய்து வந்தார்.

    இவர் சம்பவதன்று  தனது  மோட்டார் சைக்கிளில் திருச்சி & சென்னை சாலை, கல்பாடிபிரிவு  சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது  மோட்டார் சைக்கிள்  முன்பு சென்ற ஆட்டோ திடிரென  நின்றதால் பின்னால் வந்த  மோட் டார் சைக்கிள்  எதிர்பாரத விதமாக ஆட்டோ மீது மோதியது.

    இதில்   படுகாயமடைந்த மணிகண்டன்  சிகிச்சைக்காக பெரம்பலூர்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து  மணிகண்டனின் தந்தை ராஜா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார்  வழக்குபதிவு செய்து விபத்தை  ஏற்படுத்திய  ஆட்டோ டிரைவர் விழுப்புரம்  செஞ்சி  தாலுகா,  கள்ளப்புலியூரை  சேர்ந்த பன்னீர் செல்வம்  (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
    பெரம்பலூரில் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட  நில மோசடி தடுப்புசிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட வருவாய் துறையினர் இணைந்துபெரம் பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாமினை நடத்தியது.

    இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா,தலைமை யிடத்து துணை தாசில்தார் சிலம்பரசன், எஸ்ஐ அபுபக்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது.

    முகாமில் மொத்தம் 25 மனுக்கள்  பெறப்பட்டு  18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    ×