என் மலர்
செய்திகள்

காதல் கணவருக்காக தனியாக சாலைமறியல் நடத்தி சாதித்த ஹேமலதா.
சாலை மறியல் போராட்டம் வெற்றி - இளம்பெண்ணை காதல் கணவருடன் சேர்த்து வைத்த போலீஸ்
இளம்பெண்ணை காதல் கணவருடன் சேர்த்து வைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து வாழப்போவதாக தெரிவித்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 28). இவரது கணவர் பெயர் கார்த்திகேயன் (28).
இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது, பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது.
காதல் தம்பதியினர் அந்தியூர் அருகே உள்ள பூலாப்பாளையத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து அதில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் கோவை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 6 மாதத்துக்கு முன் காதல் தம்பதியினரிடையே திடீர் தகராறு ஏற்பட்டு அவர்களது வாழ்விலும் விரிசல் ஏற்பட்டது.
கணவருடன் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ஹேமலதா அவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார். எனினும் அவரால் காதல் கணவரை மறக்க முடியவில்லை.
இதனால் ஹேமலதா பவானி போலீசில் புகார் செய்தார். தனது “கணவரை அழைத்து பேசி என்னுடன் சேர்த்து வையுங்கள்” என்று புகாரில் கூறினார்.
இதையொட்டி போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கடந்த 1-ந்தேதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வைத்து பேசினார். பிறகு ஹேமலதா கணவன் சென்று விட்டார்.
இந்த பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஹேமலதா அந்தியூர் பர்கூர் ரோட்டின் மத்தியில் தனியாக உட்கார்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமரசம் செய்தனர். கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறினர்.
இதையடுத்து 20 நிமிடத்துக்குப்பிறகு ஹேமலதா சாலை மறியலை கைவிட்டார்.
இந்த நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு மீண்டும் கணவரும் மனைவியும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் வருண்யா ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வெற்றி பெற்றது. கார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து வாழப்போவதாக தெரிவித்தார். இதை கேட்டு ஹேமலதா மிகவும் மகிழ்ந்தார். பிறகு போலீசாருக்கு நன்றி தெரிவித்த காதல் தம்பதியினர் அங்கிருந்து ஜோடியாக தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
Next Story






