என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
- அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. திருமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி. பிரேக் தரிசனம், வயது முதிர்ந்தவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஆர்ஜித சேவைகள் தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. புரோட்டோகால் வி.ஐ.பி.களுக்கு பிரேக் தரிசனம் மட்டுமே இருக்கும்.
பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய 50 சதவீத அறைகள் உள்ளன. மீதமுள்ள அறைகள் திருமலையில் உள்ள பல்வேறு கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும். அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடப்பதால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை ஆன்லைனில் அல்லது நேரில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. காணிக்கையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு வாகனச் சேவை நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் திருமலையில் அறைகள் கிடைப்பது அரிது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- 7-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி மாலை விஸ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹவச்சனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பவித்ரோற்சவத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அங்குரார்ப்பணத்தையொட்டி 7-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.
பவித்ரோற்சவத்தின் முதல் நாளான 8-ந்தேதி திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 9-ந்தேதி அபிஷேக சேவை, பிரேக் தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 10-ந்தேதி சாம வேத புஷ்பாஞ்சலி, பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்படும்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் மிக முக்கிய விழாவாக வருடாந்திர பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் மிக முக்கிய நிகழ்ச்சிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் மெகா திருவிழாவின்போது, வெங்கடாசலபதி கோவிலின் நான்கு மாட வீதிகளில் நடக்கும் ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
உற்சவர் மலையப்பசாமி மொத்தம் 16 வகையான வாகனங்களில் (2 தேர்கள் உள்பட) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தக் காட்சியை நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் கண்டு களிப்பர்.
கோவிலின் மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் "ஏடுகுண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா"... எனப் பக்திகோஷம் எழுப்புவது விண்ணதிரும்.
வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கும் வாரத்தின் முந்தைய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வைகானச ஆகம விதிகளின்படி, வெங்கடாசலபதி கோவில் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு "ஆலய சுத்தி" எனப்படும். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் அழைப்பர்.
பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மண் சேகரிக்கும் செயல்முறை கடைப்பிடிக்கப்படும். இதற்கு மிருத சங்கிரஹணம் எனப்படும். அங்குரார்ப்பணம் என்றும் கூறுவர்.
அதைத்தொடர்ந்து 9 நாள் மெகா திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் கருட கொடியேற்றம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் "கருடன் உருவம்" வரையப்பட்ட கொடியை பிரதான அர்ச்சகர் ஏற்றுவர்.
பிரம்மோற்சவ விழாவில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், அனைத்துலக தெய்வங்களுக்கும் கருடன் அழைப்பு விடுப்பதாக நம்பப்படுகிறது.
கொடியேற்றம் முடிந்ததும் உற்சவர் மலையப்பசாமி கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். ஒரு சில வாகனங்களில் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி உலா வருவார்.
வீதிஉலா முடிந்ததும் கோவிலுக்குள் "ஸ்ரீவாரி கொலுவு" நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவர்களுக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயகர் மண்டபத்தில் நறுமணப் பொருட்களால் "ஸ்நாபன திருமஞ்சனம்" எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும். இது, உற்சவர்களை குளிர்விப்பதாக கருதப்படுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப் பொடியால் உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்து, நீராடுவது சூர்ணாபிஷேகம் ஆகும்.
வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில், உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, சுதர்சன சக்கரத்தாழ்வார் புஷ்கரணிக்கு எழுந்தருள்வார்கள். அங்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். கோவில் புஷ்கரணியில் 3 முறை சக்கரத்தாழ்வாரை புனித நீரில் மூழ்கி எடுத்து நீராட்டுவர். இதற்கு "சக்கரஸ்நானம்" எனப்படுகிறது.
பிரம்மோற்சவ விழா நிறைவில் கொடியிறக்கம் நடக்கும். அப்போது தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு இருந்த கருட கொடி இறக்கப்படும். இத்துடன் 9 நாள் பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நிறைவடைகிறது.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாள் கருடசேவை நடக்கும்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாள் கருடசேவை நடக்கும். அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு பிரத்யேக குடை அலங்காரம் செய்யப்படும்.
ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலையப்பசாமிக்கு சமர்ப்பிப்பதற்காக பிரத்யேக குடைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வரும். குடை ஊர்வலத்தின்போது எந்தவொரு பக்தரும் காணிக்கை போடக்கூடாது.
குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றடைவதில்லை. ஊர்வலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
- செம்மரங்களுக்கு சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மொத்தம் 5,700 டன் செம்மரக்கட்டைகள் உள்ளன. இதில் 2,640 டன் செம்மரங்களை வரும் அக்டோபர் முதல் 2023 ஆண்டு மார்ச் வரை பல்வேறு கட்டங்களாக ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 3,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 2014-2018 ம் ஆண்டு வரை 1,251 டன் செம்மரக்கட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம், 7505 கோடி வருவாய் கிடைத்தது.
இந்த செம்மரங்களுக்கு சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது.
- பொதுமக்கள் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வணங்கினர்.
- 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
திருப்பதி:
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வணங்கினர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று விஜர்ஜன ஊர்வலம் நடந்தது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அன்று 2 பிரிவுகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம்.
நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஆனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா தலைமையில் டி.எஸ்.பி ஸ்ரீசைதன்யா மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது வாலிபர்கள் விநாயகர் சிலைகளுக்கு முன்பாக நடனமாடியபடி சென்றனர்.
ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா வாலிபர்களுடன் சேர்ந்து திடீரென நடனம் ஆடினார்.
போலீஸ் சூப்பிரண்டு நடனம் ஆடுவதை சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் வைரலாகி வருகிறது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- விபத்தால் நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல்- பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.
சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு அங்கங்கே வாகனங்களை நிறுத்தினர்.
இதுகுறித்து உடனடியாக உளவு பாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. வெடித்த கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவு நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஆலோசனை செய்வது தொடர்பாக அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிபிரகாஷ் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள கோவில், மாட வீதிகள், தரிசன வரிசைகள், பக்தர்கள் ஓய்வறைகள், விடுதிகள், அன்னதானக்கூடம், புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல்-மந்திரி ஒ.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய திருமலைக்கு வருகிறார்.
கருடசேவை அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். வாகனச் சேவையின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீவிரவாத செயல்களை முறியடிக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடந்து முடிய போலீசாரின் அறிவுரைகளை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 4-ல் உள்ள கட்டுப்பாட்டு அறை கூட்ட அரங்கில் பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டாக ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர் பங்கேற்று, இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும் அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருமலை 2-டவுன் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, என்ன மாதிரியான குற்றங்கள் நடக்கின்றன, குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்? என்பதைக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது திருமலை-திருப்பதி ேதவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, போக்குவரத்துப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், திருமலை-2 டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பிரமோற்சவ விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது.
இந்த ஆண்டு தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பிரம்மோற்சவ விழா தினங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரமோற்சவ விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பதியில் நடந்தது.
கூட்டத்தில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜிதேந்திரநாத் ரெட்டி பாஸ்கர் மற்றும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல மேலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதிக்கு 30 பஸ்களும், சென்னையில் இருந்து காளஹஸ்தி வழியாக 55 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 65 பஸ்களும் மற்றும் கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 10 சிறப்பு பஸ்களும், கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வழியாக 15 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து வேலூர் வழியாக 8 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 26 பஸ்களும், திருப்பத்தூர் வேலூர் வழியாக 10 பஸ்களும், புதுச்சேரி காஞ்சிபுரம் வழியாக 10 பஸ்கள் என 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- கடந்த மாதம் 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது.
22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.
கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது.
ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.
இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
- 20-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கும் விழா விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம், 11-ந்தேதி மகாளய பக்ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை, 26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.






