search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும்- நாராயணசாமி ஆவேச பேச்சு
    X

    பா.ஜனதாவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும்- நாராயணசாமி ஆவேச பேச்சு

    பா.ஜனதாவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார். #narayanasamy #bjp #pmmodi #rahulgandhi

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்திராகாந்தியின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    நினைவுதினத்தை யொட்டி விழுப்புரம் சாலையில் உள்ள அவர் சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

    சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. விஜயவேணி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, கருணாநிதி, நிர்வாகிகள் சீனுவாசமூர்த்தி, கண்ணன், பாசிங்கம், இளையராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், சபாநாயகரின் தனி உதவியாளர் வினோத், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சி வாயம் தலைமையில் இந்திராகாந்தியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாக தலைவி இந்திராகாந்தி. அவர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். அதேபோல ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியை நாமும் வலுப்படுத்த வேண்டும். நாட்டுக்காக வேறு எந்த கட்சியினராவது ரத்தம் சிந்தியது உண்டா? ராகுல்காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரின் கரத்தை நாமும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசாரை பொறுத்தவரை கட்சி இரண்டாம்பட்சம்தான். நாடுதான் முக்கியம்.

    இன்று மத்திய பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு பழி வாங்குகிறது. இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் தெரிவித்தேன். அப்போது பா.ஜனதாவின் சதியை முறியடிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று சொன்னார்.

    டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தபோது பா.ஜனதாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி போராடுங்கள் என கூறினார். ரபேல் விமான ஊழல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ. இயக்குனர் மாற்றம் ஆகியவற்றுக்காக புதுவையில் பிரம்மாண்ட போரட்டத்தை நாம் நடத்தியுள்ளோம்.

    இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்தான் உள்ளது. இடையில் 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாட்டு மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ராகுல்காந்தி தலைமையில் நாட்டு மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு காங்கிரசாரும் போராட வேண்டும். இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்ததினம். இந்திரா காந்தியின் நினைவுதினத்தை முறியடிக்க பா.ஜனதா சர்தார் வல்லபாய் படேலை கையில் எடுத்துள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தவரே அவர் தான். பா.ஜனதா சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது. பா.ஜனதாவுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது, நாற்காலிதான் வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் காங்கிரசாரை கவர்னராக நியமிப்பதாக பா.ஜனதா பொய் பிரச்சாரம் செய்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் கவர்னர்களாக உள்ளனர். மத்திய அரசு நிர்வாகத்தையே ஆர்.எஸ்.எஸ்.தான் நடத்துகிறது. பா.ஜனதாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும்.


    பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறார். அவர் அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    காங்கிரஸ் ஒரு பீனிக்ஸ் பறவை. அது மீண்டும், மீண்டும் எழும். ராகுல்காந்தியை பிரதமராக்கும் தேர்தல் 2019(ல் வருகிறது. அதற்கு காங்கிரசார் இரவு, பகலாக ஒற்றுமையோடு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    Next Story
    ×