என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் கருவி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சத்தம் எழுப்பி காட்டு விலங்குகளை அந்த கருவி விரட்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு வரலாற்று பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான காட்சி பொருளாக வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறியதா வது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், கேரளாவின் பசுமையான வனங்களைப் போல் இருக்கும். விவசாய நிலங்கள் வனப்பகுதியை யொட்டி உள்ளதால், யானை, காட்டுப் பன்றிக் கூட்டங்கள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை நாசம் செய்துவிடும்.

    விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை. ஆனால் விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறைதான் மூங்கில் பன்றி முடுக்கி. லிட்டர் படி அளவிலான சுற்றளவு கொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்துக் கொண்டு, நடுக் கணுவில் வாசல் போலத் துளையிட்டு காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனர். மேல், கீழ் கணுக்களைச் செதுக்கி வில்லைப் போல வளைத்து, கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்கின்றனர்.

    இப்போது அம்புபோல ஒரு குச்சியை அந்தக் கயிற்றில் கட்டிவிடுகிறார்கள். இதைப் போல நிறைய செய்து விவசாய நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் கட்டி தொங்க விடுகின்றனர். காற்று வீசும்போது விரட்டியின் நடுவில் கட்டி இருக்கும் குச்சி, மூங்கில் பொனாய் மேல் மோதும். அப்போது மத்தளம் அடிப்பது போல் டம டம என்று சத்தம் வரும். மேலும் மூங்கில் தட்டி, மனிதன் நிற்பபோல் காட்சியளிப்பதாலும், டம டம சத்தத்தாலும், யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அனைத்தும் இந்த சத்தம் கேட்டு ஓடிப்போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பர்கூரில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மதியழகன் எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார்.
    • மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் சரத்குமார்-சத்யா தம்பதியினர். இவர்களின் ஒரு வயது குழந்தை பிரணித்திற்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளருமான மதியழகன், சரத்குமார்-சத்யா தம்பதிக்கு நிதியுதவி வழங்கினார்.

    மேலும் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தார். அப்போது மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கெலமங்கலம் யூனியனில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
    • இதில் போட்டியிட தி.மு.க.சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் 12 -வது வார்டில் சி.பி.ஐ., கட்சி சார்பில் போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற அனிதா அபிராம்மைய்யா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார்.

    அதனால் 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20-ம் தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கியது.

    தி.மு.க., சார்பில் மாரப்பா என்பவர் 12-வது வார்டில் போட்டியிட தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் எம்.எல்.ஏ.,வுமான ஒய்.பிரகாஷ் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். அதை தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலருமான சென்னகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சாந்தலட்சுமி, கெலமங்கலம் ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் கிழக்கு சின்னராஜ், மேற்கு ஸ்ரீதர், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரியில் ஏற்றுமதி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    ஓசூர்,

    ஓசூரில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி பங்குதாரர்கள் ஆலோசனைக்கூட்டம், நடைபெற்றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

    தொழில்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிசி பச்சுவா, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-இந்திய அரசு 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடுவதையொட்டி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், ஏற்றுமதி மையமாக மேம்படுத்து வதற்கு தேர்வு செய்துள்ள 75 மாவட்டங்க ளில், கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்றாகும்.

    மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட செய ல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், பங்குதாரர்க ளிட மிருந்து ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெறவும், தலையீடுகளை இறுதிசெய்யவும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதியில், தமிழ்நாடு 8.97 சதவீதம் மற்றும் மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில், நமது மாவட்டம் 15 முதல் 16 சதவீதம் பங்களிக்கிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில், கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ஆம் நிலையில் உள்ளது. ஒசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். வெளிநாட்டு ஏற்றுமதி இணை இயக்குனர் பி.என்.விஸ்வாஸ். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூடுதல் இயக்குனர் ஜெகதீஷ், சி.எச்.நாடிகர், ஷோபனா குமார், சாந்தகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரி பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • வேலை கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசில் கிராம நிர்வாக அதிகாரி பாக்கியராஜ்(41) என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில் செட்டிபள்ளி கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் என்று விசாரணைநடத்தியபோது செட்டிபள்ளியை சேர்ந்த சின்ராஜ் என்பதும், பி.இ. பட்டதாரியான அவர் தகுந்த வேலை கிடைக்காததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டமைய நூலகத்தில் பயிற்சி தேர்வுகள் நடக்கின்றன.
    • இதில் போட்டி தேர்வுகள் குறித்த பயிற்சிகள் இடம்பெறும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், அரசு தேர்வாணையம் நடத்தும் போடடித் தேர்விற்கான மாதிரி தேர்வு நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமையில், மைய நூலகர் பிரேமா முன்னிலையில் போட்டித் தேர்வு நடந்தது. இந்த போட்டித் தேர்வினை உதவியாளர் சாந்தலிங்கம், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நடத்தினர்.

    மாவட்ட மைய நூலகம் மற்றும் எம்ப்ளாய்மெண்ட் கைடு ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய இந்த போட்டித் தேர்விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகண்டன் செய்திருந்தார். இதில் 53 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மேலும், மாவட்ட மைய நூலகத்தில் அடுத்து வரும் 3 ஞாயிற்றுக் கிழமைகளில் இதே போல் மாதிரி போட்டித் தேர்வு நடைபெறும் என்றும், இதில் அதிக அளவில் போட்டித்தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் பங்கேற்று தேர்வினை எழுத வேண்டும் என்றும் மாவட்ட நூலக அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
    • விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் தகவல் கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டு மாங்கனி கண்காட்சி மே மாதம் 15ம் தேதி தொடங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வருகிறோம். இவ்வாண்டு மா அறுவடை முடிந்த நிலையில் கண்காட்சி தொடங்கி உள்ளது. கண்காட்சியில் வெளி மாநில மா வகைகளை தான் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. இதே போல் மாங்கனி கண்காட்சியில் உள்ள அரசுத்துறை அரங்குகளில் தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களின் செல்போன் எண்கள் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    சில நேரங்களில் கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. எனவே, குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அரிசியை விவசாயிகளே வழங்க தயாராக இருக்கிறோம். மேலும், மாவட்டத்தில் நெல், ராகி உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் சிறந்த சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும். மார்கண்டேயன் நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும் போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது பயனற்றது.

    தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திப்பள்ளம் ஏரி நிரம்பி உள்ளதால், வாய்க்கால்கள் தூர்வார வேண்டும். மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் ஸ்பிரே இயந்திரம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கு வதைவிட விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

    இது குறித்து கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பதிலளித்து பேசுகையில், அடுத்த ஆண்டு முதல் மே மாதம் 15-ந் தேதியே மாங்கனி கண்காட்சி தொடங்கப்படும். மானியத் திட்டங்கள் தொடர்பான புத்தகம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். கெலமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்யப்படும்.

    ஏற்கனவே நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் குறைதீர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்குவது தொடர்பாக, அலுவலர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் ராகி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சோளம், தாது உப்பு உள்ளிட்டவை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தென்பெண்ணை ஆற்று தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் நிரப்பப்படுகிறது என்றனர்.

    • குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.
    • சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், குட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மத்தூர் அருகே உள்ள காரிமங்கலத்தானூரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 19 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் சத்துணவு பணியிடம் காலியாக உள்ளதால் குட்டூர் துவக்கப்பள்ளியில் வேலை செய்யும் சத்துணவு பணியாளர் விஜயா என்பவர் இப்பள்ளிக்கும் சத்துணவு பணியாளராக செயல்பட்டு வருகிறார். குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று எலுமிச்சை சாதம் செய்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறியுள்ளார்.

