தொழில்நுட்பம்
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு - சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து சமூக வலைதள பயன்பாடு 87 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாமால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களிலேயே பொழுதை போக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு கடந்த வாரத்தை விட 87 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் சராசரியாக ஒருவர் 150 நிமிடங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் முதல் வாரத்தில் சராசரி பயன்பாடு சதவீதம் 280 நிமிடங்களாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை, பெங்களூர் மற்றும் சென்னையில் 1300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் பேர் இண்டர்நெட்டில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தேடிப்பார்ப்பதும், 76 சதவீதம் பேர் காலை 8 மணி முதல் 9 மணி வரை டி.வி. பார்ப்பதும், 89 சதவீதம் பேர் ரேடியோ கேட்பது மற்றும் இசை சம்பந்தமான செயலிகளில் பொழுதை போக்குவதாக தெரிவித்துள்ளனர்.