தொழில்நுட்பம்

ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்த ஆப்பிள்

Published On 2019-03-30 05:56 GMT   |   Update On 2019-03-30 05:56 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower



ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

"கடும் முயற்சி செய்துவிட்டோம், ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்கிறோம். எங்களது தரத்திற்கு இணையாக ஏர்பவர் உருவாகவில்லை என்பதால், திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணை தலைவர் டான் ரிகியோ தெரிவித்தார். 

"ஏர்பவர் சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார். 

2017 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் சாதனம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்து சாதனத்தின் விளம்பர புகைப்படங்களையும் ஆப்பிள் வெளியிட்டு வந்தது. எனினும், சாதனத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்பவர் சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.



ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் பற்றிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவித்து வந்தது. ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி 2017 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆப்பிள் வாட்ச் மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாதனங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. முன்னதாக பலமுறை வன்பொருள் சாதனங்கள் விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை எடுத்திருக்கிறது.

ஐபோன் 4 மாடலின் ஆண்டெனா சரியாக வேலை செய்யாமல் போனது. சமீபத்தில் சில ஆப்பிள் லேப்டாப் மாடல்களில் கீபோர்டு சரிவரி இயங்காமல் போனதற்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது. 

வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மீது ஆப்பிள் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் வயர்லெஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஆப்பிள் முயற்சி தொடரும் என ரிகியோ தெரிவித்திருக்கிறார். 
Tags:    

Similar News