தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பேமன்ட் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பேமன்ட் சேவைக்கான வெளியீடு இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வந்தது. குறிப்பாக இதுகுறித்த அனைத்து விவரங்களும் இந்திய சர்வெர்களில் சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தற்சமயம் இந்நிறுவனம் சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்த தகவல்களை வழங்க வாட்ஸ்அப் மறுத்துவிட்டது.
யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ்அப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது.
இந்தியா முழுக்க சுமார் 30 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேமன்ட் சேவைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேவையின் பயனர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.