தொழில்நுட்பம்
கொரோனாவை கண்டறியும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சேவை
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை வழங்கும் புதிய சேவையினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் துவங்கி உள்ளன.
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சேவையை உருவாக்கி வந்தன. இந்த சேவை பயனர் அனுமதி இன்றி ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படாது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக இதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நோட்டிபிகேஷன்களை வழங்கும். இதனை க்ளிக் செய்ததும், கூகுள் வேறொரு செயலியை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய நோட்டிபிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பல்வேறு அரசாங்கங்கள் புதிய சேவைகள் மற்றும் செயலிகளை உருவாக்கி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்த குழுவில் இடம்பெறவில்லை.
இதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் கோவிட் 19 எக்ஸ்போஷன் அம்சத்தை ஐஒஎஸ் 13.5 பதிப்பில் கடந்த மாதம் சேர்த்தது. மேலும் ஐபோன்களிலும், இந்த சேவை ரகசியமாக இன்ஸ்டால் செய்யப்படவில்லை. இதனை பயனர்கள் அவர்களாகவே இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பொதுவாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்களை செயல்படுத்தி இருக்கின்றன. எனினும், இந்த அம்சம் வேறொரு செயலியை கொண்டே இயக்க முடியும்.