    இதை சாப்பிட்ட குழந்தைகள் சபிதாஸ்ரீ, வர்ணாஸ்ரீ, ரோகித், தினேஷ் உள்பட 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஆனதால் சிரமத்திற்கு ஆளாகினர். பயந்து போன பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனையை நாடினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து பர்கூர் பி.டி.ஓ., சுப்பிரமணியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடர்ந்து கேட்டபோது ஒரு குழந்தைக்கு மட்டும் பேதி ஆனதாகவும் மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அங்கு சத்துணவு பணியாளர் இல்லாததால் மாற்று இடத்திலிருந்து எடுத்து வந்து உணவு பரிமாறியதாகவும், இன்று முதல் காரிமங்கலத்தானூரில் உள்ள பள்ளியில் சமையல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த பரிதாபம்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சுண்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது50). விவசாயியான இவருக்கு யசோதா (45) என்ற மனைவி உள்ளார்.

    இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் சுஸ்மிதாவை பெங்களுருவில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    வெங்கட்ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    கடந்த 22-ந்தேதி அன்று இரவு மதுபோதையில் இருந்த வெங்கட்ராஜ் தனது மனைவி யசோதா மற்றும் கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மூத்த மகள் ஆகிய இருவரையும் தாக்கினார்.

    இதில் ஆத்திரமடைந்த மனைவி, மகள் ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்ைச பலனின்றி வெங்கட்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சூளகிரி போலீசார் அவரது மனைவி யசோதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது எனது கணவர் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்து வந்தார்.

    இதனால் நானும் எனது மூத்த மகள் இருவரும் சேர்ந்து தான் களி கிண்டும் கட்டையால் எனது கணவர் வெங்கட்ராஜை தாக்கினோம். அதில் அவர் இறந்து விட்டார் என போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தாய், மகள் இருவரையும் கைது செய்தனர்.

    • கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கவில்லை.
    • இரவு நேரத்தில் நடந்து செல்வோர் கம்பிகளை கவனிக்காமல் செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது.

    காவேரிபட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பாலக்கோடு செல்லும் சாலையில் கருக்கன்சாவடி என்ற இடத்தில் முருகன் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலின் வழியாக தஞ்சிகான் கொட்டாய் மற்றும் பொன்னன்நகர் ஆகிய சிறு கிராமங்கள் உள்ளது . இக்கிராம மக்கள் காலம் காலமாக இந்த முருகர் ஆலயம் வழியாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் பாலக்கோடு சாலை, அண்ணா நகர் சந்திப்பு சாலை முதல் ஏரிக்கால்வாய் வரை முருகன் ஆலயத்தின் முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

    பணியின்போது ஏற்கனவே முருகர் ஆலயம் முன்பு தஞ்சிகான் கொட்டாய் மற்றும் பொன்னன் நகர் செல்லும் வழியில் காலம் காலமாக இருந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு கழிவுநீர் கால்வாய் பணிகள் செய்யப்பட்டது .

    கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கவில்லை. இதனால் தஞ்சிகான் கொட்டாய் , பொன்னன் நகர் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் பொதுமக்கள் இவ்வழியில் சென்றுவர தினமும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கழிவுநீர் கால்வாய் மீது தற்போது உள்ள சிறு பாலத்தில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது.

    இரவு நேரத்தில் நடந்து செல்வோர் கம்பிகளை கவனிக்காமல் செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் விரைந்து சிறுபாலம் கட்டித்தருமாறு அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • இளநிலை உதவியாளரை காலணியை கழற்றி அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இதில், அவரது இடது உள்ளங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள தேவீரப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியை சேர்ந்த அன்னையப்பா என்பவர் தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.

    மேலும் இங்கு, பொன்னம்பலம் என்பவர் இளநிலை உதவியாளராக பணி செய்து வருகிறார்.

    இந்தநிலையில், அலுவலக பணி சம்பந்தமாக கடந்த 22-ந் தேதி, தலைமையாசிரியருக்கும், இளநிலை உதவியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், தலைமையாசிரியர் அன்னையப்பா, இளநிலை உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும், காலணியை கழற்றி அவரை அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,பி.வி.சி. நாற்காலியால் பொன்னம்பலத்தை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில், அவரது இடது உள்ளங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், மாவட்ட கல்வித்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் நேற்று, பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

    • அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    சி.பி.எம்.கட்சியின், கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் மத்திய அரசின், அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இதில், சேகர், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கால குழு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×