search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான்...! கே.எல். ராகுலை பாராட்டிய ரோகித் சர்மா
    X

    டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான்...! கே.எல். ராகுலை பாராட்டிய ரோகித் சர்மா

    • காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
    • விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.

    228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.

    நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.

    பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.

    எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.

    Next Story
    ×