என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது: விவசாயி பலி
    X

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது: விவசாயி பலி

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பவளத்தம்பாளையம், தங்கம்நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). விவசாயி. இவர் நேற்று இரவு தோட்டத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    தங்கம்நகர் பிரிவில் வந்த போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், கார்த்திகேயன் வந்த மோட்டார் சைக்கிளும் மோதின.

    இதில் கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தது. கார்த்திகேயனும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஈரோடு பழையபாளையம் தென்றல் நகரை சேர்ந்த சரண்யன் (26) என்பவர் ஓட்டிவந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. சரண்யனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்து உயிருக்கு போராடிய சரண்யனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் சரண்யன் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கார்த்திகேயனுக்கு அனிதா என்ற மனைவியும், சுபரிஷா (6) என்ற மகளும், ஜெகஜித் (4) என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×