search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வேட்டவலம் அருகே விவசாயி கொலை

    வேட்டவலம் அருகே கை, கால்களை கட்டி கிணற்றுக்குள் வீசி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது48). விவசாயி. இவருடைய மனைவி ராஜகுமாரி, இவர்களுக்கு ராஜேஷ் கண்ணா, ராகுல் கண்ணா என்ற மகன்கள், சவுந்தர்யா என்ற மகள் உள்ளனர்.

    குபேந்திரன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் காலையில் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரைக் காணவில்லை. இதையடுத்து நேற்று மதியம் குபேந்திரனின் மூத்த மகன் ராஜேஷ் கண்ணா தனது தந்தையை காணவில்லை என வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் வழக்கு பதிவு செய்து மாயமான குபேந்திரனை தேடி வந்தனர். குபேந்திரன் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையிலான வீரர்கள் வந்து கிணற்றில் தேடி பார்த்தனர். கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் தண்ணீருக்குள் கேமராவை வைத்து தேடினர். அதில் எதுவும் தெரியாததால் கிணற்றுக்குள் தேடும் முயற்சியைக் கைவிட்டனர்.

    இதற்கிடையே குபேந்திரனின் மூத்த மகனான ராஜேஷ் கண்ணாவின் செல்போனுக்கு மாயமான குபேந்திரனின் போனில் இருந்து மர்ம நபர்கள் பேசினர். அதில் உனது தந்தையை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 லட்சம் தர வேண்டும். வெறையூரில் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து பணம் கொடுக்க வேண்டும்.

    பணத்தை கொடுப்பதை போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உனது தந்தையை கொன்று விடுவோம் என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கண்ணா இதுகுறித்து வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    வேட்டவலம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் மர்ம நபர்கள் கேட்ட பணத்துடன் ராஜேஷ் கண்ணாவை அழைத்துக் கொண்டு வெறையூர் சென்றனர். இதற்கிடையில் மர்ம நபர்களிடம் இருந்து ராஜேஷ் கண்ணாவிற்கு மீண்டும் அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு விழுப்புரம் வருமாறு கூறி விட்டு போனை துண்டித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் செல்போன் அழைப்பு வந்த இடம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.

    இதில் செல்போனில் பேசியது வென்னியந்தல் கிராமத்தை சேர்ந்த பாவாடை பூங்கா (28) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்தவர் என தெரியவந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாவாடை பூங்காவை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குபேந்திரனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    பாவாடை பூங்கா மற்றும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40), அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (31) ஆகியோர் கடந்த 20-ந்தேதி இரவு குபேந்திரனை மது குடிக்க வருமாறு அழைத்தனர். அவரது விவசாய நிலத்தில் வைத்து மது குடித்தனர்.

    அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், பாவாடை பூங்கா 3 பேரும் சேர்ந்து குபேந்திரன் கை கால்களை கட்டி அவருடைய விவசாய கிணற்றுக்குள் வீசினர். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய செல்போனை எடுத்துக் கொண்டு 3 பேரும் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    குபேந்திரனை அவர்களது குடும்பத்தினர் தேடுவது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் பாவாடை பூங்கா பணம் பறிக்க திட்டமிட்டார். குபேந்திரன் செல்போனிலிருந்து ராஜேஷ் கண்ணாவுக்கு போன் செய்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

    இந்த தகவலை அறிந்த போலீசார் கிணற்றுக்குள் கிடந்த குபேந்திரன் உடலை இன்று காலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், பாவாடை பூங்கா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×