தொழில்நுட்பம்
பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கை விடுக்கும் ரிலையன்ஸ்
பொதுமக்கள் அந்த வலைதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரிலையன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவை சமீபத்தில் துவங்கப்பட்டது. துவங்கியது முதல் ஜியோமார்ட் பெயரை தழுவி பல்வேறு இணைய முகவரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஜியோமார்ட் பெயரில் பல்வேறு போலி தளங்கள் பயனர் விவரங்கள் மற்றும் பணத்தை அபகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் பெயரை தழுவி செயல்படும் போலி வலைதளங்கள் பற்றிய எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. விற்பனையாளர்கள் அல்லது ஃப்ரான்சைஸ் முறையிலான வியாபாரத்தை ஜியோமார்ட் இதுவரை அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இத்துடன் தனிநபரை ஃப்ரான்சைசியாக நியமிக்க எவ்வித கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஜியோமார்ட் பெயரில் செயல்படும் போலி வலைதளங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி சில போலி வலைதளங்களின் பெயர்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.
போலி வலைதளங்களில் டிரேட்மார்க் தவறாக பயன்படுத்துவது அப்பட்டமான உண்மை. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக ரிலையன்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதே தகவலை ரிலையன்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு இருக்கிறது.