என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே அரசு பள்ளி ஊழியரை தாக்கிய தலைமையாசிரியர்
- இளநிலை உதவியாளரை காலணியை கழற்றி அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதில், அவரது இடது உள்ளங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள தேவீரப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியை சேர்ந்த அன்னையப்பா என்பவர் தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.
மேலும் இங்கு, பொன்னம்பலம் என்பவர் இளநிலை உதவியாளராக பணி செய்து வருகிறார்.
இந்தநிலையில், அலுவலக பணி சம்பந்தமாக கடந்த 22-ந் தேதி, தலைமையாசிரியருக்கும், இளநிலை உதவியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், தலைமையாசிரியர் அன்னையப்பா, இளநிலை உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும், காலணியை கழற்றி அவரை அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,பி.வி.சி. நாற்காலியால் பொன்னம்பலத்தை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில், அவரது இடது உள்ளங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், மாவட்ட கல்வித்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் நேற்று, பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.






