தொழில்நுட்பம்
கொரோனா பாதித்த இரு மாதத்தில் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய மார்க் ஜூக்கர்பர்க்
கொரோனா பாதிப்பு துவங்கிய முதல் இரு மாதங்களிலேயே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும், அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மற்றும் ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க் அதிக பலன் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் டெக் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால், அமெரிக்காவை சேர்ந்த சுமார் 600-க்கும் அதிக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பலர் வேலையை இழந்து, பொருளாதார மதிப்பு கடும் சரிவை கண்ட போதும், இவர்களின் சொத்து மதிப்பு மார்ச் 18 இல் துவங்கி மே 19 ஆம் தேதி-க்குள் ரூ. 32.97 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து தற்சமயம் அது ரூ. 11.21 லட்சம் கோடியாக இருக்கிறது. இதேபோன்று மார்க் ஜூக்கர்பர்க் சொத்து மதிப்பு 45 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து தற்சமயம் அது 6.07 லட்சம் கோடியாக இருக்கிறது.
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரது சொத்து மதிப்பு முறையே 8.2 சதவீதம் மற்றும் 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் பணக்காரர்கள் பட்டியல் அடங்கிய அறிக்கையை சார்ந்து மேற்கொள்ளப்பட்டது.