என் மலர்
செய்திகள்

இம்ரான்கானிடம் மோடியை பாடம் கற்க சொல்வதா?- குஷ்புவுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை:
தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான பதிவுகள் டுவிட்டரில் டிரெண்டாகின.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்தார்.
இம்ரான்கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளிட்டார்.

முதல் பதிவில் ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்’ என்றும் இன்னொரு டுவீட்டில் ’ விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி’என்றும் பதிவிட்டார்.

குஷ்புவின் இந்த இரண்டு டுவீட்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் வந்தாலும் கண்டனங்கள் அதிகமாகவே எழுந்திருக்கின்றன. பா.ஜனதா மீதான தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இன்னொரு நாட்டு பிரதமரை புகழ்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிலர் குஷ்புவுக்கு ’வீரரை இன்று திருப்பி அனுப்புவது இந்தியாவின் வெற்றி தான். இந்தியாவுக்கு அடிபணிந்து தான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனால் இதை நாட்டின் வெற்றியாக பார்க்க வேண்டுமே தவிர பாகிஸ்தான் சார்பாக நின்று பார்க்க கூடாது’ என்று அறிவுறுத்தி உள்ளனர்.
‘காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் நம் இந்திய வீரரை பிடித்து வைத்து சித்ரவதை செய்து முகங்களை சிதைத்து தலையையே துண்டித்தது. ஆனால் இப்போது சிறை பிடித்த 2-வது நாளே விடுவிக்கிறது என்றால் அதற்கு யார் காரணம் என்பதை குஷ்பு எண்ணி பார்க்க வேண்டும்’ என்றும் ’யார் யாரிடம் பாடம் கற்பது?’ என்றும் குஷ்புவின் டுவிட்டரில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். #imrankhan #pmmodi #kushboo #abhinandan






