தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட்

டிக்டாக்கை வாங்க பேச்சுவார்த்தை நடத்தும் மைக்ரோசாப்ட்

Published On 2020-08-03 06:52 GMT   |   Update On 2020-08-03 06:52 GMT
டிக்டாக் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். 

உலக அளவில் மிகவும் பிரபலமான குறு விடியோ  செயலியான டிக்டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டது.  இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டேன்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.



அதன்படி, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. 

எனினும், டிக்டாக்  செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட்-டேன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News