search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சில்க்ஸ் கடையில் 2-வது நாளாக எரியும் தீ: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு
    X

    சென்னை சில்க்ஸ் கடையில் 2-வது நாளாக எரியும் தீ: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

    தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் 2-வது நாளாக எரியும் தீ விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ‘சென்னை சில்க்ஸ்’ அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு நன்கு பரிட்சயமான கடை என்பதால் தீவிபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த கட்டிடம் மொத்தம் 7 மாடிகள் கொண்டது. அனைத்தும் குளிர் சாதன வசதி கொண்டது. கடையின் மொட்டை மாடியில் கேண்டீனும், பணியாளர்கள் தங்கும் இடமும் உள்ளது. இங்கு இரவு காவல் பணியில் 10-க்கும் மேற்பட்ட காவலாளிகள் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை 4 மணிக்கு தரை தளத்தில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. தொடர்ந்து வெப்பம் தாங்காமல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் கடை நிர்வாகத்தினருக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.


    உடனே தீயணைப்பு படையினர் 20-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தரை தளத்தில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் புகை மூட்டமும், கண்ணாடிகள் வெடிக்கும் சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தன.

    தீயணைப்பு படையினர் உள்ளே செல்ல முடியாததால் தரை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அத்துடன் மொட்டை மாடியில் சிக்கி இருந்த 14 ஊழியர்களை ‘ஸ்கை லிப்ட்’ எந்திரத்தை பயன்படுத்தி பத்திரமாக மீட்டனர்.

    தரைத்தளத்தில் பிடித்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. 7 மாடிகளில் இருந்தும் பயங்கரமாக வெளியேறிய வண்ணம் இருந்த புகை பார்ப்பவர்களை கடும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது.

    தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இரவு முழுவதும் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக தீ எரிகிறது.

    தொடர்ந்து எரிந்த தீயால் வெப்பம் தாங்காமல் கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்பும், விரிசல்களும் ஏற்பட்டன. இதனால் அபாயகரமான கட்டிடமாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.

    வெப்பத்தால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று அதிகாலை 3 மணிக்கு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக இடியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது.


    குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் தாங்கள் தூங்காமல் தவித்ததாகவும் கூறினார்கள். தியாகராயநகர் பகுதி முழுவதும் ஒருவிதமான புகை வாசனை நிலவியது.

    4 மாடிகள் இடிந்ததாலும் கடைப்பகுதி அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. கட்டிடத்தின் தெற்கு பகுதி மட்டும் இடிந்துள்ளது. கட்டிடத்தின் முன்பகுதி இடியாமல் அபாயகரமான நிலையில் நிற்கிறது. வடக்கு, கிழக்கு பகுதியிலும் கட்டிடம் அரை குறையாக இடிந்த நிலையில் சுவர்கள் பெயர்ந்து நிற்கிறது.

    தொடர்ந்து தீ எரிவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டால்தான் மீட்பு பணியை மேற்கொள்ள முடியும்.

    தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எதிரே சில அடி தூரத்தில் மேம்பாலம் உள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்லவும் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். இந்த தீ விபத்தால் அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தவிப்புடன் உள்ளனர்.

    தீவிபத்தில் சுற்றிலும் வசிக்கும் மக்களும் வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். தீ அணைக்கப்பட்டு மீட்பு பணி முடிந்த பின்னரே அவர்கள் திரும்ப முடிவு செய்துள்ளனர்.


    கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும், தீவிபத்தை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தீவிபத்து நடந்த இடத்தில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்ய கோபால், தீயணைப்புத் துறை இணை இயக்குனர் ஷாகுல்அமீது, தியாகராய நகர் துணை கமி‌ஷனர் சரவணன் ஆகியோர் முகாமிட்டு தீயணைப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    அமைச்சர்கள் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமாக பிடித்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்து தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×