என் மலர்
காஞ்சிபுரம்
- மகள் வராததை பார்த்த மணிகண்டன் மீண்டும் வயலுக்கு சென்று மகளை தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சிறுமி கிணற்றின் அருகே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி பட்டஞ்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கனிஷ்கா (10) என்ற மகளும் ஹரித் (7) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் தனது வயலில் உள்ள கிணற்றின் அருகே துணி துவைப்பதற்காக மணிகண்டன், மனைவி, மகன், மகளுடன் சென்றார். துணி துவைத்து முடித்த உடன் வீட்டுக்கு கிளம்பலாம் என்று நினைத்தபோது மகள் சைக்கிளில் வீட்டுக்கு வருவேன் என்று கூறியதால் மனைவி மற்றும் மகனுடன் மணிகண்டன் வீட்டுக்கு திரும்பினார். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னரும் மகள் வராததை பார்த்த மணிகண்டன் மீண்டும் வயலுக்கு சென்று மகளை தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கிணற்றில் இறங்கி அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமி கிணற்றின் அருகே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டு பேசினார்.
- மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் தொடங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
- மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளயில் அரியவகை மூலிகை தோட்டம் மற்றும் மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் அந்தோனி ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மூலிகை தோட்டத்தில் சித்தரத்தை, ஆடாதொடா, கருநொச்சி, சிறியாநங்கை பெரியாநங்கை, வெட்டிவேர், சிறுகுறிஞ்சான், தழுதாழை, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகள், மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளது.
மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மர்ம நபர்கள் கஞ்சா விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனாஸ் ரூட் (வயது 33), பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருவதும், 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கஞ்சா விற்று வருவதும் தெரியவந்தது.
அதே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் 50 பேர் பெண் வாடிக்கையாளர்கள் என்றும் கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.
காஞ்சிபுரம்:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறந்த காவலருக்கான மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை மாவட்ட நீதிபதி காயத்ரி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமார், செயலாளர் மகேஷ் குமார், பொருளாளர் பிரேம் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். நகர மன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் அவர் போலீசரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கினார். இதேபோல் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் , மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்- கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ்,, வட்டாட்சியர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமாரும், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமியும் தேசியக் கொடியை ஏற்றினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், வல்லூர் ஊராட்சியில் தலைவர் உஷா ஜெயகுமார், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர்பாபு, பஞ்சட்டி ஊராட்சியில் தலைவர் சீனிவாசன், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், தாங்கள் பெரும்புலம் ஊராட்சியில் தலைவர் ஞானவேல், கோலூர் ஊராட்சியில் தலைவர் குமார், பிரளயம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் இலக்கியா கண்ணதாசன், ஆவூர் ஊராட்சியில் தலைவர் டில்லி பாபு ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.
அர்சுனன்தபசு அருகே தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை சுதந்திர தின மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஊத்துக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தேசிய கொடியை ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் கொடியேற்றினார். இதில் சிறப்பு தாசில்தார் லதா, துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் மாலா, துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய தொழிற்படை போலீசார் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.
- பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்படை போலீசார், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். 100 மோட்டார் சைக்கிள்களில் மத்திய தொழிற்படை போலீசார் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.
பேரணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பழவந்தாங்கல் மத்திய தொழிற்படை குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணி ஜி.எஸ்.டி. சாலை வழியாக மீனம்பாக்கம், திரிசூலம் சென்று விமான நிலையம் சென்றடைந்தது. பின்னர் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.
- நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி.
- தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி நடை பெற்றது.
தென் சென்னை மேற்கு மாவட்டதலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமை தாங்கினார். பாதயாத்திரை பேரணியை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் 75 - வது சுதந்திர தின பவள விழாவிற்கு காங்கிரஸ்காரர்கள் தான் சொந்தகாரர்கள். தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள், மூவர்ண கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசியக்கொடியை கட்டி செல்கிறார். அவர் மீது பா.ஜனதாவினர் செருப்பு வீசுகிறார்கள். தேசிய கொடி மீது மரியாதை இருந்திருந்தால் செருப்பை வீசி இருப்பார்களா?
