என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு:
கொரோனா சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, வெண்டிலேட்டர் கருவிகள் ஆகியவற்றின் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஆய்வகம் மூலம் உறுதி செய்யப்பட்டவர்களின் முதலில் பரிசோதனை செய்து தொற்றின் தீவிரம் அறிய ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தல் மையம் குறித்த விவரங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,038 நபர்களில் தற்போது 10,644 நோயுற்ற நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,209 நோயாளிகள் கோவிட் மருத்துவமனைகளிலும், 1,054 நோயாளிகள் கோவிட் சுகாதார மையங்களிலும் 131 நோயாளிகள் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் 131 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2,825 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுடைய மொத்த படுக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ னையில் 480 படுக்கைகளில் 475 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும், நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னைக்கு அருகாமையில் உள்ளதாலும், தொற்று நோய் பரவும் விகிதம் ஏறு முகமாக உள்ளதாலும், அனைத்து வருவாய்த்துறை சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினரைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதிக அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நோய் தொற்றினை குறைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.அரவிந்த ரமேஷ் (சோழிங்க நல்லூர்), பாலாஜி (திருப்போரூர்), எம். பாபு (செய்யூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) அரசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 476-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 79 ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,022-ஆக உயர்ந்தது. இவர்களில் 12 ஆயிரத்து 134 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 857 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598-ஆக உயர்ந்துள்ளது. 3,904 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பதட்டம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் உதவியை நாடினர்.
இதற்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் 13 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் ஜான் லூயிஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி நேற்று மதியம் டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆக்சிஜன் குழாயில் உள்ள பிரஷரில் ஏற்பட்ட மாறுதலே நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.
மேலும் ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனும் தேவையாள அளவு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆக்சிஜன் குழாயில் பிரஷரில் ஏற்பட்ட கோளாறால் உயிரிழப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் குழாயில் பழுது எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது.
தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நேற்று மட்டும் 1,755 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெருந்தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் பதற்றம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் உதவியை நாடியதாக தெரிகிறது. ஆனால் அங்கும் குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் இருப்பதாக கூறி ஆக்சிஜன் வழங்க மறுத்து விட்டனர்.
இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அடுத்தடுத்து 13 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் சக நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு புகார் வந்தது. அதை தொடர்ந்து நான் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 13 பேர் உயிரிழந்து விட்டனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 23 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்கர்கள் உள்ளது. ஆஸ்பத்திரியில் நாளொன்றுக்கு 2.9 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் நோயாளிகளின் வருகை அதிகமானதால் 4.5 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் செலவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 447 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இறந்தவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் அவசர கதியில் உறவினர்களிடம் ஒப்படைத்தது.
உடல்களை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கிளம்பினால் போதும் என புறப்பட்டு சென்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
அனைவரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே 13 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்கக்கோரியும் டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மதியம் மருத்துக்கல்லூரி இயக்குனர் நாராயணபாபு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டாக்டர்களின் கோரிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.






