தொழில்நுட்பம்
ஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் புதிய ஐபோன் முன்பதிவு செய்தார், அவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தக தளத்தில் ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்தவருக்கு போலி ஐபோன் வழங்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியிருக்கிறது.
புதிய ஐபோன் 11 ப்ரோ வாங்க முடிவு செய்த பெங்களூரை சேர்ந்த ரஜனி காந்த் குஷ்வா ஸ்மார்ட்போனிற்கான முழு தொகையை (ரூ. 93,900) முன்கூட்டியே செலுத்தி இருக்கிறார். புதிய ஐபோன் விநியோகம் செய்யப்பட்ட காத்திருந்தவருக்கு ஐபோன் போன்றே காட்சியளிக்கும் சாதனம் விநியோகம் செய்யப்பட்டது.
விநியோக பார்சலில் ஐபோன் போன்று காட்சியளிக்கும் மொபைலை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த ரஜனி காந்த் அதனை இயக்க முற்பட்ட போது, புத்தம் புதிய விலை உயர்ந்த ஐபோனில் ஆண்ட்ராய்டு செயலிகள் இயங்குவதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தார்.
அதிர்ச்சியில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் தான் ஏமாற்றப்பட்டதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார் ரஜனி காந்த். ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரஜனி காந்த்-க்கு புதிய ஐபோன் வழங்குவதாக உறுதியளித்து இருக்கிறது.
ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் ஏமாற்றப்படும் சம்பவங்கள் நாடு முழுக்க அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.