search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி
    X

    விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி

    • நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது.
    • அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர்.

    குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிகழ்ச்சி முடிந்த உடன் மதியம் 3.30 மணி அளவில் இதேபகுதியில் உள்ள அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.

    நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் காட்சி தந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மோகினி அவதாரத்தில் உலா

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி அளவில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 2 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார்.

    அதே கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.32 மணி அளவில் தனது இருப்பிடம் சென்று அடைகிறார்.

    Next Story
    ×