பா.ஜனதாவினர் ரவுடி தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள். நாட்டை காப்பாற்றுகின்ற தாய் கட்சி காங்கிரஸ். அதனால் தான் சொல்கிறேன், தேச துரோக புழுக்களை அழிக்க நாங்கள் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம்.
காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு கொடியை பிடிக்கவும் தெரியும், கொடியை திருப்பி பிடித்து தடியாக மாற்றவும் தெரியும்.
பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவரது வீட்டிற்கு தீவைத்தவர்கள் இந்த கொள்ளைக்காரர்கள். இன்று காமராஜரை புகழ்ந்து பேசுகிறார்கள். தேசிய கொடியை ஏற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாசே. ராமச்சந்திரன், பொன். கிருஷ்ண மூர்த்தி, டி.செல்வம், ரங்க பாஷ்யம், தளபதி பாஸ்கர், வி. சிவராமன், கவுன்சிலர் மோ.பானுபிரியா,அய்யம் பெருமாள், ஆலந்தூர் பகுதி தலைவர்கள் தனசேகரன், வி.ரமேஷ்,முகப்பேர் ஜி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமது ஷகீல் (வயது 21) என்பவர் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பெரிய கூடையை திறந்து சோதனை செய்தனர்.
அதில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவைகள் கடத்தி வரப்பட்டிருந்தன. அதற்கு வேண்டிய ஆவணங்களும் அவர் வைத்திருக்கவில்லை.
இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
வட அமெரிக்கா நாட்டில் உள்ள ராஜநாகம் என்ற விஷமற்ற 15 பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் என்ற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் செஷல்ஸ் தீவில் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1 என மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.
அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு, அங்கு தங்கி, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார் என்பது தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் இவைகளை கொண்டு வரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை இவர் எதற்காக கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை செய்கின்றனர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
- வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
2 வாலிபர்கள் கடப்பாரையை கொண்டு ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர் அப்போது எச்சரிக்கை மணி அடித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் (22) மற்றும் அவனது கூட்டாளியான 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் இருவரும் சேர்ந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று தப்பியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர் அவர்களிடம் இருந்து ஒரு மொப்பட் பறிமுதல் செய்யப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகம்.
- தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தினத்தையொட்டி சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது.
- பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 46). இவர் வாலாஜாபாத்தில் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது. அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மோகன்ராஜ் ஈடுபட்டார்.
அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பியில் தொங்கிய நிலையில் மோகன்ராஜ் பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பலியான மோகன்ராஜின் உடலை மின் கம்பத்தில் ஏறி மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
- அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
காஞ்சிபுரம்:
75-வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
மேலும் பசுமை மூலிகை தோட்டம், உணவு வழங்கும் குடில், தேனீர் விடுதி குடில், வாகனங்கள் நிறுத்துமிடம், தமிழ் வாழ்க பெயர் பலகை திறப்பு விழா ஆகிய பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை, மஞ்சள் பையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிட்டத்தட்ட 60 ஆயிரம் வீடுகள் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில், அனைத்து வீடுகளுக்கும், தேசிய கொடிகள் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா எந்த ஊராட்டசியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அந்த ஊராட்சிக்கு ஒன்றிய தொகுதி நிதியில் இருந்து வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்.பி., செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, மனோகரன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் 55 ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடியை ஒன்றிய சேர்மன் ரவி ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் அத்திப்பட்டு துணை தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல், வல்லூர் தலைவர் உஷா ஜெயகுமார், வேலூர் சசிகுமார், கானியம் பாக்கம்ஜெகதீசன், கோளூர் குமார், தடப் பெரும்பாக்கம் பாபு, திருப்பாலைவனம் கங்கை அமரன், கோட்டை குப்பம் சம்பத், வஞ்சி வாக்கம் வனிதா ஸ்ரீ ரமேஷ், பெரும்பேடு ராஜேஷ், கொடூர் கஸ்தூரி மகேந்திரன், ஏலியம்பேடு சுகுணா, ஊராட்சி செயலாளர்கள் கொண்ட கரை முருகன், அனுப்பம்பட்டு செந்தில்குமார், ஏலியம்பேடு நவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






