search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மோடி தந்திரம் பலிக்காது- திருநாவுக்கரசர் தாக்கு
    X

    தமிழகத்தில் மோடி தந்திரம் பலிக்காது- திருநாவுக்கரசர் தாக்கு

    தேர்தல் பிரசாரம் தொடங்க வரும் பிரதமர் மோடி தந்திரம் பலிக்காது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #pmmodi

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு இடம் கூட கிடைக்காத தமிழகத்திலிருந்து மோடி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை. பாதிப்புக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்க வில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு வருகிறார்.

    இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற மோடி செய்யும் தந்திரம் . ஆனால் அவரது தந்திரம் பலிக்க போவதில்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம்.

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று தி.மு.க. முன் மொழிந்ததை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை.

    ஆனால் தக்க தருணத்தில் எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள். ஜி.எஸ்.டி வரி 100 பொருட்களுக்கு குறைக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறினார். ஆனால் 23 பொருட்களுக்கு மட்டுமே குறைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதுவும் தேர்தலுக்கான ஏமாற்று வேலைதான்.

    கம்ப்யூட்டர்களை கண்காணிக்கப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகத்தில் கொள்ளைபோன சிலைகளை மீட்பதற்காக கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சட்டத்துக்கு புறம்பாக புகார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

    அந்த அதிகாரி வேண்டாம், அவர் சரியில்லை என்று கருதினால் அதுபற்றி அவர் கோர்ட்டில் தான் முறையிட்டு இருக்க வேண்டும். அமைச்சர் இவ்வாறு கூறியதன் மூலம், யாரோ அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விசுவநாதன், கு.செல்வப் பெருந்தகை. மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், சிவராஜ சேகர் மற்றும் பி.வி.தமிழ் செல்வன், இமயாகக்கன், கராத்தே ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #pmmodi

    Next Story
    ×