என் மலர்
செய்திகள்

பூம்புகாரில் சொத்து தகராறில் விவசாயி கொலை: மகன் கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் மந்தக்கரை தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது75). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்களின் மகன் பாலசுப்பிரமணியன் (43). இளநீர் வியாபாரம் செய்து வந்த இவர், அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது தந்தை கலியபெருமாளிடம் சொத்துக்களை கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன், கலிய பெருமாளிடம் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தகராறு செய்தார். அதற்கு கலியபெருமாள் மறுப்பு தெரிவித்தார். இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், உருட்டுக்கட்டையால் தனது தந்தை கலியபெருமாளையும், தாய் சரஸ்வதியையும் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்தார். சரஸ்வதிக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிர மணியனை கைது செய்தனர். தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






