தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல்.

Published On 2020-02-28 11:53 IST   |   Update On 2020-02-28 11:53:00 IST
பெரும்பாலான ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றதால், வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் திணறி வருகிறது.



தொலைதொடர்பு துறையின் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். முக்கிய பங்காற்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிறுவனத்துக்கென்று சுமார் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். 

பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ‘4ஜி’ அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டியது. அதே சமயத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உடனே அனுமதியை கொடுத்தது. 

இதனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கும் வாடிக்கையாளர் சேவைகளுக்கு நிகராக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் ஈடு கொடுக்க முடியாமல் போனது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.



இந்தநிலையில் கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கடந்த மாதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். இது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அதிகம் ஆகும். 

ஒரே நேரத்தில் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றாலும், சுமார் ஒரு மாதம் ஆகியும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கு தற்காலிக பணியாளர்களும் போதுமான அளவுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வழக்கமாக ஓரிரு நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் பழுது உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களை சரி செய்வதில் கடுமையான கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சில வாடிக்கையாளரின் புகார்கள் மாத கணக்கில் நிவர்த்தி செய்யப்படாமல், பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவதியடைந்து வருகின்றனர்.

Similar News