என் மலர்
காஞ்சிபுரம்
- கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சிபுரம்:
மின்கட்டணம், சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, பகுதி செயலாளர் எம்.பி.ஸ்டாலின்,ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான கனிதாசம்பத், ஒன்றிய செயலாளர் எம்.சி. சம்பத், நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.டி. பிரசாத், தங்கராஜ், வெங்கடேசன், நாகேந்திரன், கிரிதரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள் நகர் பாலாஜி, நகர மகளிர் அணி செயலாளர் அம்சவல்லி, நகர அம்மா பேரவை செயலாளர் ஏகாம்பரம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாபு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தினேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு உமாபதி உட்படபலர் கலந்து கொண்டனர்.
திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும்,அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ. அரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் குவிந்தனர்.
- மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை அதிகரிப்பு, பயணிகள் பெருக்கம் ஆகியவற்றால் எதிர் வரும் காலங்களில் கூடுதல் விமானங்களை கையாள முடியாத நிலை உருவாகும் என ஆய்வு செய்யப்பட்டது.
அதிக விமானங்களை இயக்கவும், பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச தரத்தில் புதியதாக மற்றொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.
இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதுள்ள விமான நிலையம் பெரிய நெருக்கடியை சந்திக்கக் கூடும். அதிக விமானங்கள் ஒரே நேரத்தில் இறங்கவும், ஏறவும் ஓடு தளங்கள் கூடுதலாக அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த அடிப்படையில் சென்னையின் 2-வது மிகப்பெரிய விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டது.
தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தூரமாகும். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைகிறது.
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இத்திட்டம் அறிவித்தது முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஈடு செய்யக்கூடிய வகையில் உரிய நிவாரணம், வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் போன்றவை வழங்கப் படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று இத்திட்டத்தை கைவிடுமாறு மனு கொடுப்பதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து அரசிடம் தெரிவிப்பதாகவும், அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் எடுத்து கூறினர்.
இதனை போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டப்படி இன்று (திங்கட்கிழமை) கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் இன்று காலையில் குவிந்தனர். குடும்பம் குடும்பமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏகனாபுரத்தில் திரண்டனர்.
இதற்கிடையில் கிராம மக்கள் பேரணியை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். 13 கிராமங்களை சேர்ந்த எல்லையில் சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் திட்டமிட்டப்படி காலை 8 மணிக்கு கிராம மக்கள் பேரணியாக புறப்பட்டனர். ஏகனாபுரத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற அவர்களை கிராம எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போராட்டக் குழுவினருடன் 9 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய இழப்பீடு, நிவாரணம் பெற்று தருவதாக எடுத்துரைத்தார். அதனை போராட்டக்குழு பிரதிநிதிகள் ஏற்கவில்லை.
இத்திட்டத்தை கைவிட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்படி வலியுறுத்தினர். இறுதியில் இதுகுறித்து அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் பேரணி காரணமாக காஞ்சிபுரம் மற்றும் பரந்தூர், ஏகனாபுரம் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது.
- எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு 2019-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த க.செல்வம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 2019-க்கு பிறகு கொரோனா நோய் தொற்று காரணத்தால் எம்.பி. தொகுதி நிதியினை கொரோனா நிதிக்காக மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டதால் தொகுதி மக்களுக்கான பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது 2021-2022-ம் ஆண்டிற்கான அரையாண்டு நிதி ரூபாய் 2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த நிதியினை காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் தொகுதி மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மழலையர்களுக்கான அங்கன்வாடி மைய கட்டிடங்கள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கான பொது அறிவு புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், அறிவியல் வளர்ச்சிக்கான புத்தகங்கள் என சமூக வளர்ச்சிக்கான புத்தகங்கள் மாணவர்கள் வளர்ச்சி பெறும் வகையில் அவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி உள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பள்ளிகளில் விழா மேடைகள் அமைப்பதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோன்று பின்தங்கிய கிராமங்கள் வளர்ச்சி பெறும் வகையில் பொது நூலக கட்டிடம், பொது நியாய விலை கடை கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், உயர் கோபுர மின் விளக்குகள் போன்ற தொகுதி மக்களுக்கான பணிகளை தேர்ந்தெடுத்து செய்வதால் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி முதலிடம் வகிப்பதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.
ஆலந்தூர்:
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (வயது58) என்ற பெண், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 2 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
இதனால் விமானி, உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் விமானம், சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்து. உடனே விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.
அதன்பின்பு 3 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் மின்சார மோட்டார் சைக்கிள் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார்.
இரவில் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிந்தது.இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மளமளவென பரவிய தீயானது சர்வீஸ் நிலையம் முழுவதும் பரவி உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டார் சைக்கிள்களும், உதிரி பாகங்களும், பேட்டரிகளும், தீயில் எரிந்து நாசமானது.
எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது.
- கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஐயங்கார்குளம். இங்குள்ள கைலாசநாதர் கோவிலை ஒட்டி உள்ள குளம் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. மேலும் குளத்தை சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
- எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நன்றி என்று பார்த்தால் என் முதல் நன்றி எம்.ஜி.ஆருக்கு தான். ஆனால் கட்சி என்று பார்த்தால் தி.மு.க. தான் என்னுடைய கட்சி. எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம். வணக்கத்திற்கு உரியவர்.
என்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓடுகிறவன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,
எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23-ந்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100 அரங்குகளுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்து இருக்கும்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புத்தகத் திருவிழாவுக்கான பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். மேலும் இது குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. குறும்படத்தை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காண்பிக்கவும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மூலம் ஒளிபரப்பவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இப்போதைக்கு 100 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நட்சத்திர பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் ஆகியவை இதில் இடம்பெற உள்ளன என்றார்.
இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் கூறும்போது, புத்தக திருவிழாவில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளதாக கூறினார்.
- கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
- திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
காஞ்சீபுரம் :
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த 1,071 ஆண்டு தொன்மை வாய்ந்த நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலை காணவில்லை என்று பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் ஒரு போலீஸ் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வந்தால் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதேபோன்று ஒரு பெருமாள் கோவில் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து காணாமல் போய் விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1,071 ஆண்டு தொன்மையான நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவில் 40 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டில் இருந்தது.
அந்த கோவில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து மறைந்த போன இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பக்தர்களுக்கு இன்று வரை தெரியாமலிருப்பது வருந்தத்தக்க நிகழ்வு.
அந்த கோவில் சோழ தமிழ் பேரரசர் பராந்தக தேவர் காலத்தில் கட்டப்பட்டது என்பது இந்த கோவில் கல்வெட்டு சான்று ஆவணப்படி அறுதியிட்டு கூறமுடியும், காஞ்சீபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
இது சம்பந்தப்பட்ட கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஜரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக தேவரின் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இந்த கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணில் இருந்து மறைந்து விட்டது. கோவிந்தவாடி கிராமம் 1,071 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிந்தபாடி என்றும் திருமால்புரம் திருமால்பேரு என்றும் இந்த கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும்; களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் அடிச்சுவடு கூட தெரியாமல் மறைந்துள்ளது. கோவிந்தபாடி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோவிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் நலிவடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது என்றும் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தில் இருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.
திருப்பணி என்ற பெயரில் களவாடபட்டு அதன் விளைவாக மறைந்து போன இந்த குற்றத்தகவலை அன்று முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மறைத்தது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்.
எனவே இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தபட்ட கோர்ட்டுக்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோழ பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தற்போது வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
- சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம்:
கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயலினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான தாமல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வேகவதி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாமல் கலங்கல் பகுதியில் உருவாகக்கூடிய இந்த வேகவதி ஆறு சுமார் 26கிலோ மீட்டர் வரை பாய்ந்து கீழம்பி, கீழ்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், தாயார்குளம், நாகலுத்துமேடு, தாட்டிதோப்பு, ஐயன் பேட்டை வழியாக சென்று திம்மையன்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலந்து வருகிறது.
தற்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்கதிர்பூர் சாலையின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு துண்டானது. இதையடுத்து அப்பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் குண்டு குளம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், நாட்டேரி, பிரம்மதேசம், புதூர் போன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் பல கிலோ சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
ஏற்கனவே வேகவதி ஆற்றின் வெள்ளம் காரணமாக தாயார் குளம் பகுதியில் உள்ள இரண்டு தரைபாலங்கள் சேதம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா்.
அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதாலும், அவற்றை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதாலும் தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்திருப்பதாக கூறினார்.
ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியது என தெரிவித்தனர்.
இதையடுத்து வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






